Sunday 11 February 2018

பாரதி: மரபும் திரிபும் – 7



July 24, 2012
- ம வெங்கடேசன்

ஈ.வே.ரா.வின் பக்தரும், துதிபாடியுமான வே.மதிமாறன் என்பவர் எழுப்பும் பாரதி குறித்த பொய் அவதூறுகளுக்கு திட்டவட்டமான மறுப்புரை இந்தத் தொடர்.


(தொடர்ச்சி…)

“தன் தேவைகளுக்காக எட்டயபுரம் ராஜா, மகாராஜாக்கள் மீதான சீட்டுக் கவிகள் பாடியதாக” பாரதி மீது மதிமாறன் குற்றம் சாட்டுகிறார்.

பாரதி பல மகாராஜாக்கள் மீதான சீட்டுக்கவிகள் பாடியதாக குறிப்பிடுகிறார். அதுவே பொய்தான். ஏனென்றால் பாரதி எட்டயபுரம் ராஜாவை (இரண்டு பேர்) தவிர வேறு எந்த மகாராஜாக்கள் மீதும் சீட்டுக்கவி எழுதவில்லை. பாரதி தமது வாழ்வில் தாம் பிறந்த மண்ணாகிய எட்டயபுரத்தின் மன்னருக்கு மட்டுமே சீட்டுக்கவி எழுதியனுப்பினார். அதுவும் அவர் விரும்பி அனுப்பவில்லை.

‘‘எட்டயபுரத்தில் தங்கியிருந்தபொழுது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து பத்தொன்பதாம் ஆண்டு மேத் திங்கள் இரண்டாம் நாள் எங்கள் (தனது குடும்பத்தாரின்) வற்புறுத்தலின் காரணமாகப் பாரதி ஜமீன்தாருக்கு சீட்டுக்கவிகள் மூன்றும் ஓலைத்தூக்குப் பாடல்கள் ஐந்தும் எழுதியனுப்பினுப்பினார்’’ என்று பாரதியின் தம்பி சி.விசுவநாதன் குறிப்பிடுகிறார்.
பாரதியின் குடும்ப வறுமையைப் பார்க்கும்பொழுது பாரதியால் எதுவும் செய்ய இயலாத நிலைமை அப்போது இருந்தது. போதிய வருமானம் இல்லை. பாரதியார் சீட்டுக்கவி எழுதும்போது திருமண வயதில் அவருக்குப் பெண் இருந்தாள்.

பாரதி எழுதிய சீட்டுக்கவியைப் பார்த்தோமானால், அவன் மீது நமக்கு அளப்பரிய மரியாதைதான் ஏற்படுகிறது.
பழங்காலத்தில் புலவர்கள் மன்னரிடம் பரிசு பெறுவதற்காக மன்னரை வானளாவப் புகழ்வார்கள். தங்களின் பெருமையையும் சிறிது அதில் குறிப்பிட்டுக் காட்டுவார்கள். ஆனால் மன்னனையும் தன்னையும் சமமாக வைத்து எந்தப் புலவரும் பாடவில்லை. பாரதி இங்குதான் வேறுபடுகிறார். மன்னரைப் பாராட்டுவதைவிட தன்னைப் பற்றிய அறிமுக செய்திகளுக்கே தமது சீட்டுக்கவிப் பாடல்களில் முதலிடம் அளிக்கிறார்.

நமக்குக் கிடைத்துள்ள சான்றுகளின்படி எட்டயபுர ராஜாவான வெங்கடேசுரெட்டப்ப பூபதிக்கு மூன்று சீட்டுக்கவிகள் எழுதினார் பாரதி. ஒன்று: பாரதி தன் 14ஆம் வயதில் கல்வி கற்பதற்காக நிதி வேண்டி ராஜா மகாராஜா ராம வெங்கடேசுர எட்டப்ப நாயக்கருக்கு சீட்டுக்கவி எழுதினார். இரண்டாவதாக எழுதிய ஓலைத்தூக்கும் (2-5-1919), மூன்றாவதான சீட்டுக்கவியும் (3-5-1919 ) வெங்கடேசுர எட்டப்ப நாயக்கருக்கு எழுதியதாகும்.

தனது 14வது வயதில் கல்வி கற்பதற்காக உதவி செய்யுமாறு எட்டயபுர ராஜாவுக்கு சீட்டுகவி எழுதினார். அந்த கவிதையில் தோன்றும் மிடுக்கு பிற்காலத்தில் எழுதுகிற சீட்டுக்கவியிலும் எதிரொலிக்கிறது. மதிமாறன் குறிப்பிடும் சீட்டுக்கவிகளை இப்போது ஆராய்வோம்.

முதலில் 2-5-1919ல் எழுதியதைப் பார்ப்போம்.

ஸ்ரீ எட்டயபுரம் மஹாராஜ ராஜேந்த்ர ஸ்ரீவெங்கடேசு ரெட்டப்ப பூபதி யவர்கள் ஸமூஹத்துக்கு கவிராஜ ஸ்ரீசி.சுப்பிரமணிய பாரதி எழுதிய ஓலைத்தூக்கு என்ற தலைப்பில் பாரதி எழுதுகிறார் :

”ராஜமஹா ராஜேந்திர ராஜகுல
சேகரன்ஸ்ரீ ராஜ ராஜன்
தேசமெலாம் புகழ்விளங்கு மிளசைவெங்க
டேசுரெட்ட சிங்கன் காண:
வாசமிகு துழாய்த்தாரான் கண்ணனடி
மறவாத மனத்தான் சக்தி
தாசனெனப் புகழ்வளர்சுப் பிரமணிய
பாரதிதான் சமைத்த பாட்டு ( 1 )

மன்னவனே தமிழ்நாட்டில் தமிழறிந்த
மன்னரிலை யென்று மாந்தர்
இன்னலுறப் புகன்றவசை நீமகுடம்
புனைந்தபொழு திறந்த தன்றோ?
சொன்னலமும் பொருணலமுஞ் சுவைகண்டு
சுவைகண்டு துய்த்துத் துய்த்துக்
கன்னலிலே சுவையறியுங் குழந்தைகள்போல்
தமிழ்ச்சுவைநீ களித்தா யன்றோ?  ( 2 )

புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத்
தமிழ்மொழியைப் புகழி லேற்றுங்
கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையெனும்
வசையென்னாற் கழிந்த தன்றே?
சுவைபுதிது நயம்புதிது வளம்புதிது
சொற்புதிது ஜோதி கொண்ட
நவகவிதை யெந்நாளு மழியாத
மஹாகவிதை யென்று நன்கு   ( 3 )

பிரான்ஸென்று முயர்ந்தபுகழ் நாட்டிலுயர்
புலவோரும் பிறரு மாங்கே
விராவுபுக ழாங்கிலத்தீங் கவியரசர்
தாமுமிக வியந்து கூறிப்
பராவியென்றன் தமிழ்ப்பாட்டை மொழிபெயர்த்துப்
போற்றுகிறார்; பாரோ ரேத்துந்
தராதிபனே யிளசைவெங்க டேசுரெட்டா
நின்பாலத் தமிழ்கொ ணர்ந்தேன்  ( 4 )

வியப்புமிகு புத்திசையில் வியத்தகுமென்
கவிதையினை வேந்த னேநின்
நயப்படுஸந் நிதிதனிலே நான்பாட
நீ கேட்டு நன்கு போற்றி,
ஜயப்பறைகள் சாற்றுவித்துச் சாலுவைகள்
பொற்பைகள் ஜதிபல் லக்கு
வயப்பரிவா ரங்கள்முதற் பரிசளித்துப்
பல்லூழி வாழ்க நீயே. (  5 )

இந்த ஓலைத்தூக்கில் எட்டயபுர மன்னரின் புகழைப் பாடுவதை விட தன்னைப் பற்றிய பெருமையையே பாரதி அதிகமாகச் சொல்கிறான்.



அடுத்து 3-5-1919ல் எழுதிய சீட்டுக்கவியை இப்போது பார்ப்போம். ஸ்ரீஎட்டயபுரம் ராஜ ராஜேந்த்ர மஹாராஜ வெங்கடேசுர எட்டப்ப பூபதி யவர்கள் ஸமூஹத்துக்கு கவிராஜ ஸ்ரீசி.சுப்பிரமணிய பாரதி எழுதிய சீட்டுக்கவிகள் என்ற தலைப்பில் பாரதி எழுதுகிறார் :

பாரிவாழ்ந் திருந்த சீர்த்திப்
பழந்தமிழ் நாட்டின் கண்ணே
ஆரிய, நீயிந் நாளி
லரசு வீற் றிருக்கின் றாயால்;
காரியங் கருதி நின்னைக்
கவிஞர்தாங் காண வேண்டின்
நேரிலப் போதே யெய்தி
வழிபட நினைகி லாயோ? – 1

விண்ணள வுயர்ந்த கீர்த்தி
வெங்கடேசு ரெட்ட மன்னா!
பண்ணள வுயர்ந்த தென்பண்
பாவள வுயர்ந்த தென்பா
எண்ணள வுயர்ந்த வெண்ணி
லரும்புகழ்க் கவிஞர் வந்தால்
அண்ணலே பரிசு கோடி
யளித்திட விரைகி லாயோ? – 2

கல்வியே தொழிலாக் கொண்டாய்
கவிதையே தெய்வ மாக
அல்லுநன் பகலும் போற்றி
யதைவழி பட்டு நின்றாய்
சொல்லிலே நிகரி லாத
புலவர்நின் சூழ லுற்றால்
எல்லினைக் காணப் பாயும்
இடபம்போல் முற்ப டாயோ? -3

இந்த கவிதையில் பாரதி ‘தன்னை நேரிலே வந்து பரிசு கொடுத்திடுக’ என்ற பொருளில் பாடுகிறார். உதவி வேண்டி நிற்பவரைப் போய் உதவிக்கொடுப்பர் பரிசு கொடுக்க வேண்டும் என்பது யாராலும் மொழியப் படாதது. தன்னை நேரிலே வந்து பார்த்து பரிசு கொடுக்க வேண்டும் என்று பாரதி பாடுகிறார். சங்ககாலத்துப் புலவர் முதல் இக்காலத்து புலவர்வரை யாராலும் இவ்வாறு சொல்ல முடியாது. அதற்கான மனத்திண்மை அப்புலவர்களிடம் இருந்ததா என்பது தெரியவில்லை.. ஆனால் பாரதியிடம் அதற்கான மனத்திண்மை இருந்தது. இது யாசிப்பிற்கும் ஒருவரைப் பெருமைப்படுத்த பரிசு கொடுப்பதற்கும் இடையேயான இடைவெளியினை நமக்குப் புலப்படுத்துகிறது. இங்கே பாரதி மற்ற புலவர்களிடமிருந்து விலகியே நிற்கிறார். மஹாராஜ வெங்கடேசுர எட்டப்ப பூபதி என்று சொல்லும்போது தன்னை கவிராஜ சுப்பிரமணிய பாரதி என்று மன்னருக்கு சமமான நிலையிலேயே தன்னை நிறுத்திக் காண்கிறார். இதுவும் மற்றப் புலவர்களிடம் நாம் காணாதது.

இங்கு பாரதியின் சிறுமையை யாராலும் காண முடியாது. ஆனாலும் மதிமாறன் காண்கிறார்.

பாரதிக்கு முன் எட்டயபுர மன்னர்களைச் சேர்ந்தவர்களை புகழ்ந்து எப்படியெல்லாம் கவிதை எழுதப்பட்டிருக்கிறது என்பதைப் பார்த்தோ மானால் பாரதியாரின் தனித்தன்மை, பெருமை நமக்குப் புரியும்.

கடிகைமுத்துப் புலவர் என்பவர் திக்விஜயம், சமுத்திர விலாஸம் போன்ற நூல்களை எழுதியவர். இவர் எட்டயபுர மன்னரை புகழ்ந்து காமரசம் சொட்ட எழுதிய பாடல் ஒன்றே பாரதி எழுதிய சீட்டுக்கவியின் பெருமையை நமக்கு உணர்த்தும்.கடிகைமுத்துப்புலவர் எழுதிய பாடல்களில் ஒரே ஒரு பாடல் மட்டும் உதாரணத்திற்கு தருகிறேன்.

‘இவளைச் சேர்வதற்கு இதுவே நேரம்’ என்ற தலைப்பில் தாய் கூறுவதாக அமையும் பாட்டு இது. இதற்கு ‘தாயிரங்கல்’ உபதலைப்பு –

தமிட்டரா ணுவம்பெருக்கி வந்தெதிர்த்த வேண்முரசு சத்தங்காது
தமிட்டரா வெனம்புலம்புஞ் சிறுபேதை விரகமது தணியவேமுத்
தமிட்டரா மதிமுகத்தின் முகமழுந்த வேபுணரச் சமயம்வாணர்
தமிட்டரா தரந்தெரியு மெங்களெட் டேந்திரமகிபா தமிழரேறே.

பொருள் : புலவர் பாடல்களின் தகுதியை அறிந்து கொள்ள வல்ல எட்டேந்திர மன்னனே! தமிழருள் ஆண் சிக்கத்தைப் போன்றவனே! தம் பட்டம் முதலியவற்றுடன் கூடிய படை வீரர்களைப் பெருக்கிக்கொண்டு வந்து தாக்கிய, காமனின் முரச ஒலியைச் செவியில் கேட்டு, பாம்பினைப் போன்று வருந்தும் என் இளம்பெண்ணின் காதல் துன்பம் அடங்குமாறு இரவில் தோன்றும் சந்திரனைப் போன்ற இவளது முகத்தில் உன்முகம் பொருந்துமாறு சேர்வதற்குத் தக்கநேரம் இதுவே ஆகும்.

இப்படித்தான் எட்டயபுர மன்னரை கடிகை முத்துப்புலவர் போற்றுகிறார். இவருக்கு இரு நூற்றாண்டுகளுக்குப் பின்வந்த பாரதி எட்டயபுர மன்னரை போற்றும் விதத்தைப் பார்த்தோம். இதுதான் பாரதிக்கும் மற்ற புலவர்களுக்கும் இருக்கும் வித்தியாசம்.

பாரதி எழுதிய சீட்டுக்கவிக்காக குற்றம் சொல்லும் மதிமாறனுக்கு ஒரு செய்தி.

அக்காலக்கட்டத்தில் போராட்ட வீரர்களின் வறுமை நிலையைப் பார்த்து மக்களோ அல்லது சில செல்வந்தர்களோ அவர்களுக்கு நிதி உதவி, பொருள் உதவியை மனமுவந்து அளித்தனர். சிலர் செல்வந்தர்களிடம் சென்று உதவியை நாடினர். இது கீழ்த்தரமான செய்கை என்று யாரும் அன்று நினைக்கவில்லை.

ஒரு உதாரணம். வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் வ.உ.சிதம்பரனாருக்காக தென்னாப்பிரிக்காத் தமிழர்கள் சார்பில், அங்கிருந்த தேசபக்தர் தில்லையாடி வேதியப்பப் பிள்ளை வ.உ.சி.யின் குடும்பத்திற்கு நிதியுதவி திரட்டினார். அக்காலத்தில் காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கலை எதிர்த்து அறப்போர் நடத்தி வந்தார். காந்தியடிகள் இந்தியா திரும்பியபொழுது அவரிடம் தாம் திரட்டிய நிதியை வேதியப்பப் பிள்ளை, வ.உ.சியிடம் சேர்த்திடக் கொடுத்தனுப்பினார். ஆனால், என்ன காரணத்தினாலோ அந்த நிதியுதவி வ.உ.சி.யிடம் சேரவில்லை. வேதியப்பப் பிள்ளை தமிழகம் வந்த பிறகுதான் வ.உ.சி. செய்தியறிந்தார். அப்பொழுது அகமதாபாத்தில் தங்கியிருந்த காந்தியடிகளுக்கு வ.உ.சி. கடிதம் எழுதி பணம் வந்து சேராததை நினைவூட்டினார். இந்தக் கடிதம் 22-3-1915ல் வ.உ.சி.யின் மயிலாப்பூர் முகவரியான 40, பரிபூர்ண விநாயகக் கோயில் தெருவில் இருந்து எழுதப்பட்டது. இதில் ஒரு பகுதி வருமாறு :

“நானும் என் குடும்பத்தினரும் கடந்த ஓராண்டு காலமாக சில தென்னாப்பிரிக்கா இந்தியர்களால் ஆதரிக்கப்பட்டு வந்தோம் என்பதைத் தங்களிடம் நேரில் நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். இப்பொழுது கூட அவர்களிடம் நிதியுதவிக் கேட்டிருக்கின்றேன். இந்த நிலைமையில் எனக்கு சேரவேண்டியப் பணத்தை, வழங்கப்படுவதற்கு தயார் நிலையில் உள்ள பணத்தை நான் வேண்டாம் எனக்கூற எந்தக் காரணமும் இல்லை. தற்பொழுது, என்னுடையச் சூழல்களில் நான் பணத்தை வேண்டாம் என்று மறுத்தால், எனக்கும் என் குடும்பத்திற்கும் தவறிழைத்தவனாவேன்.”

– நூல்: வ.உ.சிதம்பரம் பிள்ளை (இந்திய அரசு பப்ளிகேஷன்ஸ் டிவிஷன்)

வ.உ.சி.யின் இந்தக் கடிதம் நமக்கு உணர்த்துவதென்ன? தன் குடும்பத்திற்காக நிதிகேட்பது தவறில்லை; அது கீழ்த்தரமானதுமல்ல என்பதுதானே! (பாரதிக்கும் வ.உ.சி.க்கும் உதவி செய்யாத தமிழ்நாட்டு மக்களை நாம் சபித்தே ஆகவேண்டும்) தன் தேவைக்காக நிதி கேட்ட வ.உ.சிக்கு வக்காலத்து வாங்கி காந்தி வ.உ.சியை ஏமாற்றிவிட்டார் என்று விமர்சித்த மதிமாறன், தன் தேவைக்காக நிதி கேட்ட பாரதியை மட்டும் விமர்சிக்கிறார் என்றால் மதிமாறனின் உள்நோக்கம் என்ன தெரியுமா?

வ.உ.சி. பிராமணரல்லாதவர். பாரதி பிராமணர்.

உயர்சாதி பிராமணரல்லாதவர் என்ன செய்தாலும் சரி; பிராமணர் எது செய்தாலும் தவறு. இதுதான் மதிமாறனின் அளவுகோல். பாரதிக்கு வைத்த விமர்சனத்தை மதிமாறன் வ.உ.சி.க்கு வைப்பாரா?

(தொடரும்)

No comments:

Post a Comment

ஸ்ரீமத் பாகவதம் (தமிழ்)

  Srimad-Bhagavatam  1 Srimad-Bhagavatam   2 Srimad-Bhagavatam   3 Srimad-Bhagavatam    4 Srimad-Bhagavatam   5 Srimad-Bhagavatam   6 Srimad...