Sunday 11 February 2018

பாரதி: மரபும் திரிபும் – 4



May 18, 2012
- ம வெங்கடேசன்



ஈ.வே.ரா.வின் பக்தரும், துதிபாடியுமான வே.மதிமாறன் என்பவர் எழுப்பும் பாரதி குறித்த பொய் அவதூறுகளுக்கு திட்டவட்டமான மறுப்புரை இந்தத் தொடர்.

(தொடர்ச்சி…)

பாரதியின் சிவனும் – திருவள்ளுவரும்

அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

என்று தொடங்கிய திருவள்ளுவர், தன்னுடைய 1330 குறள்களிலும் கடைசிவரை ஆதிபகவன் யார் என்று சொல்லாமலேயே விட்டு விட்டார். இது, சுப்பிரமணிய பாரதிக்கு பெரிய தொந்தரவாகவே இருந்திருக்கிறது. அந்தக் கடுப்பு தாங்காமல், எடுத்திருக்கிறார் எழுதுகோலை – வடித்திருக்கிறார் பாடலை. ஆதிபகவன் யாரென்றும், தன்னுடைய சிறப்புகள் எதனால் என்றும் தமிழ்த்தாயே ஒப்புதல் வாக்குமூலம் தருவதுபோல் எழுதி அடைத்தார் தமிழர்களின் வாயை.

‘ஆதிசிவன் பெற்றுவிட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை
மேவும் இலக் கணஞ் செய்து கொடுத்தான்

மூன்று குலத்தமிழ் மன்னர் – என்னை
மூண்ட நல் லன்பொடு நித்தம் வளர்த்தார்
ஆன்ற மொழிகளி னுள்ளே – உயர்
ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்’

இதில் மொத்தம் மூன்று ஆப்புகளை தமிழர்களுக்கு அடித்திருக்கிறார் சுப்பிரமணியார்.

1. வள்ளுவர் சொன்ன ஆதிபகவன் சிவன் என்று அறிவிக்கிறார். (பார்ப்பனரில் பாரதி அய்யர் பிரிவைச் சேர்ந்தவர். அய்யருக்கு சிவனே எல்லாம்)

2. தமிழுக்கு இலக்கணம் செய்தவர் அகத்தியர் என்று சொல்லப்படுவதைப் பயன்படுத்தி, அகத்தியர் ஒரு பார்ப்பனர் என்று அவருக்குப் பூணூல் அணிவிக்கிறார்.

3. நன்றாக செய்யப்பட்டதாக தன் பெயரிலேயே சொல்லிக் கொள்கிற (ஸம் என்றால் நன்றாக, ‘கிருதம்’ என்றால் செய்யப்பட்டது) ஸம்ஸ்கிருதத்திலிருந்தே, தமிழ் தயாரிக்கப்பட்டதாக, ஒட்டு மொத்தமாக சேர்த்து வைத்து ஆணியடிக்கிறார்.

மதிமாறனின் விமர்சனம் இது.

முதலில் இந்த கவிதையின் கருத்தை உரைநடையில் பார்ப்போம். தமிழ்த்தாய் தன்னைப் பற்றி சொல்வதாக இந்த கவிதையை அமைத்திருக்கிறார் பாரதி. ஆதிசிவன் (ஆதியில் சிவன்) தமிழாகிய என்னை படைத்தான். பெருமைமிக்க வேதியரான அகத்தியன் என்னை கண்டு, மகிழ்ந்து இலக்கணம் செய்து கொடுத்தான். மூன்று குலத் தமிழ் மன்னர்கள் தமிழாகிய என்னை நல்ல அன்போடு வளர்த்தனர். மொழிகள் பலவற்றுள் உயர்ந்த மொழியாகிய ஆரிய மொழிக்கு நிகரென (சமமான நிலையில்) வாழ்ந்தேன். இதுதான் அதனுடைய பொருள்.

1. வள்ளுவர் சொன்ன ஆதிபகவன் ‘சிவன்’ என்று, பாரதி இந்த கவிதையில் எங்கே அறிவிக்கின்றார் ?

அதாவது வள்ளுவர் ஆதி என்ற வார்த்தையை பயன்படுத்தி யிருக்கிறார். பாரதியும் ஆதி என்று பயன்படுத்தியிருக்கிறார். இது போதாதா மதிமாறனுக்கு? உடனே மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறார். மதியுள்ள மாறன் அல்லவா – அவர் முடிச்சு போடலாம். இறைவனான சிவன் தமிழையும் வடமொழியையும் கொடுத்தான் என்பதும் மரபுவழிச் செய்தி –

‘வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கு இணையா,
தொடர்புடைய தென்மொழியை உலகமெலாம் தொழுதேத்தும்
குடமுனிக்கு வகுத்தருளும் கொல்லேற்றுப் பாகர்’

என்கிறது காஞ்சிப் புராணம். அதாவது சிவனே தமிழை அருளினார் என்பது மரபுவழிச்செய்தி.

அதுமட்டுமல்ல, முதற்சங்கத்துக்கு தலைவனாக இருந்தவன் சிவனே என்கிறது இன்னொரு செய்தி.

‘‘இடைச்சங்கமும் மற்றை இரண்டு சங்கங்களும் இருந்த இடமுதலியவற்றைப் பின்வரும் ஆசிரியப்பாவானும் உணர்க.

‘வேங்கடக்குமரி தீம்புனற் பௌவத்
திந்நான் கெல்லையி னிருந்தமிழ் பயின்ற,
செந்நாப் புலவர் செய்தியீன் டுரைப்பின்
ஆடகக் குடுமி மாடக் கூடலின்,
முன்னர்ச் சங்கக் கன்மாப் பலகையில்,
திரிபுரமெரித்த விரிசடைக் கடவுள்,
மன்றன் மரார்தார்க் குன்றெறி யிளஞ்சேய்,
திண்டிறற் புலமைக் குண்டிகைக் குறுமுனி….’

– இச்செய்யுள் பாண்டி நாட்டிலுள்ள செவ்வூர்ச் சிற்றம்பலக் கவிராயவரவர்கள் வீட்டிலிருந்த பழைய ஏட்டுப் புத்தகமொன்றில் எழுதப்பட்டிருந்ததாக ‘இளங்கோவடிகளருளிச் செய்த சிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும் அடியார் நல்லாருரையும்’ என்ற நூலில் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் கூறுகிறார்.

சிவனின் உடுக்கையிலிருந்துதான் தமிழ், வடமொழி வெளிவந்ததாக மரபுவழிச் செய்தி ஒன்று உண்டு. இம்மாதிரியான செய்திகளை உள்வாங்கிக்கொள்கிற பாரதி அதை அப்படியே வெளிப்படுத்துகிறான். ஏனென்றால் இறைவனே படைத்தான் என்கிறபோது அதற்கு மதிப்பு அதிகம்தானே. அதனாலேயே இந்த மரபுவழி செய்திகளை ஏற்றுக்கொள்கிறான், அதை அப்படியே வழிமொழிகிறான்.

‘பாரதி அய்யர் பிரிவைச் சேர்ந்தவர். அய்யருக்கு சிவனே எல்லாம். அதனால் பாரதி தமிழை சிவன் தான் பெற்றான் என்று அறிவிக்கிறார்’ என்று மதிமாறன் உள்நோக்கம் கற்பிக்கின்றார். ஐயா மதிமாறன் அவர்களே! ஏதாவது எழுத வேண்டும் என்று எழுதாதீர்கள். கொஞ்சமாவது படித்துவிட்டு எழுதுங்கள். பாரதி ஐயர் என்று தமிழகத்தில் அழைக்கப் படும் ஸ்மார்த்தர் பிரிவைச் சார்ந்தவர் தான். ஆனால் ஸ்மார்த்தர்களுக்கு சிவன் மட்டுமல்ல, சக்தி, விஷ்ணு, சூரியன், கணபதி, குமாரன் ஆகிய கடவுளர்களும் முக்கியம்தான். ஸ்மார்த்தர்கள் இன்றும் பஞ்சாயதன பூஜை என்ற ஒருவகை வழிபாட்டை அவரவர் இல்லங்களிலும் பொதுநிகழ்ச்சிகளிலும் நிகழ்த்தி வருகின்றனர். இந்த பஞ்சாயதன பூஜை என்பது சிவன், சக்தி, விஷ்ணு, சூரியன், கணபதி ஆகிய கடவுளர்களை பிரதிஷ்டை செய்து அவர்களுக்குரிய மந்திரங்களை உச்சரித்து வழிபடுவதாகும்.

2. பாரதி அகத்தியருக்கு பூணூல் அணிவிக்கிறாராம். அகத்தியர் வேதியர், முனிவர் என்பதும் வழிவழியாகத் தமிழ் மரபில் வரும் மரபான செய்தி; புராணங்கள் கூறும் செய்தி. அக்காலத்தில் மரபுச்செய்தி, செவிவழிச்செய்தி, புராணச்செய்தி, வரலாற்றுச் செய்திகளையெல்லாம் தொகுத்து ‘அபிதான சிந்தாமணி’ நூல் உருவாக்கப்பட்டது. அந்நூல் 1910ல் வெளிவந்தது. அந்நூலில் அகத்தியர் ஒரு வேதியர் என்றே குறிப்பிடப் பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் அகத்தியர் பாண்டிய மன்னர்களுக்கு புரோகிதராக விளங்குகினவர் என்று பாண்டிய சாசனங்களால் அறியலாம். ராஜசிம்மப் பாண்டியனின் சின்னமனூர் (பெரிய) சாசனம் கல்வெட்டு குறிப்பிடுவதாவது :

‘பொருவருஞ்சீர் அகத்தியனைப் புரோகிதனாகப் பெற்றது’

பராந்தக வீரநாராயண பாண்டியனின் தளவாய்புரம் செப்பேடு பகர்கிறது :

‘….விஞ்சத்தின் விஜம்பனையும் பெறல் நகுஷன் மதவிலாசமும்
வஞ்சத் தொழில் வாதாவி சீராவியும் மகோததிகளின் சுருங்காத
பெருந்தன்மையும் சுகேது சுதை சுந்தரதையும் ஒருங்கு முன்னால்
மடிவித்த சிறுமேனி உயர்தவத்தோன் மடல் அவிழ் பூ மலையத்து
மாமுனி புரோசிதன்னாக….’

(நூல் ஆதாரம்: பாண்டியன் செப்பேடுகள் பத்து, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்)

இப்படி பல்வேறு செய்திகள் தமிழ் இலக்கணம் செய்த அகத்தியரை வேதியர் என்றே குறிப்பிடுகிறது. மரபுவழிச் செய்திகளையும், புராணச் செய்திகளையும் அறிந்த பாரதி அதை வழிமொழிகிறார். அவ்வளவுதான்.

*********

திருவள்ளுவர், ஔவையார் போன்றவர்களின் அறிவை வானுயரப் புகழும் பாரதி – அவர்களின் திறமைக்கான காரணத்தையும் மறைமுகமாகச் சுட்டிக் காட்டுகிறார்.

‘பகவான் என்ற பிராமணனுக்கும் ஆதி என்ற பறைச்சிக்கும் ஒளவை, திருவள்ளுவர், கபிலர், பரணர், உப்பை, உறுவை, வள்ளி என்ற குழந்தைகள் பிறந்து உபய குலத்துக்கும் நீங்காத கீர்த்தி ஏற்படுத்தியதை இக்காலத்திலும் பறையர் மறந்து போகவில்லை.’

பகவனுக்கும், ஆதிக்கும் நடந்த கலப்புத் திருமணத்திற்கு சாட்சிக் கையெழுத்துப் போட்டவர் மாதிரி ஆணித்தரமாகப் பொய் சொல்லுகிறார் பாரதி. இந்த பிரம்மாண்ட பொய்யில் இரண்டு பொய்களை மிக கவனமாகச் சொல்கிறார்.

1. பார்ப்பனருக்குப் பிறந்ததினால்தான் திருவள்ளுவருக்கும், அவ்வையாருக்கும் இவ்வளவு அறிவு.

2. பார்ப்பனர்களுக்கும் – தாழ்த்தப்பட்டவர்களுக்கும் வரலாற்று ரீதியான உறவை கற்பிக்கும் முயற்சி.

என்று வே.மதிமாறன் பாரதி மீது விமர்சனம் வைக்கிறார்.

பாரதி கூறியிருக்கின்ற திருவள்ளுவர் வரலாறு பாரதி தாமே எழுதிய வரலாறு அல்ல. பாரதியாருக்கு முன்பே புலவர் புராணத்திலும், கபிலர் அகவலிலும் இவ்வரலாறு இருக்கிறது. அக்காலத்திலிருந்து தொடர்ச்சியாக வந்துகொண்டிருந்த மரபுவழி செய்திகளையும், செவி வழிசெய்திகளையும் தொகுத்து வெளியிடப்பட்ட அபிதான சிந்தாமணியில் இவ்வாறு கூறப்படுகிறது:-

‘திருவள்ளுவர் – இவருக்குத் தந்தை யாளிதத்தன் எனும் வேதியன் என்பது பழைய நூல்.’யாளிகூவற் றூண்டு மாதப் புலைச்சி காதற்காசனியாகி மேதினி, யின்னிசை யெழுவர்ப் பயந்தன ளீண்டே’எனும் ஞானாமிர்தத்தாலறிக’

அதுமட்டுமல்லாமல் பொ.வேல்சாமி அவர்களும் கவிதாசரண் இதழில் இதற்கான மிகத் தெளிவான விளக்கத்தை அளித்திருக்கிறார். அவர் கூறுகிறார் :

‘திருவள்ளுவரைப் பற்றிய இந்தச் செய்தி கபிலர் அகவல் என்ற நூலில் தொடங்கி, 1859ல் முதன்முதலாக வெளிவந்த தமிழ்ப்புலவர் வரலாறு கூறும் ‘தமிழ் புளுடார்க்’ நூலின் இதன் ஆசிரியர் சைமன், காசிச்செட்டியால் திருவள்ளுவர் வரலாற்றில் குறிப்பிடுகின்றது. பின்னர் 1886இல் இலங்கை சதாசிவம் பிள்ளை எழுதிய ‘பாவலர்’ ‘சரித்திர தீபிகம்’ அல்லது The Galaxy of Tamil Poets என்ற நூலிலும், டாக்டர் தெ.பொ.மீ.யின் ஆசிரியரான கோ.வடிவேலு செட்டியார் 1904இல் வெளியிட்ட ‘திருக்குறள் பரிமேலழகர் உரை: அதன் விளக்கம்’ நூலிலும், அந்த நூல் பின்னர் 1918இல் மறுபதிப்பு வந்த போதும், 1972ல் மதுரை பல்கலைக் கழகம் மூன்றாம் பதிப்பு வெளியிட்ட போதும் இதே வரலாறு குறிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட திருக்குறள் பதிப்புகள் அனைத்திலும் இச்செய்தி இடம் பெற்றுள்ளது.

இதனை பாரதிதான் உருவாக்கினார் என்று கூறுவது, இந்த வரலாறு மதிமாறனுக்குத் தெரியாததனால் ஏற்பட்ட அறியாமையா? இல்லை தெரிந்தும் படிப்பவனுக்கு எதுவும் தெரியாது என்ற மமதையா?’

என்று மிக ஆராய்ச்சியோடு பதில் தருகிறார்.

மதிமாறனுக்கு அந்த ஆராய்ச்சி எல்லாம் தேவையா என்ன? சேற்றை வாரி வீச வேண்டும். அவ்வளவுதான். நம்முடைய கேள்வி என்னவென்றால் பார்ப்பனருக்குப் பிறந்ததினால்தான் திருவள்ளுவருக்கும், அவ்வையாருக்கும் இவ்வளவு அறிவு என்று பாரதி எங்கே கூறுகிறார்? இதை படிக்கும் வாசகர்கள்தான் சொல்ல வேண்டும்.

பார்ப்பன ஆணுக்கும் தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கும் பிறந்ததால்தான் திருவள்ளுவர், ஒளவையார் போன்றோர் அறிவு பெற்றார்கள் என்பது பாரதியின் கருத்தாக (உண்மையில் அப்படியில்லை) மதிமாறன் முன்வைக்கும் வாதம். அதுமட்டுமல்லாமல் கீழ்க்கண்டவாறு மதிமாறன் சொல்கிறார் :

‘…இந்தப் புரட்சிகரமான பொய் முயற்சியில், பகவன் என்ற பிராமணன், ஆதி என்ற பறைச்சி என்றுதான் சொல்கிறார். பகவன் என்ற ஆணை தாழ்த்தப்பட்டவராகவும், ஆதி என்ற பெண்ணைப் பார்ப்பனராகவும் கற்பனை செய்து பார்ப்பதற்குக்கூட பாரதிக்குத் துணிச்சல் இல்லை’ (‘பாரதிய ஜனதா பார்ட்டி’, பக்.101).

மதிமாறனின் கருத்தாக நாம் இப்படி இதைப் புரிந்துகொள்ளலாம். தாழ்த்தப்பட்ட ஆணுக்கும், பார்ப்பனப் பெண்ணுக்கும் பிறந்ததால் திருவள்ளுவர், ஒளவையார் போன்றோர் அறிவு பெற்றார்கள். இப்படி பாரதி சொல்லவில்லையே ஏன்? இதுதான் மதிமாறனின் கேள்வி.

அந்தக் காலகட்டத்தில் இந்த மரபுவழிச் செய்தியை யாரும் மதிமாறன் போல சாதியுடன் முடிச்சுப் போட்டு பார்க்கவில்லை. பிராமணனுக்குப் பிறந்ததால்தான் திருவள்ளுவருக்கு அறிவு இருந்தது என்பது மாதிரியான கேனத்தனமான எண்ணம் உடையவர்களாக அப்போது யாரும் இல்லை. அதனாலேயே அதற்கு எதிரிடையாக யாரும் சிந்திக்கவில்லை. பாரதியும் சிந்திக்கவில்லை. இதற்கு ஒரு சிறந்த உதாரணம் சென்னை கபாலீஸ்வரர் திருக்கோயிலில் அறுபத்துமூவர் திருவிழா வருடா வருடம் நடக்கிறது. அதில் நாயன்மார்களுக்கு இணையாக திருவள்ளுவரையும் வைத்து அவரையும் ஒரு நாயன்மாராக – தெய்வத்திருவுருவாக – திருவள்ளுவ நாயனாராக இன்றும் வழிபட்டு வருகின்றனர் தமிழக மக்கள். திருவள்ளுவரை குறிப்பிடும்பொழுது எல்லோரும் வழிபடக்கூடிய நாயன்மார்களுக்கு இணையாக திருவள்ளுவரை வைத்து பாரதி ‘திருவள்ளுவ நாயனார்’ என்றே குறிப்பிடுகிறார் தம் கட்டுரைகளில். வள்ளுவரை பல இடங்களில் குறிப்பிடுகிற பாரதி சிறப்பான அடைமொழி கொடுத்தே குறிப்பிடுகிறார் என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும். ஏனென்றால் திருவள்ளுவரின் அறிவை சாதியுடன் முடிச்சுப் போட்டு பார்க்கிற வக்கிர எண்ணம் பாரதிக்கு இல்லை.

எனக்கு ஒரு கேள்வி இங்கு எழுகிறது.

பகவன் என்ற ஆணை தாழ்த்தப் பட்டவராகவும், ஆதி என்ற பெண்ணைப் பார்ப்பனராகவும் கற்பனை செய்து பார்த்தாலும் கூட -‘பார்ப்பனர்களுக்கும் – தாழ்த்தப்பட்டவர்களுக்கும் வரலாற்று ரீதியான உறவை கற்பிக்கும் முயற்சி’ தான் என்று மதிமாறன்கேட்ட அதே கேள்வி எழாதா? இந்த கேள்வி எழுந்தால் மதிமாறன் என்ன பதில் சொல்வார்? பார்ப்பனத்திக்குப் பிறந்ததினால்தான் திருவள்ளுவருக்கும், அவ்வையாருக்கும் இவ்வளவு அறிவு என்று கேள்வி எழுந்தால் மதிமாறன் என்ன பதில் சொல்வார்? மரபுவழிச் செய்தியில் (மதிமாறன் புரிந்துகொள்கிற கருத்தாக) இருந்தாலும் சரி, மதிமாறன் சொல்கிற செய்தியாக இருந்தாலும் சரி; இரண்டிலும் அறிவு ஏற்படுவது ஆணினுடைய வித்தினால்தான்.

பார்ப்பன ஆண் – தாழ்த்தப்பட்ட பெண் – அறிவு
தாழ்த்தப்பட்ட ஆண் – பார்ப்பன பெண் – அறிவு

உண்மையிலேயே மதிமாறனின் புரிதல் இதுதான். ‘ஆணினுடைய வித்தினால் மட்டுமே தான் அறிவு ஏற்படுகிறது’ – இதைத் தான் அவர் சொல்லியிருக்கிறார்.

மதிமாறனின் இந்த புரிதலை, இன்றைக்கு மிக நுட்பமாகவும் சிறப்பாகவும் வளர்ந்து விட்ட மரபணு அறிவியலின் அடிப்படையில் வைத்துப் பார்த்தால், அது முற்றிலும் முட்டாள்தனமானது என்பது தெரிய வரும்.


சரி, அறிவியல் தான் தெரியாது என்றாலும், தன்னுடைய ‘பொதுப்புத்தியை’ வைத்து இப்படிப்பட்ட ஒரு கருத்தை உருவாக்கிய மதிமாறனின் மனநிலை எப்படிப் பட்டது? பெண்ணியவாதிகள் மட்டுமல்ல, வாசகர்கள் அனைவரும் கூட, கட்டாயம் இது பற்றி சிந்திக்க வேண்டும்.

(தொடரும்)

No comments:

Post a Comment

ஸ்ரீமத் பாகவதம் (தமிழ்)

  Srimad-Bhagavatam  1 Srimad-Bhagavatam   2 Srimad-Bhagavatam   3 Srimad-Bhagavatam    4 Srimad-Bhagavatam   5 Srimad-Bhagavatam   6 Srimad...