Sunday 11 February 2018

பாரதி: மரபும் திரிபும் – 3



May 2, 2012
- ம வெங்கடேசன்

பாரதி: மரபும் திரிபும் – பாகம் 1 | பாகம் 2

(தொடர்ச்சி…)

மதிமாறனைப் பார்த்துச் சிரிக்கும் நீதிக்கட்சித் தலைவர்கள்!

நீதிக்கட்சி அரசு பொறுப்பேற்றவுடன் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்னென்ன நன்மைகள் செய்தது என்பதை விளக்குகிறார் மதிமாறன். (பக்.72-73)

அதற்கு ஆதாரமாக திராவிடர் கழக வெளியீடான முனைவர் பு.ராசதுரை எழுதிய ‘நீதிக்கட்சி அரசு பாடுபட்டது யாருக்காக’ என்ற நூலைக் காட்டுகிறார்.

அந்த நூலே பொய்களால் ஆனது. தாழ்த்தப்பட்டவர்களை ஏமாற்றும் நோக்கத்துடன் வெளியிடப்பட்டது.

மதிமாறன் எடுத்துக்காட்டியுள்ள பகுதிகளில், ‘இச்செய்திகள் 11.08.1920 நாளிட்ட 1934-ஆம் எண் ஆணையில் காணப்பெறுவன’ என்று இருக்கிறது. அதாவது 1920-இல் நீதிக்கட்சி ஆட்சியில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு செய்த நன்மைகள் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை மதிமாறன் எடுத்துக்காட்டுகிறார்.

ஆனால் உண்மை என்ன தெரியுமா?

1919-ஆம் ஆண்டைய மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்த சட்டப்படி அமைந்த அரசியல் அமைப்பு இரட்டை ஆட்சி. இச்சட்டம் இயற்றப்பட்டபின் சென்னை மாநிலச் சட்டமன்றத்துக்கு தேர்தல் நடந்தது 30.11.1920.

நீதிக்கட்சியின் முதல் அமைச்சரவை பொறுப்பை ஏற்றது 17-12-1920. முதல் சட்டமன்றக் கூட்டம் 1921 ஜனவரி 12-ஆம்நாள் நடைபெற்றது.

முதல் சட்டமன்றக் கூட்டமே 1921-இலேதான் நடைபெற்றது என்கிறபோது 1920-இல் நீதிக்கட்சி எப்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆணைகளைப் பிறப்பித்து இருக்க முடியும்?

அடுத்து, நீதிக்கட்சி செய்ததாகக் குறிப்பிடுவது 16-12-1921 நாளிட்ட 2815 எண் ஆணையிலுள்ள செய்திகள். இதற்கும் நீதிக்கட்சிக்கும் எந்தவிதச் சம்பந்தமுமே இல்லை. ஏனென்றால் அது பிரிட்டிஷ் ஆட்சி கொண்டுவந்த திட்டமாகும். 1902-இல் தரிசு நிலங்களை டி.சி.நிலங்கள் என்ற பெயரில் தாழ்த்தப்பட்டோருக்கு ஒப்படை செய்ய மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அதிகாரம் அளித்து ஆணை பிறப்பித்தது பிரிட்டிஷ் ஆட்சி. அதனுடைய தொடர்ச்சிதான் மேற்கண்ட ஆணைகள்.

தாழ்த்தப்பட்டோருக்கு நீதிக்கட்சி தொண்டு செய்தது என்று சொன்னால் இறந்துபோன நீதிக்கட்சி ஆட்சியாளர்களே மதிமாறனின் கனவில் தோன்றி அவரைப் பார்த்து கைகொட்டிச் சிரிப்பார்கள்.

நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஏராளமான நன்மை செய்தது என்று சொல்லும் மதிமாறனின் மழுங்கிய மூளையில் ஓங்கி குத்துவிடுகிறார் ஆதிதிராவிட மகாஜன சபையின் செயலாளரும் தாழ்த்தப்பட்டவர்களின் புகழ்பெற்ற தலைவருமான எம்.சி.ராஜா (1883-1945).

நீதிக்கட்சி குறித்து எம்.சி.ராஜா (1927-இல்) எழுதுகிறார்:

‘‘இப்போது அதிகாரத்திலிருக்கிற கட்சி நம்முடைய தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பல நன்மைகளைச் செய்தது என்று நான் கேள்விப்பட்ட போது வியப்பில் ஆழ்ந்து போனேன். ஆதிதிராவிடர்களின் செலவிற்காகச் சில மானியங்களையும் ஒதுக்குகின்றது என்று சில அரசியல்வாதிகள் என்னிடம் கூறினர்.

….இதே சூழ்ச்சிக் கொள்கையை மக்கள் முன் வைத்துத்தான் கபடநாடகமாடி நீதிக்கட்சிக்காரகள் ஆட்சிக்கு வந்தனர். நமக்காக ஒதுக்கப்பட்ட தொகை, நம் நலனுக்காகையாலும் முறை, துறை என்று காணப்படும் வரவுசெலவுப் புள்ளி விபரங்கள் யாவும் உண்மையானவை அல்ல; பொய்யே. மேலும் உண்மையாகக் கூறப்போனால், ‘ஒதுக்கப்பட்ட இலாக்காக்கள்’ ஆட்சியாளரிடம் கேட்ட செலவுப் புள்ளிகளைத்தான் நமக்காகச் செலவிடப்படுவதாய் வெளியிடுகின்றனர். ஆனால் உண்மையில் அந்தப் புள்ளி விவரப்படி இவர்கள் நமக்குச் செலவிடவில்லை.

…..1921-22ஆம் ஆண்டில் 6.47 லட்ச ரூபாய் செலவிட உத்தேசித்து, தொழிலாளர் நலத்துறையும், மற்ற துறைகளும் கேட்டன. இந்த வேண்டுகோள் சட்டமன்றத்திற்கு வந்தது. இச்சட்டமன்றம் 6.47 லட்சம் மானியம் கோரியதை ஒரு லட்சமாகக் குறைத்தது.

…..தற்போதுள்ள நாட்டாண்மைக் கழகத் துறைகளில் ஆதிதிராவிடர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் இத்திட்டம் கூட இன்று ஆட்சிபீடத்தில் இருக்கும் அமைச்சரவையால் நமக்கு வழங்கப்படவில்லை. அதற்கு முன்பே வேறுஒருவரால் வழங்கப்பட்ட ஒன்றாகும். இவர்கள் ஒரேஒரு இடத்தைக்கூட நமக்குப் புதிதாக ஒதுக்கவில்லை.

……திருவண்ணாமலை நகராண்மைக் கழகத்தில் நம் பிரதிநிதி இறந்தபோதும், செங்கற்பட்டிலும், கடலூரிலும் வட்டக் கழக உறுப்பினர்கள் பதவி இழந்தபோதும் நமக்கே உரித்தான இவ்விடங்கள் சாதி இந்துக்களால் மீண்டும் நிரப்பப்பட்டன.

…..’வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்’ என்ற பெயரால் செய்யப்படும் எந்தத் திட்டத்திலும் மருந்துக்குக்கூட உண்மை இல்லை. ஆனால் உண்மையில் நிலைத்திருப்பது ‘வகுப்புவாத ஏகாதிபத்தியமும், சாதியின் கொடுங்கோன்மை’யுமே ஆகும்.

…..1923-ஆம் ஆண்டில் சட்டமன்றத்தில் ஆதிதிராவிடப் பிள்ளைகளுக்கு உபகாரச் சம்பளங்களை அதிகரிக்க வேண்டுமென்று நான் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தேன். அன்று கல்வி அமைச்சராக இருந்தவர் ஒரு சாதி இந்து. அவர் ‘ஏழைமை என்பது ஆதிதிராவிடருக்கு மட்டும்தான் உள்ள தனிச்சொத்தல்ல. மற்ற வகுப்பாரிலும் ஏழைகள் இருக்கின்றனர்’ என்று கூறி என் தீர்மானத்தை எதிர்த்தார்.’’

(நூல்: ஒடுக்கப்பட்ட இந்துக்கள்)

இப்படி மதிமாறனின் மூளையைக் குத்திக்கொண்டே போகிறார் எம்.சி.ராஜா. ‘நீதிக்கட்சியே தாழ்த்தப்பட்டர்களுக்கு நன்மை செய்தது’ என்று பூக்களால் மூடப்பட்ட பாறாங்கல்லைத் தூக்கி தாழ்த்தப்பட்ட மக்களின் தலையில் போடுகிறார் மதிமாறன்.

“தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தொண்டாற்றிய நீதிக்கட்சிக்காரர்களைத்தான் தேசத்துரோகிகள் என்கிறார் நம் வரகவி” என்று விமர்சனம் வைக்கும் மதிமாறனுக்கு எம்.சி.ராஜாவின் விமர்சனத்தையே பதிலடியாக நாம் கொடுத்திருக்கிறோம்.

ஆனால் இதில் ஒன்று கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் பாரதி, தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராடியதால்(?) நீதிக்கட்சிக்காரர்களை விமர்சிக்கவில்லை. நீதிக்கட்சிக்காரர்கள் பிரிட்டிஷாருக்கு வால்பிடித்ததினால்– ஆதரவாக இருந்ததினால்– பிரிட்டிஷாருக்கு ஆதரவாக இந்துமதத்தை அவர்கள் கடுமையாக விமர்சித்ததினால்–  மட்டுமே பாரதி அவர்களை தேசத்துரோகிகள் என்று விமர்சித்தார்.

(நீதிக்கட்சி இருந்த கடைசி காலக்கட்டம்வரை ஏகாதிபத்தியத்திற்கு– பிரிட்டிஷாருக்கு ஆதரவாகவே இருந்தது என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்.)

பாரதி மட்டுமல்ல அன்று தேசிய விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அனைவரும் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக இருந்த நீதிக்கட்சியை எதிர்த்தனர்.

பிராமணர்-பிராமணரல்லாதார் அரசியல் பிரச்சினை  பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாக ஆகிவிடக்கூடாது எனும் கருத்துக் கொண்ட காங்கிரசில் இருந்த பிராமணரல்லாத தலைவர்கள் நீதிக்கட்சியை எதிர்க்க காங்கிரசிற்குள்ளேயே ஒரு தனி அமைப்பை நிறுவினார்கள். இதற்கு ‘மெட்ராஸ் பிரசிடென்சி அசோசியேஷன்’ என்ற ‘சென்னை மாகாணச் சங்கம்’ என்ற ஓர் அமைப்பை 1917-இல் நிறுவினார்கள்.

திவான் பகதூர் கேசவப்பிள்ளை தலைவராகவும், லாட் கோவிந்ததாஸ், சல்லா குருசாமிச் செட்டியார், ஈ.வெ.ராமசாமி நாயக்கர், நாகை பக்கிரிசாமிப் பிள்ளை, சீர்காழி சிதம்பரநாத முதலியார், தஞ்சை ஸ்ரீநிவாசப் பிள்ளை, ஜார்ஜ் ஜோசப் ஆகியோர் உதவித் தலைவர்களாவும் தெரிந்தெடுக்கப்பட்டனர். அமைச்சராக தி.வி.கோபால சாமி முதலியாரும், குருசாமி நாயுடுவும், டாக்டர் வரதராஜுலு நாயுடுவும், சர்க்கரைச் செட்டியாரும், திரு.வி.கவும் தெரிந்தெடுக்கப்பட்டனர்.

இதில் கவனிக்கப்பட வேண்டியது, காங்கிரசில் இருக்கும்வரை ஈவெராவும் நீதிக்கட்சியை எதிர்த்தார் என்பதுதான். திரு.வி.க.வும் நீதிக்கட்சி நடத்தும் கூட்டங்களுக்குச் சென்று நீதிக்கட்சிக்காரர்களை கேள்வி கேட்பார். கூட்டம் கலவரத்தில் முடியும். இப்படியும் நீதிக்கட்சிக்காரர்களை கடுமையாக எதிர்த்தனர்- அன்றைய தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவளித்துப் போராடியவர்கள்.

இந்தச் சென்னை மாகாணச் சங்கம் மிகக் கடுமையாக நீதிக்கட்சியை எதிர்த்தது. பிராமணரல்லாதார் பிரச்சினைகளில் அக்கறை கொண்ட வ.உ.சி.யும் நீதிக்கட்சியை ஏற்றுக்கொள்ளவில்லை.

‘‘பிராமணர்-பிராமணரல்லாதார் பிரச்சினையில் வ.உ.சியின் நிலைப்பாடு பற்றி விடுதலைப் போராட்ட வீரரும் ஆய்வாளருமான ம.பொ.சிவஞானம் கூறியுள்ள கருத்து கவனத்திற்குரியது.

‘‘நீதிக்கட்சி வ.உ.சியை இணைத்துக்கொள்ள முயன்றது. சுயராஜ்யத்தைக் குறிக்கோளாகக் கொண்ட வ.உ.சி. சாதி வேற்றுமைகளை வளர்த்த நீதிக்கட்சியில் சேர மறுத்துவிட்டார். பிராமணரல்லாதவர்களின் நிலைமைகளை மேம்படுத்துவதில் அவர் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார். பல துறைகளில் பெரும்பான்மையான பிராமணரல்லாதார் பின்தங்கியிருந்ததைப் பற்றி அவர் பெரிதும் வருத்தமுற்றிருந்தார். தமது ஆழ்ந்த வருத்தத்தை தம்முடைய பேச்சுகளில் வெளியிட்டுள்ளார். ஆனால் அதற்காக பிராமணர்-பிராமணரல்லாதார் சாதிவேற்றுமைகளின் அடிப்படையில் ஓர் அரசியல் இயக்கத்தை அவர் ஒப்புக்கொள்ளவில்லை.’’

 (நூல்: வ.உ.சிதம்பரம்பிள்ளை, பப்ளிகேஷன்ஸ் டிவிஷன்)

ஆகவே பாரதி மட்டும் நீதிக்கட்சியை எதிர்க்கவில்லை. தேசிய விடுதலைப் போராட்டம் இதனால் பின்தங்கி விடுமோ என்ற ஆதங்கத்தில் அன்று போராட்ட வீரர்கள் அனைவரும் எதிர்த்தனர்.

பாரதி வெறும் வெறுப்பியல் காரணமாக நீதிக்கட்சியை விமர்சிக்கவில்லை. பிராமணரல்லாதவர்கள் எல்லா நிலைகளிலும் முன்னேற வேண்டும் என்று நினைத்தவன் அவன். ஆகவேதான் நீதிக்கட்சிக்காரர்கள் மந்திரிகளாக ஆனவுடன் தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினான் பாரதி.

‘‘பிராமணரில்லாமல் மற்றவர் மந்திரிகளாக நியமிக்கப்பட்டது எனக்கு ஸந்தோஷந்தான். தாங்களே ஐரோப்பியக் கல்விக்குப் பிறப்புரிமை கொண்டோரென்றும், ஆதலால் ஐரோப்பியக் கல்வியில் தாம் பெறக்கூடிய தேர்ச்சி மற்ற ஜாதியாரால் எய்தவே முடியாதென்றும், ஆதலால் உயர்ந்த ஸர்க்கார் ஸ்தானங்களெல்லாம் தங்களுக்கே கிடைக்குமென்றும் சென்னை மாகாணத்து பிராமணரில் சிலர் மிகவும் கர்வம் பாராட்டி வருகிறார்கள். அவர்களுடைய கர்வத்தைத் தீர்க்க இது நல்ல மருந்தாகி வந்தது.’’

 (சுதேசமித்திரன்: 24-12-1920)

ஆகவே பாரதியை வெறும் நீதிக்கட்சி எதிர்ப்பாளர் என்று குறுக்கிவிட முடியாது. பிராமணரல்லாத மந்திரி சபையைப் பாராட்டியவன் பாரதி என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

நீதிக்கட்சிக்காரர்களின் ‘பஞ்சம பாசம்’ எப்படிப்பட்டது என்பதையும் உணர்ந்தவர் பாரதி.

பாரதி எழுதுகிறார்:

‘‘சில தினங்களின் முன்பு அமலாபுரத்தில் பஞ்சமர்களின் பிரதிநிதிக் கூட்டமொன்று நம் மாகாணத்துப் புதிய பிராமணரல்லாத மந்திரிகளை ஸந்தித்தபோது அம்மந்திரிகளில் ஒருவராகிய ஸ்ரீமான் ராமராயனிங்கார் மிகவும் ரஸமாகப் பேசியிருக்கிறார். இதுவரை பிராமணரல்லாத வகுப்பினர் பஞ்சமர்களிடம் தக்கபடி அனுதாபம் செலுத்தாமல் இருந்துவரும் காரணம் பிராமணர்களுக்கு மன வருத்தமுண்டாகுமென்ற பயத்தைத் தவிர வேறில்லையென்றும், இப்போது பிராமணரல்லாதாரில் மேற்குலத்தார் பிராமணர்களின் ஆதிக்கத்தை உதறி எறிந்து விட்டபடியால், இனிமேல் பிராமணரல்லாதார் பஞ்சமர்களை மிகவும் ஆதரிக்கத் தொடங்கிவிடுவார்களென்றும் இந்த மந்திரி சொன்னார். மேலும், இனிமேல் பிராமணரல்லாதோரில் மேற்குலத்தார் பஞ்சமர்களைப் பரிபூர்ண ஸமத்துவத்துடனும் சொந்த ஸகோதரர் போலவும் நடத்த முற்றிலும் விருப்பத்தோடிருக்கிறார்கள் என்றும் இவர் சொன்னார்.

இங்ஙனம் இவர் பிராமணரல்லாதோரும், பஞ்சமரல்லாதோருமாகிய மற்ற ஹிந்துக்கள் அனைவரும் இப்போதே பஞ்சமர்களை முழுதும் ஸமானமாக நடத்த உடம்படுகிறார்களென்று எந்த ஆதாரத்தை வைத்துக்கொண்டு உறுதி சொல்லுகிறாரென்பது நமக்கு விளங்கவில்லை.

ஏற்கனவே ஹிந்துக்களில் பிராமணர் முதலிய எல்லா வகுப்புகளிலும் அங்கங்கே ஜாதிக் கட்டுக்களை உதறிவிட்டு எல்லா ஜாதியாரையும் ஸமானமாக நடத்த வருகிறார்களென்பது மெய்யே. பொதுப்படையாக எல்லா வகுப்புகளிலும் ஜாதிக்கட்டுக்கள் தளர்ச்சி பெற்று ஸமத்துவக் கொள்கை ஓங்கிக் கொண்டு வருகிறதென்பது மெய்யே.

ஆசாரத் திருத்த முயற்சி ஆரம்ப முதல் நீதிபதி ரானடே முதலிய பிராணர்களாலே அதிக சிரத்தையுடன் போற்றப்பட்டு வருகிறதென்பதை நாம் மறக்ககூடாது. ஆனால், இவற்றைக்கொண்டு, இன்றைக்கே பிராமணரல்லாதாரில் மேல் வகுப்பினர் பஞ்சமர்களோடு ஸமானமாக உறவாடத் தயாராக இருக்கிறார்களென்று சொல்லுதல் அதிசயோக்தி.

எனிலும் ஸ்ரீ ராமராயனிங்கார் தம்மளவிலேனும் தாம் சொல்லியதை மெய்ப்படுத்திக் காட்டுவாரென்று நம்புகிறேன்.

இவ்விஷயத்தில் இவர் மனத்தோடு பேசினாரா அல்லது வெறுமே வெளிப்பேச்சுத்தானா என்பதைப் பஞ்சமத் திராவிட நண்பர்கள் பரிசோதனை செய்து பார்க்கும்படி வேண்டுகிறேன்.’’

(சுதேசமித்திரன் 8-2-1921)

பாரதியின் இந்த விமர்சனம் தொலைநோக்குப் பார்வை கொண்டது. ஸ்ரீ ராமராயனிங்கார் தம்மளவிலேனும் தாம் சொல்லியதை மெய்ப்படுத்திக் காட்டுவாரென்று நம்புகிறேன் என்ற பாரதியின் நம்பிக்கையை சம்மட்டியால் அடித்துத் தூள்தூளாக்கியவர் இவர்தான்.

‘‘பொதுச்சாலைகள், பொதுச் சத்திரங்கள், கிணறுகள், பள்ளிகள் முதலியவற்றை மக்கள் சாதி மதவேறுபாடின்றிப் பயன்படுத்துவதில் எவ்விதத் தடை செய்தாலும் தண்டனை அளிப்பதற்கான சட்டத்தை வெகுவிரைவில் கொண்டு வருமாறு அரசாங்கத்திற்கு இக்கவுன்சில் சிபாரிசு செய்கிறது’’

என்ற தீர்மானத்திற்கு ராமராயனிங்கார் சொன்ன பதிலே போதும்.

‘‘பொதுச்சாலைகள் முதலியவற்றை இந்த மக்கள் பயன்படுத்துவதைத் தடுப்பதைத் தண்டிக்கப் புதிய சட்டம் நிறைவேற்றப்படுவது தேவையாகும் என்று தோன்றவில்லை. உண்மையான தடை, சமூகக் கொடுமையே. இது சமுதாய சீர்திருத்தத்தினால் உடைக்கப்பட வேண்டும்.’’

இதுதான் நீதிக்கட்சி முதலமைச்சர் ராமராயனிங்காரின் பரிகாரம். அரசியல் தளத்தில் பிரிட்டிஷாருக்கு ஆதரவளித்தவர்கள், சமூகத்தளத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராகவே இருந்தார்கள். நீதிக்கட்சிக்காரர்களின் ‘பஞ்சம பாசம்’ வெளிப்பேச்சுதான் என்பதை பலமுறை நிரூபித்து இருக்கிறார்கள். தங்களுடைய செல்வாக்கு மக்களிடையே குறைந்துவருவதைப் பார்த்து அவர்கள் ஒரு தீர்மானத்திற்கு வந்தார்கள். அதாவது பார்ப்பனர்களையும் நீதிக்கட்சியில் சேர்த்துக்கொள்வது என்பதுதான் அது. இதுவரை எந்தப் பார்ப்பனரை எதிராக நிறுத்தி பிராமணரல்லாதவர்களிடையே பிரசாரம் செய்தார்களோ அதே பார்ப்பனர்களை நீதிக்கட்சியில் சேர்ப்பதற்குத் தீர்மானம் போட்டார்கள். பார்ப்பனர்கள் எங்களை நீதிக்கட்சியில் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று கேட்கவில்லை. ஆனாலும் நீதிக்கட்சிக்காரர்கள் அப்படி ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தார்கள்.

இவர்களைத்தான் ‘தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவாகப் போராடியவர்கள்’ என்று மதிமாறன் வாய்கூசாமல் பொய்யை அள்ளிவிடுகிறார். என்ன செய்ய தாழ்த்தப்பட்டோரின் தன்னகரில்லாத தலைவர் எம்.சி.ராஜா இல்லையே இப்போது!

(தொடரும்..)

No comments:

Post a Comment

ஸ்ரீமத் பாகவதம் (தமிழ்)

  Srimad-Bhagavatam  1 Srimad-Bhagavatam   2 Srimad-Bhagavatam   3 Srimad-Bhagavatam    4 Srimad-Bhagavatam   5 Srimad-Bhagavatam   6 Srimad...