Sunday 11 February 2018

பாரதி: மரபும் திரிபும் – 9



October 9, 2012
- ம வெங்கடேசன்

ஈ.வே.ரா.வின் பக்தரும், துதிபாடியுமான வே.மதிமாறன் என்பவர் எழுப்பும் பாரதி குறித்த பொய் அவதூறுகளுக்கு திட்டவட்டமான மறுப்புரை இந்தத் தொடர்.



(தொடர்ச்சி…)

பயங்கரவாதத்தில் நம்பிக்கை கொண்டவரா பாரதி?

புரட்சித் தலைவன் லெனினை சாட்டையாலடித்துப் பாடம் கற்பிக்கிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் கவிஞர் சுப்பிரமணிய பாரதி:

“கொலையாலும் கொள்ளையாலும், அன்பையும் ஸமத்துவத்தையும் ஸ்தாபிக்கப் போகிறோம் என்று சொல்வோர் தம்மை தாம் உணராத பரம மூடர்கள் என்று நான் கருதுகிறேன்.‘இதற்கு நாம் என்ன செய்வோம்! கொலையாளிகளை அழிக்கக் கொலையைத் தானே கைக்கொள்ளும்படி நேருகிறது; அநியாயம் செய்வோரை அநியாயத்தாலேதான் அடக்கும்படி நேரிடுகிறது’ என்று ஸ்ரீமான் லெனின் சொல்லுகிறார். இது முற்றிலும் தவறான கொள்கை. கொலை, கொலையை வளர்க்குமே ஒழிய, அதை நீக்க வல்லதாகாது. அநியாயம் அநியாயத்தை விருத்திப் பண்ணுமேயொழிய குறைக்காது. பாவத்தை புண்ணியத்தாலேதான் வெல்ல வேண்டும். பாவத்தை பாவத்தால் வெல்லுவோம் என்பது அறியாதவர் கொள்கை.’’



பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை எதிர்த்து, இவ்வளவு வன்முறை கூடாது, ரத்தம் வேண்டாம் என்று அன்போடு ‘பாட்டாளி வர்க்க சரணாகதி தத்துவம்’ பேசுகிற இந்த கம்யூனிஸ்ட் கவிஞர், பங்காளி தகராறு, சூதாட்டம், பஞ்சபாண்டவர் – கவுரவர்களின் பொறுக்கித் தனங்களுக்காக நடந்த பாரத சண்டைக்கு பாண்டவர்களின் சார்பாக சங்கெடுத்து ஊதுகிறார் பாஞ்சாலி சபதத்தில்.

– துரியோதனின் தொடையைப் பிளப்பேன், துச்சாதனின் தோள்களைப் பிய்ப்பேன் என்று வீமன் செய்த சபதம், கர்ணனை போரில் மடிப்பேன், என்ற அர்ஜூனன் சபதம், துச்சாதன், துரியோதனின் ரத்தத்தில் குளித்து சீவிக் குழல் முடிப்பேன் என்ற பாஞ்சாலி சபதம் இவற்றை எடுத்துக்காட்டி எப்படி இருக்கிறது பார்த்தீர்களா நியாயம்? இதுதான் பாரதியின் பஞ்சாயத்து

— என்று விமர்சனம் செய்கிறார் மதிமாறன்.

¦ ¦ ¦

அதாவது லெனினின் வன்முறை தவறு என்று கூறுகிற பாரதி பாஞ்சாலி சபதத்தில் மூவரும் பேசுகிற வன்முறைப் பேச்சை ஆதரிக்கிறார். இது சரியா என்று கேட்கிறார் மதிமாறன்.

மதிமாறன் உள்பட நாம் எல்லோருமே தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் பாரதி எப்போதுமே வன்முறையை ஆதரித்தது இல்லை. சட்டப்படியான போராட்டங்களின் மூலமே எவற்றையும் செய்யவேண்டும் என்ற கொள்கை உடையவர் பாரதி.

1908-இலே பாரதி, ‘‘…..ஜனங்கள் சட்டத்தை உடைக்கவும், அதிகாரிகள் யந்திர பீரங்கிகளை வைத்துக்கொண்டு ஜனங்களைச் சூறையாடுவதும் நேருமென்ற ஸம்சமயத்துக்கிடமில்லாமல் வேலை செய்ய முடியும். ஏனைய முறைகள் நாட்டைக் குழப்பத்திலே கொண்டு சேர்க்கவும் கூடும். ராஜ வீதியிருக்கையிலே சந்துபொந்துகளின் வழியாக ஏன் செல்ல வேண்டும்? குழப்பம் சிறிதேனும் நேராத படிக்கே நமக்கே ஸ்வராஜ்யம் கிடைக்கும்படி…. தெய்வ சக்தியும் நமக்கனுகூலமாக இருப்பது வெளிப்படையாகவும் நிச்சயமாகவும் தெரியும்போது, பல இந்தியர்க்கும் பிராணச் சேதமும் மற்றப் பெருஞ்சேதங்களும் விளையக்கூடிய குழப்பவழியில் நாமேன் போக வேண்டும்?’’  என்கிறார். (பெ.தூரன், பாரதி தமிழ், பக்.315-316 / 420-421)



இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் பிரிட்டிஷ்காரரான ஸர் வில்லியம் லீ-வார்னரை கன்னத்தில் பளீர் பளீர் என்று அடித்துவிட்டார். அதற்கு பாரதி எழுதுகிறார்:

‘‘பிராமண வாலிபர் முற்கோபத்தால் செய்தது தப்பிதமென்பதில் ஆட்சேபமில்லை. இவர் சட்டப்படி கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்திருக்கக்கூடும்.’’ (இந்தியா 13-2-1909)

பிரிட்டிஷ்காரரை கன்னத்தில் அடித்ததைக்கூட பாரதியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

1909-ஆம் ஆண்டு ஜூலை முதல் தேதியில் லண்டனில் வைத்து சர் கர்ஸன் வில்லி மற்றும் டாக்டர் லால்காகா ஆகிய இருவரையும் சுட்டுக் கொன்ற விஷயத்தைப் பற்றி, அன்றுவரை லண்டன் இந்தியா ஹவுஸ்லிருந்து தொடர்ந்து பாண்டியிலுள்ள ‘இந்தியா’ பத்திரிகைக்குச் செய்தி அனுப்பி வைத்துக் கொண்டிருந்த வ.வே.சு.ஐயர் அதே மாத இறுதியில், ஸர் கர்ஸன் வில்லையைச் சுட்டுக் கொன்ற இந்திய இளைஞரான மதன்லால் திங்காராவையும் அவரது இச்செயலையும் ஆதரித்து கட்டுரை யொன்றினை எழுதி ‘இந்தியா’ இதழில் வெளியிடுமாறு அனுப்பிய நிலையில், அக்கட்டுரையினை இந்தியா இதழில் வெளியிடுவதில் தவறில்லை; திங்காராவின் இச்செயலினை நாம் பாராட்டிக் கட்டுரை வெளியிடலாம் என சீனிவாசாச்சாரி மற்றும் லட்சுமி நாராயண ஐயர் போன்றோர்கள் முடிவெடுத்ததும், இதழின் பொறுப்பாசிரியரான பாரதி, இந்தக் கொலைச் செயலினை தான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும், ஆங்கிலேயர்களைக் கொன்று அதன் மூலம் சுதேசியத்தைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைத்து தேசியவாதத்தை வளர்ப்பது என்பதில் தனக்குச் சிறிதும் உடன்பாடில்லை என்ற ஒரே முடிவுடன் இருந்ததால் ‘இந்தியா’ அலுவலகத்திலிருந்து வெளியேறியதுடன் ஜூலை முதல் செப்டம்பர் வரை ஆகிய மூன்று மாதங்கள் ‘இந்தியா’ பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து வெளியேறிவிட்டார்.

பாரதி கர்ஸன் வில்லி கொலையினைக் கேள்விப்பட்டதும், 1909-ஆம் ஆண்டு ஜூலை 10-ஆம் நாள் ‘இந்தியா’ இதழில் தனது கோபத்தைக் கீழ்க்கண்டவாறு வெளிப்படுத்தினார் :

“…இப்படிப்பட்ட கொலையினால் ஒரு ஜாதியாரின் அபீஷ்டம் நிறைவேறிவிடும் என்று நினைக்கிற மூடர்கள் ஒரு கக்ஷியிலும் இல்லை. எவனோ ஒருவன் கொலை செய்துவிட்டால், அதைக் கொண்டு ஒரு கக்ஷியார் மற்றொரு கக்ஷியாரைப் பழிப்பது நலமாய்த் தோன்றவில்லை. வீண்துவேஷமே அதிகரிக்கின்றது. ஒற்றுமை வேண்டுமென்கிறவர்கள், வேற்றுமைக்காகப் பாடுபடுவார்களா?’’



வங்காளத்தின் ரகசியச் சங்கத்தின் சார்பாக சந்திரகாந்த சக்கரவர்த்தி என்பார் 1908-ஆம் ஆண்டு பாரதி சென்னையிலிருந்த வேளையில் பயங்கர சதித்திட்டங்களை ‘சென்னை ஜனசங்கம்’ ஏற்று நடத்தி பல ஆங்கிலேய அமைப்புகளையும், அம்மனிதர்களையும் நாசம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டபோதும் மறுப்பு தெரிவித்தும், இதே கருத்தினை அவர் வ.உ.சி. மூலமாக பாரதியை சமாதானப்படுத்தி நிறைவேற்ற நினைத்தபோது, பாரதி வ.உ.சி.யிடம் அத்திட்டத்தை ‘mad project’ எனக் கண்டித்துள்ளார்.

வீரவாஞ்சிநாதன் பிரிட்டிஷ்காரரான ஆஷை மணியாச்சி இரயில் நிலையத்தில் சுட்டுக்கொன்றார். இந்த பயங்கரவாதச் செயலையும் பாரதி ஏற்றுக்கொள்ளவில்லை. பாரதிக்கு இக்கொலை விஷயம் ஜீரணிக்கக் கூடியதாகத் தெரியவில்லை. ஏனெனில் வாஞ்சிநாதன் சில மாதங்களுக்கு முன் பாண்டிச்சேரி வந்தபோது தன்னையும், சீனிவாசாச்சாரி மற்றும் இதர சுதேசிகளையும் கண்டு அலாவளாவி விட்டுச் சென்றபோதும், இம்மாதிரியான திட்டத்தைப் பற்றியோ அல்லது இதன் நிழல்திட்டத்தைப் பற்றியோ தங்களிடம் கலந்து பேசாதபோது, இம்மாதிரியான செயலினைச் செய்வதற்கு வாஞ்சிக்கு யார் தைரியம் கொடுத்து ஊக்கப்படுத்தியிருப்பார்கள் என்று பாரதி வினவிக்கொண்டிருந்தார். ஜூன் மாத இறுதிவரை பாரதி இக்கொலைச் செயலைக் கண்டு அனைவரிடமும் தனது வருத்தத்தையும் கோபத்தையும் எடுத்துரைத்திருக்கிறார் (நூல் : பாரதிக்குத் தடை)



ஆஷ் கொலைச் செய்தியைப் பற்றி தன்னுடைய கருத்தை சென்னை மாகாணத்தில் அரசியல் வளர்ச்சி என்ற கட்டுரையில் வெளியிட்டுள்ளார் பாரதி.

“இதை எதிர்பாராத நிகழ்ச்சி (அல்லது இதை ஒரு விபத்து) என்று நான் சொல்வேன். இதற்கு முன் நமது மாகாணத்தில் இதுபோல் என்றும் நடந்ததில்லை. இந்தியாவின் தென்மாவட்டத்தின் கடைசியிலுள்ள மணியாச்சி ரயில் நிலையத்தில் வைத்து, திருநெல்வேலி மாவட்டக் கலெக்டர் திரு.ஆஷ், வாஞ்சி ஐயர் என்ற இந்தியனால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனது அரசியல் விளைவுகளை அறியாது நடத்தப்பட்ட ஒரு பயங்கரமான படுகொலை! மனிதாபிமானம் மற்றும் சமுதாய நிகழ்வுகளுக்கு அப்பாற்பட்டது….. இது இந்து சமயத்திற்கு இழைக்கப்பட்டதொரு பரிதாபம், கொல்லப்பட்ட அம்மனிதனுக்கு அவனது மனைவி மட்டுமேயிருக்கிறாள்…. இச்செய்கை இந்த பக்தனின் இதயத்திற்கு ஒரு வேண்டுகோளை அனுப்புகிறது…. அன்புகொண்டு இணைபிரியாது, பிறரது பார்வைகளுக்கு அழகாகத் தோற்றமளித்துக் கொண்டிருந்தவர்கள் இன்று பரிதாபமாகப் பிரிந்து சோகத்தில் தள்ளப்பட்டுள்ளார்.. ஆஷ்துரையை சுட்டுவிட்டு ஒரு சில நிமிடங்களுக்குப் பின் தன்னைக் கைது செய்ய வந்தவர்களைக் கண்டு பயப்படாமல், தன்னைத்தானே சுட்டுக் கொன்ற நிகழ்ச்சியும் சென்னை மாகாணத்தில் இன்றுவரை நடந்தேறவில்லை. சென்னை மாகாணத்தில் பயங்கரவாத இயக்கம் தற்போதுதான் பிறந்திருக்கிறது. பொதுவாழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சிலருக்கு வாஞ்சியின் தற்கொலை எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தும்…. இதனால் வாஞ்சி ஐயருக்கும் பின்னால் யார்யார் உள்ளனர் என்ற சுவடுகள் இல்லாமலே போய்விட்டது. சிலரை கைது செய்துள்ளனர். அது அவசியமே….’’

–என்று வாஞ்சிநாதன் செய்தது தவறு என்று கூறுகிறார்.



ஸ்பெயினில் ராஜாவின் விவாக சமயத்தில் நடந்த வெடிகுண்டு சம்பவத்தைப் பற்றி பாரதி எழுதுகிறபோது,

‘ ….இவர்களுடைய நினைப்பு ஒருவேளை நியாயமாயிருந்த போதிலும் இவர்களது செய்கை மாதிரி மிகவும் மிருகத்தனமான தென்பதில் தடையில்லை. இவர்களுடைய மனக்குறையை நீக்கிக் கொள்ளத் தகுதியான மார்க்கம் யாதென்பதைப் பற்றி இன்னொரு முறை எழுதுகிறேன்.’

என்று எழுதுகிறார். இக்கட்டுரை பயங்கரவாதத்தை எதிர்த்து எழுதப்பட்டது.



நாம் எப்படிப் போராட வேண்டும்? பயங்கரவாத  வழியிலா அல்லது சட்டம் சார்ந்த போராட்டங்கள் வழியிலா என்பதில் பாரதியின் எண்ணம் எது என்பது தெரியவேண்டுமானால் வ.உ.சிக்கும், யதிராஜுக்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் ஏற்பட்ட தொல்லைகளைக் குறிப்பிட்டு எழுதிய கட்டுரையிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

பாரதி எழுதுகிறார் :

“எளியவன் மனைவி யாருக்கும் மைத்துனி. நமது ஜனத் தலைவர்களாகிய ஸ்ரீ சிதம்பரம் பிள்ளை போன்றவர்களையும் தேசாபிமானிகளாகிய யதிராஜ் போன்றவர்களையும் அவர்கள் எப்படி வதைத்தாலும் நமது பக்கத்தவர்கள் பொறுத்துக் கொண்டிருப்பார்களென்று கண்டுபிடித்து விட்டார்கள். கூக்குரலேனும் போடக்கூடாதா? பொதுக்கூட்டங்கள் கூடலாகாதா? ஹா! என்ன மானமற்ற ஜாதியாகிவிட்டோம்?” (இந்தியா 22-5-1909)

பாரதி போற்றி மதிக்கின்ற வ.உ.சி.யை பிரிட்டிஷ் அரசாங்கம் பயங்கரவாத வழியைக் கைக்கொண்டு வதைத்தாலும் பிரிட்டிஷ்காரரை திருப்பி அடி, கொலை செய், வெடிகுண்டு வீசு என்றெல்லாம் கூறவில்லை. இந்தியருக்காகக் குரலெழுப்பு; போராட்டங்கள் செய்; பொதுக்கூட்டங்கள் கூட்டு; போராடு; போராடு என்பதே பாரதியின் தீவிர எண்ணம். ஒருபோதும் பயங்கரவாதத்தில் பாரதிக்கு நம்பிக்கை இருந்தது இல்லை.  இதுதான் பாரதியின் போராட்ட வழிமுறை. பாரதியின் வாழ்க்கை முழுவதுமே போராட்டங்களால் சூழப்பட்டிருப்பினும் அவர் பயங்கரவாதத்தை எப்போதுமே ஆதரித்ததில்லை.



பாரதி கூறுகிறார்:

“இங்கிலாந்து, பிரான்ஸ் முதலிய ஐரோப்பிய தேசங்களில் கோடானுகோடியாக மனிதரைத் திரட்டிச்  சண்டைக்கு உபயோகப்படுத்துகிறார்கள். ஒருதேச முழுதுமே ஒரு சைநியம்போல் ஆகும்படி செய்யவேண்டும் என்று அங்குள்ள சில தலைவர்கள் நினைக்கிறார்கள். நான் சண்டைக்காரனில்லை; ஸமாதானக்காரன்.” (சுதேசமித்திரன் 20-7-1917)

தன்னை மதிப்பிடுவதும் சமாதானக்காரனாகவே. வாழ்க நீ எம்மான் என்ற பாடலில் பாரதி காந்திஜியின் அகிம்சை வழிக்காகவே பாராட்டுகிறார்:

பெருங்கொலை வழியாம் போர்வழி இகழ்ந்தாய்
     அதனிலுந் திறன்பெரி துடைத்தாம்
அருங்கலை வாணர் மெய்த்தொண்டர் தங்கள்    
     அறவழி யென்றுநீ அறிந்தாய்;
நெருங்கிய பயன்சேர் ‘ஒத்துழையாமை
     நெறியினால் இந்தியாவிற்கு
வருங்கதிகண்டு பகைத்தொழில் மறந்து
     வையகம் வாழ்கநல் லறத்தே!

காந்தியின் ஒத்துழையாமையை முதலில் ஏற்க மறுத்த பாரதி அதனுடைய வலிமையைப் பார்த்தபின் அதை ஏற்றுக் கொள்கிறார். ஆகவே பாரதி பயங்கரவாதத்தை எப்போதுமே ஏற்றுக்கொள்ள வில்லை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

மரத்துப்போனவனுக்கு உணர்ச்சி வராது. உணர்ச்சி இல்லாததினால் அவனால் வெள்ளையனை எதிர்த்துப் போராட முடியாது. அதனால்தான் உணர்ச்சி எழக்கூடிய கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதினார். அப்போதுதான் உணர்ச்சியின் உந்துதலால் அவன் சுதந்திரத்திற்காகப் பாடுபடுவான். தன் கவிதைகளிலும் கட்டுரைகளிலும் எங்கும் வெள்ளைக்காரனை அடி, கொலை செய், வெடிகுண்டு வீசு என்ற பொருளிலும்கூட கையாண்டதில்லை. பாரதி நினைத்ததெல்லாம் இந்தியருக்கு சுய உணர்ச்சி வரவேண்டும். அவ்வாறு வந்தால் மட்டுமே அவன் தன்னுடைய சுதந்திரத்திற்காகப் போராடுவான் என்பதுதான்.

பாஞ்சாலி சபதத்தில் மூவரும் செய்கின்ற சபதத்தைப் பார்க்கும் எவருக்கும் கொலையை ஆதரிக்கிறாரே பாரதி என்ற எண்ணம் தோன்றும். பாஞ்சாலி சபதம் வியாச முனிவரது மூலத்தைக் கொண்டு பாரதி படைத்திருக்கிறார்.

பாரதி கூறுகிறார் :

“எனது சித்திரம் வியாச பாரதக் கருத்தைத் தழுவியது. பெரும்பான்மையாக, இந்நூலை வியாச பாரதத்தின் மொழிபெயர்ப்பென்றே கருதிவிடலாம். அதாவது, ‘கற்பனை’ திருஷ்டாந்தங்களில் எனது ‘சொந்தச் சரக்கு’ அதிகமில்லை. தமிழ்நாட்டுக்கு மட்டுமே நான் பொறுப்பாளி”

என்று பாரதி முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். ஆகவே வியாச பாரதத்தில் என்ன இருக்கிறதோ அதை அப்படியே மொழிபெயர்த்திருக்கிறார் பாரதி. இந்தச் சபதம் பாரதியின் கற்பனையில் உருவான சபதம் இல்லை. இந்தச் சபதத்தை பாரதி வியாச பாரதத்தில் இல்லாமல் இருந்து பாரதியே இதைச் சேர்த்து எழுதியிருந்தால் ஒருவேளை பாரதி கொலைவழியினை ஆதரிக்கிறார் என்று சொல்லலாம். ஆனால் அது மொழிபெயர்ப்பே என்று பாரதி சொல்கிறார்.

பாரதி மீது சேற்றைவாரி வீச மதிமாறன் என்னதான் குட்டிக்கரணம் அடித்தாலும் சேறு மதிமாறன்மீதுதான் படுமே ஒழிய பாரதிமீது விழாது. பாரதியை விமர்சிக்க மதிமாறன் இன்னும் பாரதியைப் பயில வேண்டும். அப்படிப் பயிலும்போது பாரதியை எதிர்மறையாக விமர்சிக்கும் எண்ணம் அவருக்குத் தோன்றாது.

 (தொடரும்…)

No comments:

Post a Comment

ஸ்ரீமத் பாகவதம் (தமிழ்)

  Srimad-Bhagavatam  1 Srimad-Bhagavatam   2 Srimad-Bhagavatam   3 Srimad-Bhagavatam    4 Srimad-Bhagavatam   5 Srimad-Bhagavatam   6 Srimad...