Saturday 25 November 2017

விஷநரி-மிஷினரி => இந்திய மதங்களின் கலாச்சாரம் மீதான படையெடுப்பு... (பாகம் -6.) (இறுதி பாகம்)

விஷநரி-மிஷினரி => இந்திய மதங்களின் கலாச்சாரம் மீதான படையெடுப்பு...
(பாகம் -6.) (இறுதி பாகம்)

பாகம் - 1.

பாகம் - 2.

பாகம் - 3.

பாகம் - 4.

பாகம் - 5.

புனித தோமையர் ஓர் அறிமுகம் (ஜெயமோகன் தளம்)

இயேசுவின் மாணாக்கர்களில் முக்கியமானவரான புனித தோமையர் [St.Thomas] பற்றி விவிலியம் போதுமான அளவுக்கு செய்திகளை அளிப்பதில்லை. கத்தோலிக்க கலைக்களஞ்சியத்தில் தேடினால் தோமையரைப்பற்றி மிகச்சில குறிப்புகளே காணப்படுகின்றன. தோமையரின் பெயர் திருச்சபை அங்கீகரித்த நான்கு இறைச்செய்திகளிலும் மீண்டும் மீண்டும் வருகிறது. அவரது தெளிவான சித்திரத்தை அளிப்பது நான்காவது இறைச்செய்தியாளரான யோவானில்தான். இவர் தாமஸ் யூதாஸ் திதியோன் என்று சொல்லப்படுகிறார். இரட்டையரில் ஒருவன் என்ற பொருளில் [ இது சம்ஸ்கிருதத்தில் இருந்து பெறப்பட்ட சொல் . துவம் என்றால் இரண்டு]

தோமையர் யோவானின் இறைச்செய்தியில் இயேசு மேல் அழுத்தமான பிடிப்பும் துணிவும் கொண்ட முதல் மாணாக்கராகச் சொல்லப்படுகிறார். இயேசு லாஸரசை காணும் பொருட்டு ஜுதேயாவுக்கு மீண்டும் செல்லும் நோக்கத்தை அறிவித்தபோது இவர்தான் மற்ற மாணவர்களிடம் ”நாமும் கூடவே செல்வோம். ஒருவேளை நாமனைவருமே கொல்லப்படலாம்”என்று சொன்னார்.[யோவான் எழுதிய இறைச்செய்தி 11-16] .மேலும் தோமையர் எளிதில் நம்பிவிடாதவராகவும் தருக்கம் சார்ந்து எதையும் ஆராய்பவராகவும் இருந்தார். இவரே ஏசுவின் இறுதி உணவின்போது அவர் மீது ஐயத்தை எழுப்பினார். ”தோமையர் ஏசுவிடம் சொன்னார். ”கர்த்தரே நீங்கள் ஆவியா அல்லவா என்று நாங்கள் அறியோம். அதை நாங்கள் எப்படி தெளிவுபடுத்திக் கொள்வது?” [யோவான் எழுதிய இறைச்செய்தி 14:5] .

ஆனாலும் தாமஸ் கிறிஸ்து உயிர்த்தெழுந்து வந்தபோது கேட்ட கேள்வியால்தான் வரலாற்றில் நிற்கிறார். ”அவரது கைகளில் ஆணி அறையப்பட்ட துளைகளை கண்ணால் கண்டு அவற்றில் என் விரல்களை விட்டாலொழிய நான் அதை நம்பமாட்டேன்” என்று அவர் அடம்பிடித்தார்.[யோவான் எழுதிய இறைச்செய்தி 20:25] ஆனால் எட்டு நாட்கள் கழித்து அவர் விசுவாசம் பெற்றார். அதற்காக ஏசு அவரைக் கடிந்துகொண்டார். ” நீ என்னைக் கண்டதனால் என்னை நம்பினாய் தாமஸ். ஆனால் காணாமலேயே நம்பியவர்கள் எவரோ அவர்களே அருள்கூரப்பட்டவர்கள்” [ யோவான் எழுதிய இறைச்செய்தி 20:29].இக்காரணத்தால் இவர் ஐயப்பட்ட தாமஸ் [ Doubting Thomas] என்று அழைக்கப்பட்டார். மேலைநாடுகளில் , குறிப்பாக புரட்டஸ்டண்ட் மதத்தில், தோமையர் ஒரு படி குறைந்தவராகவே இனம் காணப்படுகிறார்.

தாமஸ் என்ற பேர்குறித்தே ஏராளமான கிறித்தவ இறையியல் சார்ந்த ஊகங்கள் எழுதப்பட்டுள்ளன. அவற்றில் முதன்மையான ஆவணம் என்பது கிரேக்க மொழியிலும் சிரியக் மொழியிலும் சிற்சில பாடபேதங்களுடன் பேணப்பட்டுவரும் ‘தோமையரின் செயல்பாடுகள்’ [Acta Thomae] முக்கியமான ஆவணமாகும். அது பார்டசேன்ஸ் எழுதியதாக இருக்கலாம்[Bardesanes] கிபி 220க்கு முன்பாக எழுதப்பட்ட இவ்வாவணம் ஹரானக் [Harnack] ஆல் தன் குறிப்புகளில் [Chronologie, ii, 172] சான்றளிக்கப் பட்டுள்ளது. ஆனால் இதன் உண்மையான பிறப்பிடம் எடேசா ஆகும். [Edessa] அங்கு தாமஸ் கீழைநாட்டில் கொல்லப்பட்டபின் கொண்டுவரப்பட்ட எலும்புகள் வைக்கப்பட்டு வணங்கப்பட்டதாக தெரிகிறது. இது தோமையரின் எலும்புகள்தான் என்பதற்கான ஆதாரம் என்னவெனில் அவர் இரு இடங்களில் ஏசுவின் இரட்டைச் சகோதரர் ஆக குறிப்பிடப்படுகிறார் என்பதே. யூதாஸ் தாமஸ் என்று சிரியக் மொழியில் சொல்லப்படும் தாமஸ் கிரேக்க மொழியில் திதிமோஸ் [இரட்டையர்] என்று சொல்லப்படுகிறார். இவை ஒரே பொருள் கொண்டவை.

இறையியலாளாரான ரெண்டல் ஹாரிஸ் இந்த எலும்பு வழிபாடானது இது எடெஸாவில் இருந்த ஏதோ புறச்சமய [pagan] வழிபாட்டு முறையானது கிறித்தவத்துக்குள் ஊடுருவியதன் விளைவு என்கிறார். அவர் எடெஸாவிற்கு தாமஸின் எலும்புகள் வந்தது குறித்து கூறும் கதை இது. கிறிஸ்துவின் இறப்புக்குப் பின்னர் அவரது மாணாக்கர்கள் உலகைப் பகுத்துக்கொண்டு சமயப்பரப்புநர்களாக [அப்போஸ்தலர்] கிளம்பிய போது தாமஸின் கணக்குக்கு வந்தது இந்தியா. தாமஸ் இந்தியா செல்ல விரும்பவில்லை. அப்போது ஆவி வடிவில் வந்த ஏசு அபான் [Abban] என்ற இந்தியக்கப்பலில் தோன்றி அதன் உரிமையாளரான குந்தஃபார்[Gundafor] என்ற மன்னனுக்கு தாமஸை ஆசாரி வேலைசெய்யும் அடிமையாக விற்கச்செய்தார். அவ்வாறாக தாமஸ் அன்டிராபாலிஸ் [Andrapolis] என்ற இந்திய துறைமுகத்துக்கு வந்துசேர்ந்தார். அங்கு அவர் மன்னனுக்கு ஓர் அரண்மனை கட்டும் பணியில் அமர்த்தப்பட்டார். அப்பணத்தை தாமஸ் ஏழைகளுக்கு செலவழித்தார். மன்னன் அவரை சிறையிலடைக்க அவர் ஏசுவின் அருளால் தப்பினார்.அந்த அற்புதத்தை அறிந்த குந்தஃபார் மதம் மாறி கிறித்தவர் ஆனார். அங்கே பலரை மதம் மாற்றியபின் தாமஸ் இன்னொரு நாட்டுக்குச் சென்றார். போகும் வழியில் பலவிதமான மாயமிருகங்களையும் பேய்களையும் அவர் சந்தித்தார்.

மிஸ்தாய் [Misdai சிரிய மொழியில் [Mazdai] என்ற மன்னனின் நாட்டுக்கு அவர் வந்து சேர்ந்தார். அவனது மனைவி டெரிஷியாவையும் மகன் வாஸனையும்[Tertia/ Vazan] அவர் மதம் மாற்றினார். ஆகவே அவர் சிறைப்பிடிக்கப்பட்டு மரண தண்டனைக்கு விதிக்கப்பட்டார். நகர் அருகே இருந்த குன்றுக்கு அவர் கொண்டுசெல்லப்பட்டு கொல்லப்பட்டார்.அவரது சடலம் புராதன மன்னர்களின் கோபுரத்தின்கீழ் அடக்கம் செய்யப்பட்டது. பிற்பாடு அவரது ஆதரவாளர்களால் அவரது எலும்புகள் தோண்டி எடுக்கப்பட்டு எடெஸாவுக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இங்கு குறிப்பிடப்படவேண்டிய விஷயம் என்னவென்றால் கிபி 46ல் இமைய மலைக்கு தெற்கே ஆ·ப்கானிஸ்தான், பலுசிஸ்தான், பஞ்சாப் மற்றும் சிந்த் பகுதியை ஆண்டிருந்த மன்னனின் பேர் கோண்டோஃபெர்னிஸ் என்று கிரேக்க மொழியிலும் குதுஃபாரன் என்று அம்மொழியிலும் சொல்லப்பட்டது. [Gondophernes/Gudupharan] நாணயங்கள் மூலமும் கிரேக்க தொன்மக்கதைகள் மூலமும் இது ஓரளவுக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அந்த பகுதியின் மொழியான காரோஸ்தி [Kharoshthi ]யிலும் ஐதீகங்கள் காணப்படுகின்றன. இது ஏற்கனவே கண்ட மன்னன்தான் என்பதில் பெரிதும் விவாதமில்லை. தக்த்- இ- ·பாய் [Takht-i-Bahi] கல்வெட்டுகளின்படி அம்மன்னன் கிபி 20 முதல் கிபி 46 வரை ஆண்டான் என்பது நிபுணர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. மிஸ்தாய் என்பது இந்து பேர் ஈரானிய மொழிக்கு மாறியதாக இருக்கலாம். அப்படியானால் அது மதுராவை ஆண்ட வாசுதேவன் ஆக இருக்கலாம். கனிஷ்கருக்கு அடுத்தபடியாக பட்டத்துக்கு வந்த மன்னர் அவர். சிலபெயர்கள் பொருளில்லாதபடி உருவாக்கப்பட்டவையாகவும் இருக்கலாம்

ஆனால் தோமையர் இந்தியாவின் தெற்கே மேற்குக்கடற்கரைக்கு வந்தார் என்றும் இங்கேயே கொல்லப்பட்டார் என்றும் மிக தீவிரமான நம்பிக்கை உள்ளது. 1955 டிசம்பர் 18 ல் இந்திய தலைநகர் டெல்லியில் தோமையர் தினம் கொண்டாடப்பட்டபோது அப்போதைய இந்திய ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத் சொன்னார் ” புனித தோமையர் இன்று கிறித்தவ நாடுகளாக இருக்கும் பல நாடுகள் தோன்றுவதற்கு முன்னரே இந்தியக்கடற்கரைக்கு வந்தார். அவரிடமிருந்து தங்கள் கிறித்தவப் பாரம்பரியத்தை தொடங்கும் இந்திய கிறித்தவர்கள் ஐரோபிய நாட்டுக் கிறித்தவர்களை விடவும் பழைமையானவர்கள் ”

தோமையர் இந்தியா வந்து பத்தொன்பது நூற்றாண்டு தொடங்குவதை ஒட்டிய கொண்டாட்டத்தின் பகுதியாக புனித பாப்பரசர் பன்னிரண்டாம் பயஸ் 1952 டிசம்பர் 31ல் அனுபிய ரேடியோ செய்தியில் இவ்வாறு சொன்னார். ” புனித தோமையர் இந்தியா வந்து 1900 வருடங்கள் தாண்டிவிட்டன. பிந்திய பல நூற்றாண்டுக்காலம் இந்தியா மேற்கிலிருந்து துண்டிக்கப்பட்டிருந்தது. ஆயினும் இந்தியா தன்னுடைய முதல் அப்போஸ்தலரின் பாரம்பரியத்தை பேணிக்கோண்டது . இந்த அப்போஸ்தலரின் வழித்தோன்றல்களாக இன்று இந்தியாவில் உள்ள தோமையர் கிறித்தவ மக்களுக்கு எங்கள் சபையின் வாழ்த்துக்கள் ”

ஆனால் தோமையர் இந்தியா வந்தது உண்மையா என்ற ஐயம் வலுவானதே. காரணம் ஒன்று தோமையரின் வருகை இன்றும் ஓர் ஐதீக கதையாகவே உள்ளது. தோமையரின் வருகைக்கு ஆதாரமாகக் காட்டப்படும் எல்லா அமைப்புகளும் காலத்தால் மிகவும் பிற்பட்டவை.

மரபான நம்பிக்கைகளின்படி ஏசுவின் 12 சீடர்களில் ஒருவரான புனித தோமையர் கிபி 52ல் இந்தியாவுக்கு வந்தார். கேரளத்தில் அன்றிருந்த முக்கிய துறைமுகமான கொடுங்கல்லூரில் இறங்கினார். இது கொடுங்கோளூர் என்றும் வஞ்சி என்றும் அழைக்கபப்ட்டிருந்த துறைமுகம். சேரர்களின் பண்டைய தலைநகரம். சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு கோயில் எடுத்த இடம் இதுவே என்று ஆதாரபூர்வமாக சொல்லப் படுகிறது. அந்த கண்ணகி ஆலயமே இன்றுள்ள கொடுங்கல்லூர் தேவி கோயில் என்று வரலாறு கூறுகிறது. தோமையர் கேரள பிராமணர்களுக்கு ஏசுவின் நற்செய்தியைச் சொன்னார் என்றும் அவர்களில் பலர் மதம் மாறினார்கள் என்றும் கூறப்படுகிறது. அவர் ஏழு திருச்சபைகளை கேரள மண்ணில் உருவாக்கினாராம். அவை முறையே கொடுங்கல்லூர், கோட்டக்காவு, பாலயூர், கொல்லம், கோக்கமங்கலம், நிரணம் சேறயில் ஆகியவை. அவர் மலயாற்றூர் குன்றுகளுக்கு வந்து ஜெபம் செய்யும் பழக்கம் கொண்டிருந்தார் என்றும் சொல்லபப்டுகிறது. அதன் பின் அவர் கிழக்கு கடற்கரைக்கு இடம் பெயர்ந்தார். கிபி 72ல் அவர் சென்னைக்கு அருகே உள்ள புனித தோமையர் குன்று என இன்று அழைக்கப்படும் குன்றில் வாழ்ந்த போது ஒரு மதவெறியனால் கொல்லப்பட்டார். அவரது உடல் மைலாப்பூருக்குக் கொண்டுவரப்பட்டது. அங்கே அவர் அடக்கம் செய்யப்பட்டார். இன்றும் அவரது சமாதி அங்கே வழிபடப்படுகிறது.

உண்மையில் தோமையர் வந்திருக்க வாய்ப்புள்ளதா? உண்டு. அன்றைய கேரளக் கடற்கரைக்கும் மத்திய ஆசியாவுக்கும் இடையே நெருக்கமான உறவு இருந்தது. யவனர்களும் அராபியர்களும் தொடர்ந்து வணிக நோக்கத்துடன் கேரளத்துக்கு வந்தபடி இருந்தனர். இக்கடற்கரையில் இன்றும் குவியல் குவியலாக நாணயங்கள் கிடைத்தபடியுள்ளன. அதிகமும் ரோமாபுரி நாணயங்கள். அதற்கும் முன்பு கிமு 970 முதல் 930 வரை ஆண்ட இஸ்ரேலரின் சாலமோன் மன்னரின் மரக்கலங்கள் கேரளக் கடற்கரைக்கு வந்தபடி இருந்தன. அதற்கு புராதன பழைய ஏற்பாடு பைபிளிலேலேயே ஆதாரங்கள் உள்ளன. முசிரிஸ் என்று அப்போது குறிக்கப்பட்ட கொடுங்கல்லூரில் இருந்து முத்தும் மணிகளும் கோண்டுவரப்பட்டு மன்னருக்குப் படைக்கப்பட்டன. கேரளக்கடற்கரையிலிருந்து பெறப்பட்ட மிளகு முதலிய நறுமணப்பொருட்கள் அக்காலம் முதலே ஐரோப்பாவுக்கும் மத்திய ஆசிய நாடுகளுக்கும் மிகமிக பிரியமானவையாக இருந்தன. ரோமாபுரி பயணியும் வரலாற்றாசிரியருமான ப்ளினி [கிமு 23-79] ஒவ்வொரு வருடமும் பொன்னாகவும் மணியாகவும் பெருஞ்செல்வம் கேரளத்துக்குச் செல்வதைப்பற்றி வருந்தி எழுதியிருக்கிறார்.மலபார் பகுதிக் கப்பல்கள் பாரசீக வளைகுடா கடந்து சென்று வணிகம் செய்வதைப் பற்றியும் அவர் எழுதியுள்ளார். ப்ளினியைப் போலவே டாலமி [கிமு 100-160) மற்றும் பெரிப்ளூஸ் ஆகியோரும் சேரக்கடற்கரைக்கு மேலைநாடுகளுடன் இருந்த நெருக்கமான உறவைப்பற்றி எழுதியுள்ளனர். முதல் நூற்றாண்டுமுதலே கேரளத்தில் மட்டாஞ்சேரி என்ற இடத்தில் யூத குடியிருப்புகள் உருவாகிவிட்டன. சமீபகாலம் வரை யூதர்கள் ஒரு தனிச்சமூகமாக அங்கிருந்தனர்.அவர்களின் கோயிலும்[சினகாக்] அங்குள்ளது

இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் எழுதப்பட்டிருக்க வாய்ப்புள்ள யூதாஸ்- தாமஸ் குறிப்புகளின் படி முதல் நூற்றாண்டின் இறுதியில் புனித தோமையர் தன் சுவிசேஷங்களை குண்டபேர்ஸ் என்ற பார்த்திய மன்னரின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் செய்துகொண்டிருந்தார் .[Gundaphares,Parthian]. பாண்டிய மன்னரின் நிலமா இது என ஆராயலாம். இலக்கிய ஆதாரங்கள் தவிர இன்றும் எஞ்சும் தோமையர் மரபு கிறித்தவர்களின் [மார்த்தோமா கிறித்தவர்கள்] சமூகம் அவரது வருகைக்கான சிறந்த ஆதாரமாகும். இவர்கள் பாலையூர் , அர்த்தாடு, நிலம்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து கேரளம் முழுக்க பரவினார்கள். மயிலாப்பூரில் உள்ள தோமையரின் சமாதியும் பறங்கிமலை கோயிலும் இன்றும் உள்ளவை. இப்புனித அப்போஸ்தலரின் எலும்புகள் எடெஸ்ஸா என்ற என்ற ஊருக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

பிற ஆதாரங்கள்

ஈஸி·பஸ் [ Eusebius, கிபி நாலாம் நூற்றாண்டு] புனித ஜெரோம் [St. Jerome, கிபி342-420] ஆகியோரின் குறிப்புகளில் பாண்டேனியஸின் [Pantaenus] பயணம் பற்றி சொல்லப்பட்டுள்ளது. இவர் அலக்ஸாண்டிரியாவின் பிஷப் டிமிட்றியஸ் மூலம் இந்தியாவின் பிராமணர்களுக்கு கிறித்தவ மதத்தை கற்பிக்கும்பொருட்டு அனுப்பபட்டவர் . கிபி 190ல் எழுதப்பட்ட இக்குறிப்புகளில் சில மேலதிக ஆதாரங்கள் கிடைக்கின்றன. மேலைக்கடற்கரையில் வாழ்ந்த தோமையர் மரபு கிறித்தவர்களைப்பற்றி இவற்றில் சொல்லப்பட்டுள்ளது. புனித எஃப்ரம் [St. Ephrem கிபி 306-373] புனித கிரிகோரி [St. Gregory of Nazianze கிபி 324-390 ] புநித அம்புரோஸ் [ St. Ambrose கிபி 333-397] புனித ஜெரோம் [St. Jerome ஆறாம் நூற்றாண்டு] புனித கிரிகோரி [St. Gregory of Tours ஆறாம் நூற்றாண்டு] ஆகியோரின் குறிப்புகளிலெல்லாம் இந்தியாவில் கிறித்த்வம் இருந்தமைக்கான சான்றுகளும் தோமையர் பற்றிய குறிப்புகளும் உள்ளன என்று சொல்லப்படுகிறது.

மறுப்புகள்

ஆனால் தாமஸ் இந்தியாவில் ஊழியம்செய்தார் என்பதற்கோ கணிசமான இந்தியக் கிறித்தவர்கள் நம்புவதுபோல அவர் மேற்குக் கடற்கரையில் இறங்கி கிழக்கு கடற்கரையில் இறந்தார் என்பதற்கோ அவரை சென்னை மைலாப்பூருடன் தொடர்புபடுத்துவதற்கோ உறுதியான சான்றுகள் ஏதுமில்லை என்று சொல்லும் ஆய்வாளர்களும் உள்ளனர். எ·ப்ரம் சிரியக் , புனித கிரிகோரி , புனித அம்புரோஸ்,புனித ஜெரோம், புனித கிரிகோரரி ஆகியோர் இதைப்பற்றிய மேலோட்டமான குறிப்புகளை விட்டுச்சென்றிருந்த போதும் கூட அவை போதுமான ஆதாரங்களாக இல்லை. ஆனால் சென்னை பறங்கிமலை அல்லது புனித தோமையர் மலையில் கல்லாலன ஒரு சிலுவை உள்ளது. இதில் ப்லாவி [Pahlavi ] என்னும் தொன்மையான பெர்சியன் மொழியில் அமைந்த கல்வெட்டு உள்ளது. இது ஏழாம்நூற்றாண்டுக்கு முற்பட்டது. சிரிய மொழிச்சடங்குகளையும் சிரிய வேர்களையும் கொண்ட ஒரு கிறித்தவ சமூகம் மேலைக்கடற்கரையில் காணப்படுவதும் உண்மையே. இவர்கள் சிரியன் கிறித்தவர்கள் எனப்படுகின்றனர். இந்த சர்ச் உண்மையிலேயே புனித தாமஸ் அவர்களால் உருவாக்கப்பட்டதா என்பது இன்னும் குழப்பமானதே.

கிபி 325ல் நடந்த நைஸியா கவுன்ஸிலில் [Council of Nicea ] சிரிய-கால்டியன் பிஷப் ஒருவர் இந்தியா மற்றும் பாரசீகத்துக்கான பிஷப்பாக கலந்துகொண்டமைக்கு சான்று உள்ளது. அப்போதே இந்தியாவில் கிறித்தவர்கள் இருந்திருக்கக் கூடும். ஆனால் அவர்கள் தாமஸ் அவர்களால் மதம் மாற்றப்பட்டவர்களா? கிபி 745ல் தாமஸ் கானா [Thomas Cana] என்னும் போதகரின் தலைமையில் ஒரு சிரிய மதமாற்றக்குழு கேரளக்கடற்கரையில் பணியாற்றியுள்ளது. அவர் பேரைத்தான் புனித தோமையர் என்று இங்குள்ள கிறித்தவர்கள் சொல்லிக் கொள்கிறார்கள். அவர் கேரள மரபில் க்னாயி தொம்மன் என்று சொல்லபப்டுகிறார். இவ்வாறு இவ்விவாதம் தொடர்ந்து நடைபெறுகிறது. வரலாற்றாதாரங்களை விடவும் நம்பிக்கைகளுக்கே இங்கு அதிக முக்கியத்துவம் உள்ளது.

கத்தோலிக்க சபையால் உறுதியாகச் சொல்லப்பட சாத்தியமான தகவல் என்னவென்றால் ஆறாம் நூற்றாண்டு அளவில் காஸ்மோஸ் இண்டிகோப்லெய்ஸ்டஸ் [Cosmas Indicopleustes] மலபார் கடற்கரையில் [Male] கிறித்தவர்கள் இருந்தனர் அவர்களின் பிஷப் பாரசீகத்தில் பட்டமேற்றார் என்று குறிப்பிடுவதாகும். தோமையரின் எலும்புகள் நாலாம் நூற்றாண்டுவரை எடெஸ்ஸாவில் இருந்தன என்பதற்கு சான்று உள்ளன. அவை அங்கிருந்து சியோஸ் [Chios]க்கு 1258ல் கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து ஒர்டொனா [Ortona]வுக்கு கொண்டுசெல்லப்பட்டதாக ஆதாரப்பூர்வமாகச் சொல்ல முடியும். ஒரு தவறான புரிதலின் அடிப்படையில் தாமஸ் அமெரிக்காவுக்குச் சென்றதாக சிலர் நம்புகிறார்கள்.

ஆக்டா தோமா [Acta Thomae] வின் சுருக்கமான வடிவம் எதியோப்பிய மொழியிலும் லத்தீனிலும் உள்ளது. தோமையரின் சுவிசேஷம் என்ற வடிவில் எகிப்தில் காப்டிக் மொழி வடிவில் கிடைத்துள்ள நூலை கத்தோலிக்க திருச்சபை அங்கீகரிக்கவில்லை. தோமையரின் வெளிப்பாடுகள் [Revelatio Thomae] என்ற பேரில் கிடைக்கும் நூல் பாப்பரசர் கெலசியஸ்[ Pope Gelasius]அவர்களால் இறைமறுப்பு என்று விலக்கப்பட்டது. அதன் பல சிதைந்த வடிவங்கள் இப்போது பல இடங்களில் கிடைக்கின்றன.

ஆய்வாளர்களைப் பொறுத்தவரை புனித தாமையர் யார், அவர் இந்தியாவுக்கு வந்தாரா, இல்லையென்றால் கிழக்கே வந்த அவர் உண்மையில் எங்கு கிறித்தவச் செய்தியை பரப்பினார் என்பதெல்லாம் இன்றும் மர்மங்களே. அவரது இறைச்செய்தி பிற்பாடு கிறித்தவ தேவாலய அதிகார அமைப்பால் அங்கீகரிக்கபபட்ட இறைச்செய்திகளிலிருந்து தத்துவார்த்தமாக மாறுபட்டிருந்தது என்று இப்போது தெரிகிறது. அதனால்தான் அவர் வரலாற்றில் இருந்து மறைந்து போனாரா என்ன?

★...........★..........†.........★...........★

தமிழர்களுக்கு சிந்திக்கச் சொல்லி தந்த புனித தாமஸ்

இந்தியத் துணைக்கண்டத்தில் மனித இனம் உருவானது குமரிக்கண்டம் என்னும் லெமூரியாவில். இங்கே பழங்குடிகள் வாழ்ந்துவந்தார்கள். இவர்கள் பேசிய மொழி தமிழ். இவர்கள் கல்லையும் மண்ணையும் வழிபடுவதுபோன்ற மதப்பழக்கவழக்கங்களைக் கொண்டிருந்தார்கள். குமரிக்கண்டத்தில் இருந்து இவர்கள் வடக்கே பரவி வடக்கே உள்ள பிராகிருதம் போன்ற பண்படாத மொழிகளை உருவாக்கினார்கள். சிந்துசமவெளிநாகரீகம் அவர்களால் உருவாக்கப்பட்டதுதான். இவர்கள் சிவன் அல்லது பசுபதி போன்ற கடவுள்களை வழிபட்டார்கள். பண்பாட்டுவளர்ச்சி இல்லாத ஒரு வாழ்க்கை இங்கே நிலவியது. இக்காலத்தில் தமிழர்களின் ஆன்மவியல் [soulology]  வளர்ச்சியுறாத நிலையில் காணப்பட்டது.

இந்நிலையில் வடக்கில் இருந்து வந்த சமணர்களும் பௌத்தர்களும் தமிழர்களின் நிலத்தைக் கைப்பற்றி ஆண்டார்கள். தமிழர்களின் சிந்தனையையும் அவர்கள் அழித்தார்கள். அவர்கள் கடவுளை உணரக்கூடிய ஞானம் இல்லாதவர்கள்.இவர்களால் தமிழர்களின் ஆன்மவியல் முழுமையாக அழிந்தது. இக்காலகட்டத்தில் வடக்கே இருந்து வந்த அன்னியர்களான ஆரியர்கள் தமிழர்களின் பண்பட்டை அழித்து அவர்களை சாதிகளாகப் பிரித்து அவர்களை அடிமையாக்கி சுரண்டினார்கள்.

இந்நிலையில் கிறிஸ்துவின் சீடரான புனித தோமையர் [தாமஸ்] இந்தியாவுக்கு வந்துசேர்ந்தார். இவர் மேலைக்கடற்கரைக்கு வந்து அங்கிருந்து கீழைக்கடற்கரைக்கு வருகைதந்தார். அவர் கிறித்தவ ஆன்மவியலை தமிழர்களுக்கு கற்றுத்தந்தார். தமிழர்களின் தொன்மையான ஆன்மவியலில் கிறிஸ்தவத்தின் இறைச்செய்திகள் சில உள்ளன என்பதைக் கண்டுபிடித்து அதன் வெளிச்சத்தில் அவர் தமிழ்-கிறித்தவ ஆன்மவியலை உருவாக்கினார்.

அதை அரைகுறையாக புரிந்துகொண்டவர்களால்  அந்த தத்துவ சிந்தனைகள் திரிக்கப்பட்டன. இவ்வாறு திரிபுபட்ட கிறித்தவமே சைவம்,வைணவம் என்ற இருபெரு மதங்களாக உருவெடுத்தது. இதுவே பக்தி இயக்கம் ஆகும். இந்த பக்தி இயக்கமானது பௌத்தர்களையும் சமணர்களையும் துரத்தியது

புனித தோமையர் பிராமணர்களால் கொல்லப்பட்டார். அவர் கற்பித்த தமிழ்-கிறித்தவச் சிந்தனைகள் பிராமணர்களால் மேலும் திரிக்கப்பட்டன. அவ்வாறாக சைவத்தையும் வைணவத்தையும் பிராமணர்கள் கைப்பற்றிக் கொண்டார்கள். ஆதிக்கிறித்தவ சிந்தனைகளை அவர்கள் தங்களுடைய சிந்தனைகளாக மாற்றிக் கொண்டார்கள். இதன்பொருட்டு அவர்கள் சமசுகிருதம் என்ற மொழியை உருவாக்கினார்கள். இந்தமொழியில் வேதங்கள் உபநிடதங்கள் போன்ற நூல்களை எழுதிக்கொண்டார்கள். அவற்றில் உள்ள ஞானம் கிறித்தவ ஞானமே என்று வெளியே தெரியாமல் இருப்பதற்காக அவற்றை யாரும் கற்கக் கூடாது என்று சொன்னார்கள். சாதிப்பிரிவினைகளை நிலைநிறுத்திய அன்னியர்களான பிராமணர்கள் தமிழர்களை இந்தியா முழுக்க அடிமையாக்கி வைத்திருந்தார்கள்.

தமிழர் ஆன்மவியலின் மிகச்சிறந்த நூல் சிவஞானபோதம் ஆகும். இது புனித தாமஸால் கொண்டுவரப்பட்ட ஆதி கிறித்தவ சிந்தனைகளின் சற்று குறைப்பட்ட வடிவம். இன்று இந்துக்கள் சொல்லப்படுகிறவர்கள் உண்மையில் ஆதி கிறித்தவர்களே. இந்து என்ற ஒரு மதம் இல்லை. அப்படி ஒருமதம் இருப்பதாக எந்த ஒரு அறிஞருமே சொன்னதில்லை. அது ஆரிய பிராமணர்கள் சாதிபேதங்களை உருவாக்கும்பொருட்டு உருவாக்கிய பொய். ஆகவே சைவம் வைணவம்  என்ற இரு மதங்களைச் சேர்ந்த இந்துக்களை ஆதிகிறித்தவர்கள் அல்லது தாமஸ்கிறிஸ்டியன்ஸ் என்றுதான் சொல்லவேண்டும்.

சிந்துவெளியில் உள்ள நினைவுக்கல் வழிபாடானது பைபிள் கூறும் பெத்தேல் வழிபாடே ஆகும். கல்லில் எண்ணை ஊற்றி வழிபடுவது கிறித்தவத்தில் இருந்து வந்தது. பெத்தேலில் யாக்கோபால் நினைவுக்கல்லின் மேல் எண்ணை ஊற்றப்பட்டதை நினைவுகூரும்வகையில் ‘எண்ணை ஊற்றப்பட்டவர்’ என்ற அர்த்தம் வரும் சொல்லாகிய கிறிஸ்து என்பதால்தான் ஏசு அறியப்படுகிறார். அந்த வழிபாட்டை நாம் திராவிட [தமிழ்] வழிபாட்டில் காண்கிரோம்.ஆகவே திராவிட சமயம் என்பது கிறித்தவமே.

இயேசுகிறிஸ்து சாவைக்கொடுக்கும் சாத்தானை வென்று உயிர்த்தெழுந்து சாவின்மீது அடைந்த வெற்றியைத்தான் சற்றே உருமாறிய வடிவத்தில் சுடுகாட்டில் முயலகன் மீது சிவன் ஏறி ஆடும் நடனத்தில் காண்கிறோம். பெத்தேலின் நினைவுக்கல்லின் நினைவால் கிறிஸ்து ‘உயிருள்ள கல்’ என்று சொல்லப்பட்டார். அதிலிருந்து சிவலிங்க வழிபாடு தோன்றியிருக்கலாம். சிவலிங்க வழிபாட்டிலிருந்து சிவகுடும்ப வழிபாடு உருவானது. இது திருக்குடும்பம் என்ற கிறித்தவ கருத்தாக்கத்தின் விளைவேயாகும். பிதா சிவன் ஆகவும் சக்தி பரிசுத்த ஆவி ஆகவும் ஏசு முருகன் ஆகவும் உருமாற்றம் பெற்றார்கள்.

கிறித்தவத்தில் மகனாக அவதரித்த கடவுளுக்கு நான்கு குணங்கள் உள்ளன. சாத்தானை வென்றநிலை சூரனை வென்றநிலையாக மாற்றம் செய்யப்பட்டது. இறந்து உயிர்த்தெழுந்த நிலை தலைவெட்டப்பட்ட பிள்ளையாராக ஆகியது. உலகைப்படைத்த நிலை பிரம்மனாக ஆகியது. உலகின் ஒளியாக இருக்கும் நிலை மலைமீது ஒளியாக தெரியும் ஐயப்பனாக மாறியது. புனித தாமஸால் முன்வைக்கப்பட்ட ஆதிகிறித்தவ சிந்தனைகள் இவை என்று தெரியாதபடி பிராமணர்களால் இவை புராணங்களாக ஆக்கப்பட்டன.

இவ்வாறு சிவ வழிபாட்டில் பலதெய்வக் கோட்பாடு ஆரியர்களான பிராமண அன்னியர்களால் உருவாக்கப்பட்டது. அதை மீண்டும் தூய கிறித்தவ அடிப்படைகளின்படி திருத்தி ஓரு தெய்வக் கோட்பாட்டை நோக்கிக் கொண்டுவர எழுதப்பட்ட நூலே சிவஞானபோதம் ஆகும். திருமந்திரம் ‘அன்பும் சிவமும் இரண்டென்பார் அறிவிலார்’ என்று சொல்வது புனித தாமஸால் முன்வைக்கப்பட்ட  இந்த தூய கிறித்தவ கருத்தையே. அன்பு என்பது கிறித்தவக் கருத்து.

தாமஸ்கிறித்தவத்தின் செல்வாக்கினால் பௌத்தத்தில் மகாயானம் என்ற பிரிவு உருவானது. இதன் பிறகே பௌத்தத்தில் தத்துவ சிந்தனைகள் உருவாயின. புத்தரை ஏசுவைப்போன்ற ஒரு கடவுளாக ஆக்கினார்கள். புத்த மைத்ரேயர் என்ற கடவுள் உருவாக்கப்பட்டார். அவர் ஏசுவைப்போன்றே ஊழி முடிவில் பிறந்து வருவார் என்று சொல்லப்பட்டது. மகாயான பௌத்தத்தில் இருந்துதான் பௌத்த தத்துவங்கள் உருவாக்கி சீனாவுக்கு சென்றன. ஜென் பௌத்தம் அவ்வாறுதான் உருவாயிற்று

அதேபோல தாமஸ்கிறித்தவத்தின் செல்வாக்கினால் சமணத்தில் சுவேதாம்பரம் என்ற பிரிவு உருவாகியது. இதன் பின்னரே சமண மதத்திலும் தத்துவ சிந்தனை உருவாகியது. சமணர்கள் கிறித்துவ தீர்க்கதரிசிகளைப் பின்பற்றி தங்கள் தீர்த்தங்காரர்களை கற்பனைசெய்து அவர்களை வழிபட ஆரம்பித்தார்கள்.

கிறித்தவத்தில் இருந்து நான்கு அடிப்படைக் கோட்பாடுகள் தாமசால் தமிழர் ஆன்மவியலுக்குக் கொடுக்கப்பட்டன. மூவொருமைக் கோட்பாடு.[கடவுள் மூன்றாக இருப்பது ]அவதாரக் கோட்பாடு [கடவுள் பிறப்பது] பாவமன்னிப்பு கோட்பாடு. [கடவுளிடம் சரண் அடைந்து பாவத்தைக் களைவது] பலி நிறைவேற்றக் கோட்பாடு. [ஏசு பலியாகிவிட்டார்.ஆகவே இனி உயிர்பலி தேவையில்லை என்ற கோட்பாடு] பக்திவழி விடுதலைக் கோட்பாடு. இவற்றையே நாம் பக்தி இயக்கத்தின் சைவ வைணவ மதங்களில் காண்கிறோம். பக்தி இயக்கம் வழியாக இந்தியா முழுக்க இவை பரவி இப்போது இந்து மதமாக அறியப்படுகின்றன.

வேதங்களில் ஆரியர்கள் கிறித்தவக் கோட்பாடுகளை திருடி எழுதிவைத்திருக்கிறார்கள். பிரஜாபதி என்று வேதங்கள் சொல்வது கிறிஸ்துவையே

திருக்குறள் தாமஸ் கற்பித்த ஆதிகிறித்தவக் கருத்துக்களை முன்வைக்கும் ஒரு முழுமையான கிறித்தவ நூல் ஆகும். திருக்குறளின் பாயிரம் கிறித்தவர்களின் விசுவாசப் பிரமாணமே. அதேபோல சிவஞானபோதமும் ஒரு பற்றுறுதிப்பிரமாணமே.

இவ்வாறு இந்தியசிந்தனைகள் அனைத்தையுமே உருவாக்கிய தாமஸ் பற்றி இந்தியநூல்களில் எதிலுமே எந்தக்குறிப்பும் இல்லை. காரணம் ஆரிய பிராமணர்களின் சதியே.

பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பாவிலிருந்து தூய கிறிஸ்தவம் இந்தியாவுக்கு வந்தது. இந்த முழுமையான கிறித்தவத்தின் அடிப்படையில் திரிபு நிலையில் உள்ள் தமிழர்களின் ஆன்மவியலை நாம் திருத்தியமைக்க வேண்டும்.
***
இக்கருத்துக்களை நாம் டாக்டர் தேவகலா எம்.ஏ எம்.·பில் பி.எச்.டி எழுதிய ‘இந்தியா தோமாவழி திராவிடக் கிறித்தவ நாடே’ என்ற தமிழ் நூலில் தெளிவாகவும் விரிவாகவும் காண்கிறோம். இது தமிழ் கிறித்தவ ஊழியருக்கான சுருக்கக் கையேடு. இது ஆய்வளர் தெய்வநாயகம் அவர்களால் செயப்பட்ட ஆய்வுமுடிவுகளை ஊழியர்களுக்குக் கொண்டுசெல்லும்பொருட்டு அவரது மகளால் உருவாக்கப்பட்டது

கிட்டத்தட்ட ஒரு அதிகாரபூர்வ கையேடு இது. சென்னை -மயிலை கத்தோலிக்கப் பொறுப்புப் பேரயர் டாக்டர் லாரன்ஸ் பயஸ் அவர்கள் இதற்கு அளித்த முன்னுரையில் ‘இந்தியா தோமாவழி கிறித்தவ நாடே என்பதை டாக்டர் தெய்வநாயகம் ஆணித்தரமாக நிலைநாட்டியிருக்கிறார்’ என்று சொல்லி ‘சைவர் வைணவர் அனைவரும் மறைமுகக் கிறித்தவர்களே’ என்று சொல்கிறார். இந்தக் கருத்தை பிரச்சாரம்செய்வதற்கான பயிற்சி வகுப்புகள் மயிலை தாமஸ் ஆலயத்தில் நிகழும் என்றும் அதில் பங்குபெறுவோருக்கு வாழ்த்துக்கள் என்றும் சொல்கிறார்.

இந்திய சுவிசேஷத் திருச்சபை பேராயர் டாக்டர் எஸ்றா சற்குணம், சி.எஸ்.ஐ. தென்னை திருமண்டல பேராயர் அம்மா மறைதிரு ஜோன் தேவசகாயம் அவர்கள், சென்னை அப்போஸ்தல தலைமைபோதகர் பாஸ்டஎ எம்.கெ.சாம் சுந்தரம் அவர்கள், குருகுல் லுத்தரன் இறையியல் கல்லூரி முதல்வர் மறைதிரு மாணி சாக்கோ அவர்கள் ஆகியோர் இந்நூலின் ‘நிரூபிக்கப்பட்ட’ கருத்துக்களை வழிமொழிந்து இந்திய சிந்தனைகள் அனைத்துமே தாமஸிடமிருந்து உருவானவையே என்று சொல்கிறார்கள்.

ஆரியர்கள் என்று ஒரு இனம் இல்லை என்று டாக்டர் தேவகலா அவர்கள் சொல்கிறார்கள். இந்தியா மீது படைஎடுத்து வந்த பாரசீகர், கிரேக்கர்,சகர், குஷானர், ஹ¥ணர் ஆகியோர் கிபி ஏழாம் நூற்றாண்டில் மௌண்ட் அபு என்ற இடத்தில் கூடி அப்போது இருந்த திராவிட அரசனான ஹர்ஷவர்தனனைக் கொன்று ஆட்சியைப் பிடித்தார்கள். அவர்கள் தாங்கள் வெள்ளை நிறத்தில் இருந்தமையால் தங்களை ஆரியர் என்று சொல்லிக் கொண்டார்கள். அவர்கள் உருவாக்கிய நீதியே மனுநீதி

மனுநீதியின்படி ஆரியர் உயர்வானவர்கள். திராவிடர்கள் அவர்களுக்கு அடிமைகள். அப்படி அடிமையாக திராவிடர்கள் இருக்க வேண்டுமென்று கூறுவதே இந்துத்துவம் ஆகும் என்கிறார் டாக்டர் தேவகலா. இந்தக்கருத்தை வலியுறுத்துபவர்கள் பிராமணர்கள்.

பழந்தமிழ் இலக்கியங்கள் பத்துபாட்டு எட்டுத்ததொகை முதலியவை கிபி இரண்டாம் நூற்றாண்டில் ,அதாவது தாமஸ் வந்தபின் நூறுவருடம் கழித்து உருவானவை என்று டாக்டர் தேவகலா சொல்கிறார்கள். பழந்தமிழ் இலக்கியங்களில் ஆதன்- அவ்வை என்று சொல்லப்படுகிறவர்கள் ஆதாம் ஏவாள்தான் என்கிறார். தமிழ்ச் சொல்லாகிய அன்பு என்பதில் கிறித்தவத்துக்கே உரிய அன்பு என்ற நற்குணத்தின் சில பண்புக்கூறுகள் காணப்படுகின்றன என்பதை ஒரு முக்கிய ஆதாரமாக தேவகலா குறிப்பிடுகிறார். ஏறத்தாழ 300 பக்க அளவுள்ள இந்த நூல் இத்தகைய விரிவான ஆய்வுகளை முன்வைக்கிறது.

***

இது ஒரு தனிநபரின் ஆய்வோ, அல்லது சிறு குழுவின் கருத்துக்களோ அல்ல. இதற்கு தமிழகத்தின் செல்வாக்குள்ள எல்லா கிறித்தவ சபைகளும் வெளிப்படையான ஆதரவை தெரிவித்திருக்கின்றன என்பதைக் கண்டோம். சென்ற பத்து வருடங்களில் இக்கருத்தை பிரச்சாரம்செய்யும் ஏராளமான ஆங்கில தமிழ் நூல்கள் வெளியாகியிருக்கின்றன. பலநூறு துண்டுப்பிரசுரங்கள் வெளியாகி கிறித்தவ ஆலயங்களில் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. தமிழகக் கிறித்தவர்களில் உயர்கல்வி கற்றவர்கள் பழந்தமிழ் ஆய்வுசெய்தவர்கள் உட்பட பெரும்பாலானவர்கள் இந்தக் கோட்பாட்டை ஒரு நிரூபிக்கப்பட்ட வரலாற்று உண்மை என்றே எண்ணுகிறார்கள். உதாரணமாக குமரிமாட்டத்தின் பிரபல அறிவுஜீவியும் நவின இலக்கிய வாசகருமான பேராசிரியர் ஜேம்ஸ் ஆர் டேனியல் இக்கருத்தை ஒரு நூலில் வழிமொழிகிறார்! கிறித்தவப் பள்ளிகளில் இந்த வரலாற்றை அதிகாரபூர்வமற்ற வகையில் சொல்லியும் கொடுக்கிறார்கள்.

இந்த நூல்களை முழுக்க எனக்கு திரட்டி அளித்தவர் தக்கலையைச் சேர்ந்த லுத்தரன் சபையைச் சேர்ந்த கிறித்தவ ஊழியர் ஒருவர். நான் இவற்றைப் படித்தால் என்னுடைய வரலாற்றுப் பார்வையே மாறிவிடும் என்று சொன்னார். ஆனால் நான் படிக்க மாட்டேன் என்று சவால் விட்டார். படிப்பேன் என்று அவருக்கு உறுதி அளித்தேன். அவர் எனக்கு அளித்த பிற நூல்கள் இவை:

1. India is a Christian Nation- By. M.Sunder Yesuvadian [a] M.S.Mankad. [ Published by Anaryan Publications , Indian Anarya Samaj Trust, 16A, Chidambara Nathan Street, Ramavarma puram. Nagercoil 629001] இந்நூலுக்கும் முக்கியமான எல்லா கிறித்தவ திருச்சபை தலைவர்களும் முழுமையான ஆசியுரை வழங்கியிருக்கிறார்கள்.

2. Hindu Religion is the offshoot of St.ThomaS Dravidian Christianity- By Dr.Devakala [ Meypporul Publications 278, Konnur High Road,ayanapuram Chennai 600023]

3.Love Hindus. By M.Christopher MA LLB, Beniah Kallukatti, Kuzhithurai K K dist Tamilnadu 629163

4 தமிழர் சமயத்தை விடுவிக்கப்போவது யார்? பேராசிரியர் முனைவர் மு.தெய்வநாயகம் எம் ஏ.பி எச் டி [மெய்ப்பொருள் அச்சகம், 278, கொன்னூர் கைரோடு, அயனாவரம் சென்னை 600023 ]

மற்றும் பத்து துண்டுபிரசுரங்கள். பெரும்பாலும் ஒரே ஆதாரங்கள் ஒரே வரிகளினால் ஆனவை இவை. இந்நூல்களின் பின்னட்டைகளில் ஏராளமான பிற நூல்களைப்பற்றிய தகவல்கள் உள்ளன.
***
பேராசிரியர் ஜேசுதாசன் இந்தக் கருத்தமைவின் முக்கியமான தொடக்கப்புள்ளி. எஸ்.வையாபுரிப்பிள்ளை வழிவந்தவரான ஜேசுதாசனுக்கு பைபிளிலும் கம்பராமாயணத்திலும் இணையான ஈடுபாடு உண்டு. தமிழிலக்கியம் சார்ந்த வையாபுரிப்பிள்ளையின் காலக்கணக்குகளை பெரிதும் ஏற்றுக் கொண்டவர் அவர்.பேராசிரியர் தமிழிலக்கிய வரலாறு ஒன்றை ஆரம்பகாலத்தில் எழுதினார். பின்னர் அவரது முதியவயதில் அவரது உதவியுடன் ஹெப்ஸிபா ஜேசுதாசன் அந்த தமிழிலக்கிய வரலாற்றை ஆங்கிலத்தில் மூன்றுபாகங்களாக விரிவாக எழுதினார்.

அந்த தமிழிலக்கிய வரலாற்றின் பெயர் ‘Count Down From Solomon’ அந்நூலின் தலைப்¨ப்பபற்றிச் சொல்லும்போது தமிழிலக்கியம் பற்றிய ஆகப்பழைய குறிப்பு சாலமோனின் பாடல்களில் வருகிறது என்பதனால் அந்த தலைப்பை வைத்ததாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.பேராசிரியரின் நூலில் தாமஸ் இந்தியாவுக்கு வந்ததாகச் சொல்லப்படும் நம்பிக்கையை ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். அத்துடன் தமிழின் சிறந்த இலக்கியங்களில், குறிப்பாக திருக்குறளிலும் ஆழ்வார்பாடல்களிலும் உள்ள அறம் அன்பு பற்றிய தரிசனங்கள் கிறித்தவ விழுமியங்களுடன் ஒத்திசைந்து போகின்றன என்று சொல்லியிருக்கிறார். இது அவருடைய நோக்கில் இலக்கியத்தின் உச்சங்கள் இயல்பாகவே உயரிய மானுடவிழுமியங்களைச் சார்ந்து இருக்கும் என்பதன் வெளிப்பாடே.

இந்நூல்களை பேராசிரியர் ஜி.ஜான் சாமுவெல் வெளியிட்டார். அவர் அப்போது சென்னை ஆசியவியல் நிறுவனத்தின் தலைமைப்பொறுப்பில் இருந்தார். கடைசிக்காலத்தில் ஹெப்சிபா ஜேசுதாசன் இந்தியாவில் சிந்தனைகளை கிறித்தவம்தான் கொண்டு வந்தது என்று வாதிட ஆரம்பித்தார். அன்பு, பண்பு, அறம் போன்ற விழுமியங்கள் தமிழிலக்கியத்தில் உள்ளன , அவை சாத்தானால் ஆட்சி செய்யப்பட்ட தமிழ்நாட்டு பழங்குடி மனதில் உருவாக வாய்ப்பில்லை என்பது அவரது தர்க்க முறை.

ஜான்சாமுவேல் இங்கிருந்து ஆரம்பிக்கிறார். 2003ல் ‘தமிழகம் வந்த தூய தோமா’ என்ற நூலை அவர் எழுதினார். இந்தியச் சிந்தனைகள் அனைத்துமே தமிழகம் வந்த தோமஸால் உருவாக்கப்பட்ட¨வையே என்று அதில் வாதிடுகிறார். [ ஹோம் லேண்ட் பதிப்பகம். 23, திருமலைநகர் இணைப்பு, பெருங்குடி,சென்னை 600096 ]

இந்த கருத்தை ஜான்சாமுவேல் மற்றும் தெய்வநாயகம் இருவரும் வெற்றிகரமாக அமெரிக்க இவாஞ்சலிஸ்டுகளுக்கு கொடுத்து ஏற்கச்செய்தனர். பொதுவாகவே மதப்பரப்புதலுக்கு உள்ளாக்கப்படும் நாடுகளின் வரலாற்றை முழுமையாக மாற்றி எழுதுவது கிறித்தவ மரபு. அந்த மாற்றப்பட்ட வரலாற்றை அம்மக்களை ஏற்கசெய்யும்போதுதான் மதமாற்றம் நிரந்தரமாகும் என்று எண்ணுகிறார்கள்.

இந்த வரலாற்று மறு உருவாக்கத்தில் பொதுவாக இரு கூறுகள் செயல்படும். இவற்றை மிகமேலோட்டமாக சமகால ஆப்ரிக்க ஆசிய வரலாறுகளை அணுகினாலே காணமுடியும். ஒன்று அந்நாடுகளில் பண்பாடு, சிந்தனை, மெய்யியல் எதுவும் பூர்வீகமாக இருந்ததில்லை, கிறித்தவம் மூலமே அவை கொண்டுவரப்பட்டன என்று நிறுவுவது. மதம்மாறியவர்கள் அந்த அப்பழைய காலத்தை ‘இருண்டகாலம்’ என்று சொல்லத்தலைப்படுவார்கள்.

இரண்டு அந்த தேசத்தை இரு பெரும் இனப்பிரிவுகளாகப் பிரித்து அதில் ஒன்று இன்னொன்றை முழுமையாக அடக்கி ஆண்டது, அந்த நாட்டின் அனைத்து இழிவுகளுக்கும் அந்த அடக்கியாண்ட இனம்தான் காரணம் என்று நிறுவுவது. பலநாடுகளில் அப்படி குறிப்பிடப்படும் இரு இனங்களிலும் மக்கள் தங்களை மாற்றிக்கொள்ளக்கூட உரிமை இருக்கும்! உதாரணம் ரவாண்டாவின் டுட்சி-ஹடு இனங்கள். நைஜீரியா, சியரா லியோன் போல ஆப்ரிக்க நாடுகள் ஒவ்வொன்றிலும் மாற்றமே இல்லாமல் இதே வரலாற்றுபபணியை கிறித்தவ மதப்பரப்பாளர்கள் கடைபிடித்திருப்பதைக் காணலாம். அந்த வெறுப்புகள் பெரும் இனக்கலவரங்களாக வெடித்து ரத்த ஆறை ஓடவிட்டுக்கொண்டிருக்கின்றன.

ஜான்சாமுவேல்-தெய்வநாயகம் உருவாக்கிய இந்த வரலாற்று உருவகம் இவ்விரு அம்சங்களையும் தெளிவாகவே கொண்டிருப்பதைக் காணலாம். தமிழகத்தில் திராவிட இயக்கம் ஆரிய வெறுப்பை கால்டுவெல்லில் இருந்து கண்டெடுத்து முன்வைத்தது. அது தமிழகத்தில் புதிதல்ல என்றாலும் இந்நூல்களில் காணப்படும் அப்பட்டமான உக்கிரமான வெறுப்பு பீதியூட்டுகிறது. ஆரியர்களையும் பிராமணர்களையும் கிட்டத்தட்ட  ரத்தவெறிகொண்ட பேய்களைப்போல சித்தரிக்கின்றன இந்த நூல்கள். இரண்டாவதாக இந்தியாவில் உள்ள அனைத்துச் சிந்தனைகளையும் கிறித்தவமே கொண்டுவந்தது என்று வாதிடுகின்றன.

ஆகவே இந்தக் கருதுகோள் ஏற்கப்பட்டது. பெரும் நிதியுதவியுடன்  ‘இந்தியாவில் ஆதி கிறித்தவம்’ என்ற தலைப்பில் முதல் சர்வதேச கருத்தரங்கு ஜான்சாமுவேலை முதன்மை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு தெய்வநாயகம் மற்றும் தேவகலா ஆகியோர் முக்கியப்பங்காற்ற  2005 ல் நியூயார்க் நகரில் நடத்தப்பட்டது. நியூயார்க்கில் மதப்பரப்பு நிறுவனம் ஒன்றின் தலைவரான டாக்டர் சுந்தர் தேவப்பிரசாத் அதற்கான அமெரிக்க தொடர்பாளர்

கருத்தரங்க மலரில் ஆர்ச் பிஷப் ஆ·ப் காண்டர்பரியின் வாழ்த்துச்செய்தி உள்ளது. செனெட்டர் ஹிலாரி கிளிண்டனின் வாழ்த்துச்செய்தி, ஹெலென் மார்ஷல், பரோ ஆ·ப் குயீன்ஸ் நியூயார்க் அவர்களின் வாழ்த்துச்செய்தி, நியூயார்க் மேயரின் வாழ்த்துச்செய்தி, கவர்னர் ஜார்ஜ் படாகியின் வாழ்த்துச்செய்தி ஆகியவை உள்ளன.ஹிலாரி கிளிண்டன் நேரில்வந்து பங்கெடுத்தார். வழக்கம்போல இந்தியாவின் முக்கியமான எல்லா கிறித்தவ திருச்சபையில் இருந்தும் வாழ்த்துச்செய்திகள் உள்ளன. மலபார் சர்ச்சின் ஆர்ச் பிஷப், சிரியன் மலங்கர திருச்சபை ஆர்ச் பிஷப்,சி.எஸ்.ஐ பேராயத்தின் ஆயரின் வாழ்த்துச்செய்தி போன்றவை உள்ளன

அத்துடன் தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் வாழ்த்துச்செய்தியும் உள்ளது. தமிழக கிறித்தவத்தின் இருபது நூற்றாண்டுப்பழமையில் பெருமைகொள்வதாக சொல்லும் முதல்வர் அது ஒரு மிக அறிவார்ந்த நிகழ்வாக இருக்கும் என்று வாழ்த்துகிறார்.

மாநாட்டின் நோக்கம் முதலிலேயே ஜான் சாமுவேலால் தெளிவுறச் சொல்லப்பட்டுவிடுகிறது. தாமஸ்கிறித்தவமே இந்துமதம் என்றும் அதை ஆரியபிராமணர் அழித்தார்கள் என்பதும்தான் அது. தாமஸ் பற்றிய ஒரு துதியுடன் மலர் ஆரம்பிக்கிறது. குடுமி வைத்து பூணூல் போட்டு அரைநிர்வாணமாக தோன்றும் கொடூரமான ஒரு பிராமணன் காவி உடை அணிந்து முழந்தாளிட்டு ஜெபம்செய்யும் தாமஸை  பின்னாலிருந்து ஈட்டியால் குத்திக்கொல்லும் வண்ணச்¢த்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

இம்மாநாட்டில் சைவசித்தாந்தம் இந்துமதம் போன்ற தலைப்புகளில் மீண்டும் மீண்டும் தெய்வநயகமும் தேவகலாவும் கட்டுரைகள் சமர்ப்ப்பித்திருப்பதைக் காணலாம். அத்துடன் பெரும்பாலான கட்டுரைகள் ஒரே குழுவினரால் உருவாக்கப்பட்டவைபோல ஒரேவகையான திரிப்புகள் ஒரேவகையான சொற்றொடர்கள் மையக்கருத்துக்களுடன் காணப்படுகின்றன.

இந்த மாநாட்டில் ஹெப்ஸிபா ஜேசுதாசன் ‘Early Christianity in Tamil Nadu’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்திருக்கிறார். அதில் தமிழின் எல்லா பண்டைய இலக்கியங்களும் கிறித்தவ தாக்கத்தால் உருவானவையே என்று அவர் வாதிட்டிருக்கிறார்.

இரண்டாவது சர்வதேசக் கருத்தரங்கு ஜான் சாமுவேலை தலைமையாகக் கொண்டு ஜனவரி 2007ல் சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இதற்கு குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் வாழ்த்துரை வழங்கியிருக்கிறார். ஆர்ச் பிஷப் மயிலை-சென்னை ஏ.எம்.சின்னப்பா தொடங்கி ஏறத்தாழ எல்லா சபைத்தலைவர்களும் ஆசியுரை வழங்கியிருக்கிறார்கள். முதல் கருத்தரங்கு பெரும் வெற்றிபெற்று இந்தியவரலாற்றைப்பற்றிய மறுக்க முடியாத கருத்துக்களை நிறுவி விட்டது என்று சொல்லும் ஜான் சாமுவேல் அதை மேலும் விரிவுபடுத்தவே இந்த கருத்தரங்கு என்று குறிப்பிடுகிறார்.

டி.தயானந்தன் ·ப்ரான்ஸிஸ், எஸ்ரா சற்குணம், ஹெப்ஸிபா ஜேசுதாசன் போல தமிழில்பரவலாக அறியப்படும் கிறித்தவ சிந்தனையாளர்கள் அனேகமாக அனைவருமே இந்த அரங்கில் கருத்துக்களை முன்வைத்திருப்பதைக் காணமுடிகிறது. எல்லா கருத்துக்களும் ஒரே சாரம் கொண்டவை. ஹெப்ஸிபா கம்பராமாயணம் கிறித்தவ சாரம் கொண்ட நூல் என்கிறார்.

இப்போது இந்த கருத்தரங்குகளின் நீட்சியாக ‘தமிழர் சமய உலக முதல் மாநாடு’ 2008 ஆகஸ்டு 14 முதல் 17 வரை சென்னை- மயிலை உயர் மறைமாவட்ட அருட்பணி மையத்தில் [ரோஸரி சர்ச் சாலை சாந்தோம், சென்னை 600004] நடக்கவிருக்கிறது. மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் பேராயர் முனைவர் எ.எம்.சின்னப்பா [சென்னை மயிலை கத்தோலிக்க பேராயம். சாந்தோம்.சென்னை] முனைவர் மு.தெய்வநாயகம் நிறுவனர் உலக தமிழர் ஆன்மவியல் இயக்கம் சென்னை. துணைஆயர் முனைவர் லாரன்ஸ் பயஸ், முனைவர் தெ.தேவகலா அமைப்பாளர் உலகத்தமிழர் ஆன்மவியல் இயக்கம்.

இவ்வரங்கின் கோஷமாக முன்வைக்கப்படுவதை அதன் அறிவிப்பு இதழில் காண முடிகிறது. ‘ஓவ்வொருவரும் தன்மான உணர்வுடன் பிறப்பால் ஏற்றதாழ்வு கற்பிக்கும் இந்துத்துவாவின் பிடியில் இருக்கும் இந்து மதத்தைச் சார்ந்தவனாக தன்னைக் கூறாமல் தான் தமிழர் சமயத்தைச் சேர்ந்தவன் என்று அறிவித்து இந்துத்துவாவின் பிடியில் இருந்து விடுபட்டு தன்னுடைய பழைய சிறப்பு நிலைக்கு திரும்ப வேண்டும்’

அழைப்பிதழின் அட்டையில் உலக உருண்டைக்கு மேல் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற வரியும் ‘ஒன்றேகுலம் ஒருவனே தேவன் ‘என்ற வரியும் கொடுக்கப்பட்டுள்ளன. அழைப்பிதழிலேயே மாநாட்டில் பேசுபொருட்கள் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன. தமிழர் சமயம் என்பது தோமாகிறித்தவமே என்பதுதான் அது.

இந்த மாநாட்டுக்குப் பின் ஏறத்தாழ 100 கோடி ரூபாய் செலவில் தாமஸ் இந்தியாவந்தது, வாழ்ந்தது பற்றி ஒரு ஆங்கில-தமிழ் திரைப்படம் எடுக்கப்போவதாகவும் அதில் ரஜினிகாந்த், கமலஹாசன் உட்பட முக்கிய நடிகர்களை நடிக்கவைக்கப்போவதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

****

தத்துவ வரலாற்றுப் பரிச்சயமே இல்லாமல் , மிக எளிமையான தர்க்கங்களுடன் , கிட்டத்தட்ட கிறுக்குத்தனமாக உருவாக்கபப்ட்டுள்ள இந்த கருத்தமைப்பு குறித்து ஏன் இத்தனை எழுதவெண்டும் என்றால் இதன் பின்னணியில் உள்ள பணம் மற்றும் அமைப்புபலம்தான். ஜான்சாமுவேல் மற்றும் தெய்வநாயகம் மூளையில் உதித்த இந்தக் கரு இப்போது பலகோடி ரூபாய் புரட்டும் சக்தியுடைய ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது. தமிழ் அறிவுஜீவிகளில் பணத்துக்காகப் பேசாதவர்கள் மிகச்சிலரே.

இப்போதே அ.மார்க்ஸ் இந்தக் கருத்தரங்கில் பேசவிருப்பதாக எனக்கு இவ்விதழ்களை அளித்தவர் சொன்னார். அ.மார்க்ஸ் அவ்வளவு எளிதாக தன்னை முன்னிறுத்திக்கொள்ள மாட்டார் என்றே எண்ணுகிறேன். ஆனால் அவரையும்  தமிழில் புகழ்பெற்ற அறிவுஜீவிகளான எஸ்.வி.ராஜதுரை, தொ.பரமசிவன், ஞானி, தமிழவன், குமரிமைந்தன் போன்றவர்களையும் சாதாரணமாக இந்த அமைப்பு திரட்டிவிடமுடியும். அவர்களை உள்ளே இழுக்கவேண்டிய இடைவெளிகளை  இந்த கருத்தமைப்பு அதற்கான தந்திரங்களுடன் உள்ளே விட்டிருக்கிறது. ஏற்கனவே தமிழ்ச்சூழலில் பிரபலமாக உள்ள கருத்துக்களை எடுத்து சற்றே திரித்து தோமா வரை கொண்டுசெல்வது இதன் வழி.

உதாரணமாக இந்தியசிந்தனை முழுக்கவே குமரிக்கண்டத்தில் இருந்து வந்தது என்ற கருத்து குமரிமைந்தனுக்கோ ஞானிக்கோ உவப்பானதுதான். தமிழர்களின் சிந்தனையை ஆரியர் அழித்தார்கள் என்றோ இந்துஞானம் என்ற ஒன்று இல்லை என்றோ சொன்னால் தொ.பரமசிவம் அதை ஏற்றுப்பேசுவார்தான். அவர்களை உள்ளிழுக்கும்படி ஒரு பொதுவான தலைப்பில் ஓர் அரங்கை உருவாக்கி அதில் அவர்கள் தங்கள் இடத்தைமட்டும் பேசிவிட்டுச்செல்ல செய்தால்போதும். இயல்பாக அடுத்தபடிக்கு தெய்வநாயகமும் ஜான்சாமுவேலும் நகர்ந்தால்  இவர்கள் பேசாமலிருப்பார்கள்.

மெல்லமெல்ல இது ஒரு வலுவான தரப்பாக ஆகும். உதாரணமாக சமீபத்தில் ஒரு பேட்டியில் கமல்ஹாசன் சொன்னார். ‘திருவள்ளுவரை சிலர் சம்ணர் என்ற்கிறார்கள் சிலர் சைவர் என்கிறார்கள் சிலர் கிறிஸ்தவர் என்கிறார்கள்…’ என்று. 1970 களில் ஆர்ச்பிஷப் அருளப்பா காலத்தில் மோசடியாக செப்பேடு ஒன்று உருவாக்கப்பட்டு திருக்குறள் ஒரு கிறித்தவ நூல் என்று சொல்லப்பட்டது. பின்பு அது மோசடி என்று நிரூபிக்கப்பட்டது. ஆர்ச் பிஷப் மன்னிப்பு கோரினார். இன்று அது இயல்பான ஒரு வரலாற்று ஊகமாக ஆகிவிட்டிருப்பதை பாருங்கள்.

அதேபோல இந்திய மெய்ஞானம் முழுக்கமுழுக்க கிறித்தவர்களால், இல்லை தன்னந்தனியாக வந்த ஒரே ஒரு கிறித்தவரால், [தாமஸ் தனியாகவே வந்தார் என்கிறார் தெய்வநாயகம்] கொண்டுவரப்பட்டது என்பதும் தமிழ் வரலாறு பற்றிய பல கோட்பாடுகளில் ஒன்றாக ஆகிவிடும். மெல்ல பாடபுத்தகங்களில் இணைக்கவும் படும். அதை மறுப்பவர்களி இந்துத்துவர்கள், பார்ப்பனியர்கள், சாதியவாதிகள் என்றெல்லாம் முத்திரைகுத்தி வசைபாட ஆரம்பித்தால் ஐயங்கள்கூட மெல்ல இல்லாமலாகும்

***

உண்மையில் தாமஸ் இந்தியா வந்தாரா? வந்திருக்கலாம். ஆனால் ஓரளவேனும் பொருட்படுத்தும்படியான வரலாற்று ஆதாரம் ஏதும் இல்லை என்பதே உண்மை. இன்றுவரை அவரது வருகை அது ஒரு மதநம்பிக்கையாகவே உள்ளது. தாமஸ் பற்றி பொதுவாகவே அதிகம் தெரியாது. மிகவிரிவான கிறித்தவ ஆய்வுகள் நிகழ்ந்த மேலைச்சூழலில் அவரைப்பற்றி கத்தோலிக்க கலைக்களஞ்சியமே மிகக் குறைவான தகவல்களையே அளிக்கிறது.

பிற்காலத்தில் உருவான ஆக்டா தோமா என்ற சிறு நூலில் சில குறிப்புகள் உள்ளன. அதில் இருந்து அறியக்கூடியவை இவை. தாமஸ் கீழைநாட்டுக்கு மதத்தை பரப்புவதற்காக கிளம்பினார். அலக்ஸான்டிரியாவுக்கு வந்தார். ‘காப்டிக்’ திருச்சபையை நிறுவினார். அவர் ஆப்கானிஸ்தான் [காந்தாரம்] வழியாக இந்தியாவுக்கு நுழைந்தார். அதுவே இயல்பான பாதையாகும். அவர் அங்கே ஒரு மன்னனை மதம் மாற்றினார். கொல்லப்பட்டார். அவரது சடலம் மீண்டும் எடேஸாவுக்குக் கொண்டுபோகப்பட்டது. இதுவெ நமக்குக் கிடைக்கும் தகவல்.இதுகூட மிகப்பிற்காலத்தில் எழுதப்பட்ட ஒன்று.

ஆக்டா தோமா தான் தாமஸ் பற்றிய ஒரே ஆதாரம். அதில் தாமஸ் மிஸ்தாய் நாட்டின் மன்னனின் மனைவி டெரிஷியாவையும் மகன் வாசனையும் மதம் மாற்றினார். மன்னனால் சிறைப்பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். எப்போது இந்தக்கதை தாமஸ் பிராமணனால் கொல்லப்பட்டார் என்று மாறியது? ஏன்? இன்று எல்லா இடத்திலும் குடுமி வைத்த ஸ்மார்த்த பிராமணன் பிரார்த்தனை செய்யும் தாமஸை பின்னாலிருந்து குத்திக்கொல்லும் சித்திரமாக வரைந்து வைக்கப்பட்டுள்ளது!

நாணய ஆய்வுகளின் படி தாமஸ் வட இந்த்யாவுக்கு வந்திருக்கலாமென சில ஆய்வாலர் சொல்கிறார்கள். தென்னிந்தியா வந்தமைக்கு எந்த விதமான புறவய ஆதாரமும் இல்லை.  அவர்  இந்தியாவந்தார் என்ற நம்பிக்கை ஐரோப்பாவில் இருந்திருக்கிறது. பிற்காலத்தில் வாஸ்கோடகாமா முதலியோர் இந்தியா வந்தபோது இங்கே உள்ள கிறித்தவர்களைக் காண விழைந்திருக்கிறார்கள். இங்கெ மலபார் கடற்கரையில் ஒரு சிறு கிறித்தவ சமூகம் இருந்தது.அவர்களை அவர்கள் தாமஸ்கிறித்தவர்களாக அடையாளம் கண்டார்கள்.

ஆனால் அது பாரசீக வணிகர்களால் ஆன ஒரு சிறிய கிறித்தவக் குழுதான். தாமஸ் என்று அவர்கள் சொல்வது  ஏழாம் நூற்றாண்டில் மதமாற்றக் குழு ஒன்றை கொண்டுவந்த ‘கானா தோமா’ வையே என்று சில ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அதற்கான வாய்ப்புகளே அதிகம். ஏனென்றால் இன்றும் உள்ள மார்த்தோமா கிறித்தவர்களின் சபையும் பண்பாடும் பெரிதும் அராபியச் சாயல்கொண்டது. காப்டிக் சாயலே அதில் இல்லை. அவர்களின் போப் பாரசீகத்தில் பதவி ஏற்றார் என்று பண்டைக்கால குறிப்புகள் சொல்கின்றன [Cosmas Indicopleustes] ஆனால் அவர்கள் தாமஸால் மதமாற்றம் செய்யபப்ட்டவர்கள் என்று சொல்லப்படவில்லை.

பதினேழாம் நூற்றாண்டுக்குப் பின் தோமா கிறித்தவர்கள் தாங்கள் ஏசுவின் சீடரான தாமசால் மதமாற்றம்செய்யப்பட்டவர்கள் என்று நம்ப ஆரம்பித்தார்கள். சொல்லப்போனால் ரோமாபுரி கிறித்தவர்களான போர்ச்சுக்கல்காரர்களை எதிர்த்து தங்கள் தனித்தன்மையை தக்கவைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டதானால் அந்நிலைபாட்டை அவர்கள் ஏற்றார்கள் என்று சொல்லலாம். மிகப் பிற்காலத்தைச் சேர்ந்த சில தேவாலயங்களை தாமஸால் உருவாக்கப்பட்டவை என்று அடையாளம் சொல்வது அவர்களின் வழக்கம்.

சென்னைக்கு அருகே உள்ள புனித தோமையர் மலை தாமஸ் இருந்த இடமாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளது தாமஸ் அங்கே கற்சிலுவை ஒன்றை உருவாக்கினார் என்று சொல்லி சில கல்வெட்டுகளைக் காட்டுகிறார்கள். தாமஸின் காலத்தில் கிறித்தவ மதத்தில் சிலுவை வழிபாடு வேரூன்றவில்லை என்றும் புனித தாமையர் மலையில் உள்ள சிலுவையில் உள்ள எழுத்துக்கள் மிகவும் காலத்தால் பிந்தியவை என்றும் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அவ்வெழுத்துக்கள் இன்றுவரை அதிகாரபூர்வ புறவய ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. தாமஸ் தெற்கு அமெரிக்க நாடுகளுக்குச் சென்றதாககூட நம்பிக்கை உள்ளது.

தாமஸின் இந்திய வருகையை பற்றி மேலைநாட்டு ஆய்வாளர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. அதை ஒரு மதநம்பிக்கை என்று மட்டுமே கொள்கிறார்கள். பெரும்பாலான மதநம்பிக்கைகள் காலத்தால் பலவாறாக உருமாற்றப்பட்டவை. மொழியில் எவ்வகையிலோ இருந்துகொண்டிருப்பவை.

இந்திய நிலப்பகுதியில் வெளிநாட்டவர்கள் சரித்திரகாலம் முன்பே வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். கிரேக்கர்களும் ரோமர்களும் வந்திருக்கிறார்கள். அபிசீனியர்களும் அரேபியர்களும் வந்திருக்கிறார்கள். அவர்களின் சிந்தனைகள் இந்தியாவில் எந்த அளவுக்கு பாதிப்பைச் செலுத்தியிருக்கும்? இந்திய நூல்களைப் பார்க்கும்போது புறச்சிந்தனைகளின் பாதிப்பை பெரும்பாலும் காணமுடிவதில்லை. யவனர்கள் தமிழ்நாட்டில் காவலர்களாகவும் வணிகர்களாகவும் சகஜமாகப் புழங்கியிருக்கிறார்கள். ஆனால் சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாடில் எவரது சிந்தனைகளையும் நாம் தமிழிலக்கியத்தில் காணமுடியாது. மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டால் ஒழிய.

இதையே சீன சிந்தனைகளுக்கும் சொல்லலாம். நமக்கும் சீனாவுக்குமான உறவு என்பது மிகமிக தொன்மையானது. சீனப்பொருட்கள் இங்கே மிக விரிவாகப் பரவின. நம்முடைய தச்சு சாஸ்திரத்தின் சீனப்பாதிப்பு மிக விரிவானது. இருந்தும் சீனச் சிந்தனைகள் நம் இலக்கியங்கலில் துளியேயும் காணப்படுவதில்லை. உரையாசிரியர் குறிப்புகளில்கூட ஒரு பெயர் இல்லை. ஏன், நமது பண்டைய மொழியில் கிரேக்க,லத்தீன், அராமிக், சீன சொற்கள்கூட இல்லை. மீண்டும் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு தேவை.

ஏன்? இரு ஊகங்களைச் செய்யலாம். ஒன்று இங்கே சிந்தனையில் ஒருவகை செவ்வியல்தன்மை நிலவியது. செவ்வியல் எப்போதும் தன்னைத்தானே மீண்டும் மீண்டும் நிகழ்த்திக் கொண்டிருக்கும். நுட்பமான வித்தியாசங்களை உருவாக்குவதில் மட்டுமே கவனம் செலுத்தும். தமிழிலக்கிய வாசகன் எளிதில் இதைக் கண்டடையலாம். இந்த அம்சம் புறப்பாதிப்பை முழுமையாக உதாசீனம் செய்யும்.

இரண்டு, மலையாள வரலாற்றாசிரியர் பி.கெ.பாலகிருஷ்ணன் செய்யும் ஊகம். அதாவது நம் நாட்டுக்கு வந்த அன்னியர் கடலோரங்களில் தனிச்சமூகமாக வாழ்ந்துசென்றனர். அவர்களுக்கும் நம் சமூகத்தின் மையத்துக்கும் எந்தவிதமான உரையாடலும் நிகழவில்லை. இப்போதுகூட கடற்கரை நம் மையப்பண்பாட்டில் இருந்து மிக ஒதுங்கியதாகவே உள்ளது.

இதற்கு பி.கெ.பாலகிருஷ்ணன் ஒரு சான்று சொல்கிறார். [ஜாதி வியவஸ்தையும் கேரள சரித்ரமும்] அரேபியரும் கிரேக்கரும் ஒரே காலகட்டத்தில் மேற்குக் கடற்கரைக்கு வந்து சென்றார்கள். பலநூறு வருடம். கிரேக்கர்கள் நல்லமிளகை கேரளத்தில் கோழிக்கோட்டில் வாங்கினார்கள். போகும் வழியில் அரேபியாவில் இருந்து சுக்கு வாங்கினார்கள். அதை ஒரு அரேபியப்பாலைவன வேர் என்றே பலநூற்றாண்டுக்காலம் அவர்கள் நம்பினார்கள். ஆனால் அரேபியர்கள் சற்று கீழே கொல்லத்தில் இருந்து சுக்கு வாங்கிக்கொண்டுசென்றுதான் தங்கள் நாட்டில் வைத்து விற்றார்கள்.

அந்த அளவுக்கு அன்றைய உரையாடல் இருந்திருக்கிறது. கிரேக்கர்கள் தங்களுக்கு நல்லமிளகை விற்றவர்களிடம் பேசியே இருந்திருக்கமாட்டார்கள். நம் மரபை வைத்துப் பார்த்தால் அந்த வணிகத்தை நடத்த ஒரு தனி சாதி உருவாகியிருக்கும். அவர்கள் அதைச் செய்வார்கள். மற்றவர்களுக்கு தொடர்பே இருக்காது. ஆகவேதான் ஆயிரம் வருடம் கிரேக்கர் வந்து போன மலையாளச்சூழலில் ஒரு சிறு கிரேக்க தடையம் கூட கிடையாது, மொழியில் பண்பாட்டில். இப்படித்தான் நம்முடைய பண்பாடும் இருந்துள்ளது.

தாமஸ் வந்திருந்தால்கூட கடற்கரையோரம் மிகச்சிறிய ஒரு சமூகத்தை உருவாக்குவதுடன் அவரது பணி முடிந்திருக்கும். அவரது காலம் வரலாற்றுத் தொடக்க காலம். அவருக்குப் பின்பு, சாலைகளும் தொடர்புகளும் பலமடங்கு பெருகியபின், வந்த புனித சவேரியார் பல காலம் தமிழ் மண்ணில் வாழ்ந்திருக்கிறார். அவருக்கு தமிழிலக்கியத்தில் சிந்தனையில் பண்பாட்டில் உள்ள பங்களிப்பு என்ன? பைபிளின்படி தாமஸ்  தத்துவம்கற்றவர் அல்ல. ஆனால் சவேரியார் ஒரு தத்துவஞானி. சவேரியாரின் பணி கடலோரங்களில் தொடங்கி அங்கேயே முடிந்தது.காவரது பெயர்கூட நம் இலக்கியங்களில் இல்லை

அதேப்போல முகமது நபிக்குபின் நெடுங்காலம் முஸ்லீம்கள் இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்தார்கள். ஆனால் பதிமூன்றாம்ன் நூற்றாண்டில் அவர்கள் வட இந்தியாவிலிருந்து படையெடுபப்து வரை அவர்களின் பாதிப்பு தமிழ்ச் சிந்தனையில் மிகமிகக் குறைவே.

இந்த தர்க்கமெல்லாம் தெய்வநாயகம் போன்றவர்களின் கண்மூடித்தனமான பிரச்சார வேகம் முன் ஒன்றும் செய்யமுடியாது. ஆயினும் இதுவே சிந்திக்கும் பழக்கம் உடையவர்களுக்கான பதில். நாளை அவர்களின் மேடை ஏறி முழங்கப்போகும் தமிழ் திராவிட அறிவுஜீவிகளுக்கும் இதுவே விளக்கம்.

****

கிறித்தவ மரபில் தாமஸ் முக்கியமானவர் அல்ல. ஏனென்றால் அவர் கிறிஸ்துவை ஐயப்பட்டவர். இருந்தும் ஏன் அவரை திடீரென மீட்டெடுக்கிறார்கள்?

இந்திய பாரம்பரியம் கிறித்தவம் வருவதற்கு முன்பு சிந்தனையற்ற இருண்டகாலம் கொண்டிருந்தது என்று சொல்வதற்கு தடையாக உள்ளவை இங்குள்ள பேரிலக்கியங்கள். அவற்ரை மறைப்பது கடினம்.ஆகவே அவற்றின் காலத்தை பின்னுக்குத்தள்ளி கிறித்தவத்தின் வருகையை முன்னுக்குக் கொண்டுசெல்கிறார்கள். அதற்கு தாமஸ் தேவையாகிறார்.

தாமஸின் சுவிசேஷம் என்று ஒன்று எகிப்தில் நாக் ஹமாதியில் கிடைத்துள்ளது. [விவிலியத்தின் முகங்கள் – ஓர் அறிமுகம் ]பாப்பிரஸ் சுவடிகளில் எழுதப்பட்ட அந்தச்சுவடி கார்பன் டேட்டிங் முறைப்படி கிபி இரண்டாம்நூற்றாண்டுக்கு முந்தியதுதான் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. தாமஸ் எகிப்தில் வாழ்ந்தார் என்ற வரலாற்றுடனும் காப்டிக் சர்ச்சை நிறுவினார் என்ற வரலாற்றுடனும் அந்த விஷயம் பெருமளவு ஒத்துப்போகிறது. ஆய்வாளர் நடுவே அச்சுவடி ஒரு வரலாற்று ஆவணமாகவே கருதப்படுகிறது

அந்த சுவிசேஷத்தில் [மறைக்கப்பட்ட பைபிள் :தோமையர் எழுதிய சுவிசேஷம் ] தாமஸ் ஏசுவை ஒரு தேவனாக, கடவுளின் மகனாக முன்வைக்கவில்லை. மாறாக ஒரு ஞானகுருவாக முன்வைக்கிறார். கிறிஸ்து வானத்தில் உள்ள சொற்கத்தைப்பற்றி பேசுபவராக வரவில்லை, மண்ணில் உள்ள சொற்கத்தைப்பற்றி பேசுபவராக வருகிறார். பைபிளின் அதிகாரபூர்வ வரிகளில் இருப்பதைவிட ஆழமும் கவித்துவமும் கொண்டவையாக அவ்வரிகள் உள்ளன. நாக் ஹமாதியிலும் செங்கடல் பகுதிகளிலும் கிடைத்த பல பைபிள் வடிவங்களை வலுவான தொல்பொருள் சான்று இருந்த போதிலும்கூட கத்தோலிக்கத் திருச்சபை நிராகரித்துவிட்டது. ஆனால் எந்த உறுதியான ஆதாரமும் இல்லாமல் இந்தியப் பண்பாடே தாமஸ் என்ற தனிநபரால் உருவாக்கப்பட்டது என்று நிறுவ முயல்கிறது.

மதநம்பிக்கையை பேண எவருக்கும் உரிமை உள்ளது. தன் மதநம்பிக்கையை பரப்புவது ஒருவரது பிறப்புரிமை.. அதிலும் இஸ்லாமிய கிறித்தவ மதங்களில் அது புனித கடமையும்கூட. மதச்சார்பின்மை இந்தியமண்ணில் அதன் வீச்சை ஒருபோதும் இழக்கலாகாது என்று விரும்புகிறேன்..ஆகவே மதமாற்றமும் ஒரு இந்தியனின் பிறப்புரிமையே. முன்பு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் மதமாற்றத்தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டபோது அதை எதிர்த்து நடந்த கூட்டத்தில் நான் விரிவாகவே இதைப்பேசியிருக்கிறேன்.மதமாற்ற தடைச்சட்டமும் ஜனநாயகமும்

ஆனால் வரலாற்றுத்திரிபுகள், வெறுப்புப் பிரச்சாரங்கள் மூலம் அதைச்செய்ய நினைப்பது மிக ஆபத்தான போக்கு. கிறிஸ்து மனிதனாக வந்த இறைகுமாரன் என்ற உறுதியான நம்பிக்கை இவர்களுக்கு இருக்கும்பட்சத்தில் அந்த ஒரேவரியை சொல்லியே இவர்கள் தங்கள் மதத்தை பரப்பலாமே?

அதற்கும் அப்பால்சென்று கிறிஸ்துவின் சொற்களில் வெளிப்படும் மானுடநீதிக்கும் எளியவர்மீதான கருணைக்குமான குரலை இவர்கள் கேட்டிருந்தார்கள் என்றால் கிறிஸ்துவை முன்வைப்பதற்கு இத்தனை பொய்களைச் சொல்ல கூச மாட்டார்களா? தியாகத்தின் சிலுவையுடன் கிறிஸ்து வரட்டும், கள்ளநோட்டு எந்திரத்துடன் வரவேண்டாம்.

தாமஸ் வருகையைப்பற்றிய உங்கள் கட்டுரையையும் அதற்கு வந்த எதிர்வினைகளையும் படித்தேன். எனக்கு ஆச்சரியம் ஏதும் ஏற்படவில்லை. ஏனென்றால் இது உலகம் முழுக்க கிறித்தவ மதப்பரப்புனர்களால் [இவாஞ்சலிஸ்டுகள்] செய்யப்பட்டு வருவதுதான். அதை நீங்களே சொல்லிவிட்டீர்கள்.
பொதுவாக அவர்கள் இரு தேசத்தை கையிலெடுக்க முயலும்போது அத்தேசத்தின் பண்பாட்டு உள்விவகாரங்களை ஆழமாக கவனிக்கிறார்கள். பழைய சேசுசபை கடிதங்களில் இதற்கான ஆழமான முயற்சிகள் இருப்பதைக் காணலாம். அதன்பின்னர் அங்கே நட்புசக்தி பகைசக்தி என்று இரு வகைகளைக் கண்டுகொள்கிறார்கள். நட்புசக்திகளுக்கு ஆதரவான தொனியில் பகைச்சக்திகளை முழுமையான எதிர்களாக சித்தரித்து வரலாறுகளை உருவாக்குகிறார்கள். உடனடியாக ஒரு பெரும் கூட்டத்தின் உனர்ச்சிபூர்வமான ஆதரவு கிடைத்துவிடுகிறது.
ஒரு இனம் இன்னொரு இனத்தை முழுக்க அழித்து அடிமைப்படுத்தி அனைத்து துயரங்களுக்கும் காரணமாக இருந்துள்ளது என்று வரலாறுகளை உருவாக்குவார்கள். இந்தப் பிரிவினையை எப்போதுமே பிறப்பு அடிப்படையில்தான் நிகழ்த்துவார்கள். மொழி போன்ற மாறுதன்மை உடைய அடையாளங்களின் அடிப்படையில் செய்ய மாட்டார்கள். டுட்சி – ஹ¥டு இனப்பிரிவினை இவ்வாறு உருவாக்கப்பட்டதே. இவ்வாறு ஆப்ரிக்கா முழுக்க எல்லா நாடுகளிலும் இனப்பிரிவினைகளைச் செய்திருக்கிறார்கள். இன்று ரவாண்டா முதலிய நாடுகளில் ஒழுகும் குருதி இவ்வாறு தொடங்கப் பட்டதேயாகும். இந்தப்போர்கள் இன்றுவரை ஐரோப்பிய நாடுகளுக்கு ஆயுதச்சந்தைகளை உருவாக்கி பெரும் செல்வத்தை ஈட்டித்தருகின்றன.
எங்கும் எப்போதும் கிறித்தவ அன்பு என்பது போதிக்கப்பட்டதில்லை. முழுக்கமுழுக்க வெறுப்புப் பிரச்சாரத்தின் அடிப்படையிலேயே அனைத்தும் நிகழ்ந்தன என்பது மேலைநாட்டிலேயே பலநூறு ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்ட வரலாறு. அவற்றுக்கு எதிரான மனசாட்சிக்குரல் இன்று ஐரோப்பாவில் எழ ஆரம்பித்துள்ளது. இன்னும் சில வருடங்களில் கத்தோலிக்க சபை மன்னிப்பு கோரத்தான் போகிறது.
இந்தச் சந்தர்ப்பத்தில் நீங்கள் இழிவுபடுத்தப்பட்டு புண்படுத்தப்பட்ட ஆப்ரிக்காவை நினைவுகூர வேண்டும் என்றும் அவர்களைப்பற்றி நாம் கொண்டுள்ள தவறான பிம்பங்களுக்காக வெட்கப்படவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். ஆப்ரிக்கர்களின் வரலாறு மதப்பரப்புநர்களால் திரிக்கப்பட்டது. அவர்கள் வெறும் காட்டுமிராண்டிகளாகவும் மனிதமிருகங்களாகவும் உலகின் முன் காட்டப்பட்டார்கள். ஆப்ரிக்கா கண்டுபிடிக்கப்பட்டது என்றும் அது இருண்ட கண்டம் என்றும்தான் நாம் இன்றும் நம் பாடநூல்களில் படிக்கிறோம்
ஏராளமான பயணக்கட்டுரைகள்,நாவல்கள், திரைப்படங்கள் வழியாக ஆப்ரிக்க மக்கள் பற்றிய இச்சித்திரம் கட்டமைக்கப்பட்டது. உயிருடன் மனிதனைப்பிடித்து பானையில்போட்டு வேகவைத்து தின்னும் ஆப்ரிக்கப் பழங்குடிகளைப்பற்றிய எத்தனை சினிமாக்களை நாம் கண்டிருப்போம். அவர்கள் அப்படிப்பட்டவர்கள்தாமா, யார் அந்த சித்திரங்களை உருவாக்கினார்கள் என்று சிந்தித்திருக்கிறோமா? ‘டார்ஜானை’யும் ‘·பான்ற’த்தையும் உருவாக்கியவர்களின் மனநிலையை பற்றி ஆராய்ந்திருக்கிறோமா?
‘புண்படுத்தப்பட்ட கண்டம்’ என்றுதான் ஆப்ரிக்காவைச் சொல்லவேண்டும். 1980 களுக்குப் பிறகு மிகமிகத்தாமதமாகவே ஆப்ரிக்கா தன்னை மெல்லமெல்ல கண்டடைய ஆரம்பித்திருக்கிறது. ஆப்ரிக்காவைப்பற்றி நம்மிடம் உள்ள அதே மனப்பிம்பம் தான் நம்மைப்பற்றி ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உருவாக்கப்பட்டுள்ளது. பாம்¨ப்பம் யானையையும் எருமையையும் பசுவையும் கும்பிடக்கூடிய, சிந்தனைத் திறனும் ன் இல்லாத, அசுத்தமான, பண்படாத மக்கள் என்று. தாமஸ் என்ற தனிமனிதர் இந்தியப்பண்பாட்டையும் சிந்தனைகளையும் உருவாக்கினார் என்று சொல்லும்போது அதை எப்படி ஹிலாரி கிளிண்டனோ மற்றவர்களோ நம்புகிறார்கள்? காரணம் இதுதான்.
சமீபகாலமாக இந்திய பேரிலக்கியங்கள் எளிதில் கிடைக்கின்றன. அவற்றைப்பற்றிய எளிய அறிமுகம் சராசரி வெள்ளையனுக்குக் கிடைக்கிரது. ·ப்ரிஜோ காப்ராவின் ‘தாவோ ஆ·ப் ·பிசிக்ஸ்’ போன்ற பிரபல நூல்கள் இதற்கு முக்கியமான காரணம். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பெருகிவரும் ஏராளமான யோகா பள்ளிகள் இன்னொரு காரணம். ஆகவே ஐரோப்பிய பதப்பரப்புநர்கள் உருவாக்கியதே இந்தியப்பண்பாடு என்று இனிமேல் சொல்ல முடியாது. ஆகவே தாமஸை கண்டெடுக்கிறார்கள். அனைத்து நூல்களும் வெளியே இருந்து வந்த பாதிப்பின் விளைவே என்றும் ‘திரிக்கப்பட்ட கிறித்தவ ஞானம்தான் அவை’ என்றும் சொல்ல முயல்கிறார்கள். இதற்காக பெரும் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் இந்த வேலை நடைபெறுகிறது.
இந்த கருத்தியல் ஆதிக்கத்தை மதப்பரப்புநர்கள் ஒருபோதும் விவாதங்கள் மூலம் செய்வதில்லை. தீவிரமான ஒட்டுமொத்தமான உலகுதழுவிய சலியாத நெடுங்காலப் பிரச்சாரம் மூலமே செய்வார்கள். ‘நட்பு’சக்திகளை தங்களுடன் சேர்த்துக் கொள்வார்கள். அப்படி அவர்கள் சேர்த்துக்கொள்ளக்கூடிய எளிய இலக்கு இங்குள்ள தமிழாய்வாளர்கள்தான். தாழ்வு மனப்பான்மை காரணமாக இந்தியாவே தமிழர்களால் உருவாக்கப்பட்டது என்று இவர்கள் சொல்கிறார்கள். ஆமாம், அந்த தமிழர்களுக்கு தாமஸ்தான் சொல்லிக்கொடுத்தார் என்றால் ஒப்புக்கொள்வார்கள். ஆகவேதான் இந்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.
இன்றைய சூழலில் நாம்  என்ன செய்ய முடியும்? பொதுவாக நாம் எதுவுமே செய்வதில்லை. நமக்குள் சண்டைபோடுவோம். செய்யவேண்டுமென்றால் உடனடியாகச் செய்யவேண்டியது ஒன்று உண்டு. இன்று கிறித்தவ பதப்பரப்பிய [இவாஞ்சலிசம்] செயல்பாடுகளுக்கு எதிராகப் பேசக்கூடிய ஏராளமான பிரபலமான இணையதளங்கள் உண்டு. ஆய்வுக்குழுக்கள் உண்டு. அவற்றுக்கு இந்த மோசடிகளைப்பற்றி எழுதலாம். ஏன், நீங்கள் எழுதிய கட்டுரையைக்கூட மொழியாக்கம் செய்யலாம். தொடர்ச்சியாக இந்த மோசடிகளை வெளிப்படுத்தியபடியே இருக்கலாம்
செல்வக்குமார்
சென்னை
[தமிழாக்கம்]
***
அன்புள்ள ஜெயமோகன்,
உங்கள் கட்டுரை படிந்தேன். இது குறித்து சில விஷயங்கள் சொல்ல விரும்புகிறேன்.
1.நீங்கள் ஜெகத் கஸ்பார் என்ற பெயரை விட்டுவிட்டிர்கள். இன்றைய தாமஸ்கிறித்தவப் பிரச்சார திட்டத்திற்கு ஒரு முக்கியமான முனையில் அவரும் இருக்கிறார் என்று ஐயப்படவேண்டியுள்ளது. இந்த அரசுக்கு மிக நெருக்கமானவர். பெரும் பணம் அவரிடம் இருக்கிறது. கனிமொழியுடன் இணைந்து சென்னைசங்கமம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்துகிறார்.
இளையராஜா இசையமைத்த ‘திருவாசகம்’ முழுக்கமுழுக்க இந்த ‘தாமஸ்கிறித்தவ’ கருத்துப்பிரச்சாரத்துக்காக உருவாக்கப்பட்டதே. அது தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்யப்படவில்லை. ஆனால் அமெரிக்க மதம்பரப்பு நிறுவனங்களில் அது திரும்பத்திரும்ப சைவம் என்பது திரிக்கப்பட்ட கிறித்தவமே என்ற கூற்றுக்கு ஆதாரமாக முன்வைக்கப்படுகிறது. அதற்குரிய பாடல்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ஆங்கில மொழிபெயர்ப்பு பைபிள் மொழியில் செய்யப்பட்டுள்ளது. காஸ்பல் இசை அதற்கு போடப்பட்டுள்ளது
2. தமிழ்நாட்டில் எல்லா பல்கலைகளிலும் ஒரு ‘கிறித்தவ ஆய்வு மையம்’ [செயர்] அமைக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. ஆசியவியல் நிறுவனத்தில் அமைக்கப்பட்டுவிட்டது. சமீபத்தில் துணைவேந்தர் சிந்தியா பாண்டியன் [பீட்டர் ஹென்றி பாண்டியனின் மனைவி] முயற்சியால் மனோன்மணியம் பல்கலையில் அது அமைந்துள்ளது.எல்லா இடங்களிலும் தோமாகிறித்தவ கருத்துக்கான ஆய்வுகள் தொடங்கப்படவுள்ளன.
ஜெ.சிவசுப்ரமணியம்
நெல்லை [மொழியாக்கம்]
****
ஜெயமோகன்,
உங்கள் கட்டுரையில் தாமஸ் பிராமணர்களால் கொல்லப்பட்டது பற்றிய கிறித்தவப்பிரச்சாரத்தின் பொய்யை சுட்டிக் காட்டியிருந்தீர்கள். இந்தப்பொய் மிகச்சமீபமாக- முக்கால் நூற்றாண்டுக்குள்- புனையப்பட்டதாகும். அதாவது பிராமண எதிர்ப்பு அரசியல் தமிழ்நாட்டில் உருவான பிறகு.
இந்தப்பிரச்சாரத்தின் அபாயத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பொதுவாகவே கிறித்தவ பிரச்சாரகர்கள் அவர்கள் மதம் மாற்றச்சென்ற மக்கள் மிகவும் காட்டுமிராண்டிகள் என்று காட்டுவார்கள். அவர்களிடம் ஏசுவைப்பற்றிச் சொல்லப்போய் கடுமையான துயரங்களை அவர்களின் அப்போஸ்தலர்களும் புனிதர்களும் அடைந்ததாகச் சொல்வார்கள் , அதைப்பற்றிய கொடூரமான கதைகளை புனைவார்கள். அந்தப் புனிதர்களின் படங்களை வைத்து வழிபடுவார்கள்.
ஆனால் இந்தியா வந்த கிறிஸ்தவ மதப்பிரச்சாரகர்கள் முழுக்க முழுக்க மரியாதையாக நடத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் எளிய மக்களால் மரியாதையாக நடத்தப்பட்டிருக்கிறார்கள். வீரமாமுனிவர், கால்டுவெல்,சீகன்பால்கு, ரிங்கல் தௌபே போன்று எல்லாருமே மக்களால் மதிக்கவே பட்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் அவர்கள் இம்மக்கள் வழிபடும் கோயில்களை அவமதித்திருக்கிறார்கள். சாமிகளை உடைக்க முற்பட்டிருக்கிறார்கள். இழிவுசெய்து பேசியும் இருக்கிறார்கள். இதை அவர்களே விரிவாக பதிவும் செய்திருக்கிறார்கள். எவருமே அவற்றை வாசிக்கலாம். ‘இந்திய மக்கள் மரியாதையாக நடத்துகிறார்கள், சொன்னால் கேட்டுக்கொள்கிறார்கள், கிறித்தவ மதக்கருத்துக்களை மட்டும் ஏற்றுக்கொள்வதில்லை’ என்றே இவர்கள் எழுதுகிறார்கள்.
இந்தியாவில் கிறித்தவ மதபோதகர்கள் பல்லாயிரம்பேர் வந்து பல வருடம் பணியாற்றியபோதும் கொல்லப்பட்டவர்கள்  மிகமிகக் குறைவே. அதுவும் கூட உள்ளூர் அரசியலில் ஈடுபட்டமையினால்தான். அவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இந்தியாவை பெரும்பாலும் இழிவான மொழியில் வர்ணித்த சேசுசபை பாதிரிமார்களின் கடிதங்களில் எங்குமே இங்கே தாக்குதல்கள் நிகழ்ந்ததாக இல்லை.
ஆனால் சவேரியார் போன்ற புனிதர்கள் இந்தியாவில் கோவா இன்குவிசிஷன் போன்ற கொடூரமான சித்திரவதைக் காலங்களை உருவாக்கியிருக்கிறார்கள். பல்லாயிரம்பேர் வதைக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள். பல்லாயிரம்பேர் கோவாவை விட்டு ஓடினார்கள். இன்று மேற்கு கடற்கரை முழுக்க சிதறி வாழும் கொங்கணிகள் அப்போதைய அடக்குமுறையின் சாட்சிகள். கிறித்தவ ஆவணங்களில் இருதே இன்குவிசிஷன் பற்றிய தகவல்கள் எடுத்து விரிவாக வெளியிடப்பட்டுள்ளன.
ஆகவேதான் புராண காலத்துக்குப் போய் வராத தாமஸை பிரார்த்தனை வேளையில் பிராமணர் பின்னாலிருந்து குத்திக் கொன்றார்கள் என்று ஒரு கொடூரமான கதையை உருவாக்குகிறார்கள். அந்தப் பிராமணர் பின்னர் ஒரு சுவிசேஷகரைக்கூட கொல்லவில்லை! பிராமண அதிகாரம் மூத்து நின்ற நாயக்கர் ஆட்சியில்கூட அப்படிச் செய்யவில்லை! என்ன ஆச்சரியம்!
இந்த தாமஸ் கொலை கட்டுக்கதை பலகோடி ரூபாய்செலவில் உலகம் முழுக்க கொண்டுசெல்லப்படும். திரைப்படம் மூலம் நமக்கே சொல்லித்தந்து நம் மக்களே நம்புவார்கள். விளைவாக இந்தியாவும் சுவிசேஷகர்களை கொடுமைப்படுத்திய காட்டுமிராண்டி நாடுதான் என்று சித்தரிக்கப்படும்
பிராமணனைத்தானே சொல்கிறார்கள், சொல்லட்டும் என்று நினைக்கும் நம்முடைய அறிவுஜீவிகள் இதன் மூலம் தமிழகம் களங்கப்படுத்தப்படுவதை உணர்வதில்லை. வந்தாரை வரவேற்ற தமிழ்ப்பண்பாடு கேவலப்படுத்தப்படுவதை புரிந்து கொள்வதில்லை. காரணம் கண்மூடித்தனமான வெறுப்பு. இதுதான் அறியாமையின் கொடுமை என்பது!
சாரநாதன்
சென்னை[மொழியாக்கம்]















































(முற்றும்)

விஷநரி-மிஷினரி => இந்திய மதங்களின் கலாச்சாரம் மீதான படையெடுப்பு... (பாகம் -5.)

விஷநரி-மிஷினரி => இந்திய மதங்களின் கலாச்சாரம் மீதான படையெடுப்பு...
(பாகம் -5.)

பாகம் - 1.

பாகம் - 2.

பாகம் - 3.

பாகம் - 4.


கிறிஸ்தவ இஸ்லாம் மோதல் - நசுங்கும் அப்பாவிகள்

ஆயிரங்காலத்து போர் இந்த கிறிஸ்தவ இஸ்லாம் மோதல். இயேசு பிறப்பதற்கு முன்னர் இந்த உலகம் மிகவும் அமைதியாக இருந்தது. இயேசு என்ற நல்ல மனிதர் வெறி பிடித்த மனித மிருகங்களை திருத்த முயற்சி செய்தார். ஆனால் கடைசியில் அந்த மிருகங்கள் இயேசுவின் பெயரை சொல்லியே சாத்தான் வேலைகளை ஆரம்பித்து விட்டன. இஸ்லாமியர்களின் குணங்களை கேட்கவும் வேண்டுமா ? இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர்கள் தானே ?

கேட்பதற்கு சிறு பிள்ளை தனமாகத்தான் இருக்கும். ஆனால் அது தான் உண்மை. உலகை யார் பெருமளவு ஆக்கிரமிப்பு செய்வது ? இந்த ஒரே கேள்விக்கு பதிலாக பல போர்கள், எண்ண முடியாத அளவு பணம் செலவு, பலருக்கு இதே முழு நேர தொழில் என்றால் கூத்தாகத் தான் இருக்கிறது. கிறிஸ்தவர்களுக்கும் துலுக்கர்களுக்கும் (இஸ்லாமியர்களை எங்கள் திருநாட்டில் இப்படித்தான் சொல்வார்கள்) இரண்டாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து போர். இன்றும் இந்த போர் இஸ்ரேல் பாலஸ்தீனியர்களுக்கிடையே நடந்து வருகிறது. போரை ஏவும் ஆட்கள் பல்வேறு கண்டத்தில் இருந்து செயல்படுகிறார்கள். அமெரிக்கா 'கொண்டாடும்' நயன்-இலெவன் நியூயார்க் இரட்டை கோபுர கட்டட தகர்ப்பு ஏதோ திடீரென்று நேற்று நடைபெறவில்லை. பல்லாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் போரில் தற்போதைய திருப்பம். அவ்வளவு தான்.

கிறிஸ்தவர்களும் துலுக்கர்களும் இந்த உலகில் யார் மக்கள் தொகையில் அதிகம் இருப்பது என்ற போட்டி ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலே இருந்து வருகிறது. இருவரும் தங்கள் இனத்தை பெருக்க பல்வேறு வழிகளை கையாண்டனர். இதில் முக்கியமான வழிகளை மட்டும் பார்ப்போம். இன்று இந்தியாவில் எந்த ஒரு நகரத்திற்கும் சென்று துலுக்கர்கள் வாழும் தனி தெரு (இதற்கு பெரும்பாலும் முஸ்லீம் தெரு) விற்கு சென்றால் தெரியும். 5 பன்றிகுட்டிகள் வாழும் இடத்தில் 50 துலுக்கர்கள் வாழ்ந்து கொண்டிருப்பார்கள், உயிரோடு தான். முஸ்லீம் தெருவில் நடந்து செல்ல கூட இடம் இருக்காது. முதலில் முஸ்லிம் தெரு பக்கமே மூக்கை திறந்து கொண்டு போக முடியாது. இதை மறுப்பவர்கள் யாராவது இருந்தால், தைரியம் இருந்தால் ஏதாவது ஒரு முஸ்லீம் தெருவுக்குள் நுழைந்துவிட்டு முடிந்தால் திரும்பி வாருங்கள். உதாரணத்திற்கு, பெங்களூருவில் உள்ள கலாசிபாளையம் இல்லை ஏதேனும் ஒரு முஸ்லீம் சந்துக்குள் சென்று முடிந்தால் உயிரோடு திரும்பி வாருங்கள். அது மட்டுமல்ல... இந்த துலுக்கர்ளின் லவுட் ஸ்பீக்கர் அராஜகம் தாங்கமுடியாத அளவு சென்றுவிட்டது. தினமும் ஐந்து முறை விஷ ஊசி போடுவது போல் அல்லாகு அக்குபர் என்று உயிரை வாங்குகிறார்கள். இதை கேட்க நாதி கிடையாது இந்தியாவில். அதுவும் பாவம் காலை 5 மணிக்கு அலறுமே அல்லாகு அக்குபர் என்று.. ஐயோ கடவுளே தூங்கும் குழந்தைகள் எல்லாம் என்ன பாவம் செய்தது. ஔரங்கசீப்பை அன்று நம் நாட்டுக்குள் விளையாட விட்டு இன்றும் கைகட்டி வேடிக்கை பார்ப்பது போல் விட்டதினால், இன்று நம் குழந்தைகள் வேதனையை அனுபவிக்கின்றனர். இதற்கெல்லாம் என்று தான் முடிவு வருமோ தெரியவில்லை.

இந்த நவீன காலத்திலும் இரண்டு இலக்க எண்ணில் குழந்தைகளை பெற்று 5 பன்றி குட்டிகளோடு 500 பன்றி குட்டிகளை பெற்று சேர்க்கும் திறமை துலுக்கர்களிடம் மட்டுமே உண்டு என்றால் அது மிகையாகாது. மேலும் அடுத்த இனத்தில் இருக்கும் பெண்ணையோ பையனையோ கற்பழித்து விட்டு அவர்களையும் துலுக்கனாக மதம் மாற்றி அவர்களை திருமணம் செய்வது. இந்த இரண்டும் தான் உலகில் துலுக்கர்களின் வர்க்க எண்ணிக்கையை உயர்த்த கையாளப்பட்ட உத்திகளாகும்.

இதற்கு நேர் மாறானவர்கள் கிறிஸ்தவர்கள். எகானாமி பொருளாதாரம் என்கிற பெயரில் வாழ்வதை கடினமாக்கி விட்டார்கள். இதனால் கிறிஸ்தவர்கள் அதிகம் குழந்தை பெற்றுக் கொள்வதே இல்லை. இந்த நிலையில் எப்படி கிறிஸ்தவ வர்க்கத்தை உயர்த்துவது ? சிந்தித்து கொண்டிருந்த இவர்களின் கண்ணில் பட்டது தான் அப்பாவப்பட்ட புத்தமதம், இந்துமதம் மற்றும் பிற சிறுபான்மை மதத்தினர். சரி குழந்தை தான் பெற முடியாது ஆனால் இந்த பிற மதத்தினரை மாற்றலாமே என்று திட்டம் தீட்டி பல ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பிக்க பட்ட திட்டங்கள் Projects தான் கிறிஸ்தவ மதமாற்றம். இன்று ஆயிரக்கணக்கான திட்டங்கள் ஆசியாவில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. உலகிலேயே மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட நாடான சீனா இந்தியா மீது இவர்களுக்கு கொள்ளை ஆசை. பீரோவில் தங்க நகைகளை தேடும் திருடனுக்கு ஒரு கப்பல் நிமிர தங்க நகைகளை காட்டினால் எப்படி சந்தோசப்படுவானோ... அதே ஆசை சந்தோசம் தான் இந்த கிறிஸ்தவ திருடர்களுக்கு.

இவர்களின் இந்த போரின் தற்போதைய புது செய்தி (update)

http://news.yahoo.com/s/ap/20080330/ap_on_re_eu/vatican_muslims

யாகூவின் இந்த தகவலின்படி கிறிஸ்தவர்கள் உலகில் 33 சதவிகிதமாம். இன்னும் இவர்கள் ஆசியாவில் தம் ஆட்சியை பிடித்து கொண்டே வருகிறார்கள். தற்போது உலகில் வேறு எந்த மதத்தினரும் தம் இனத்தை பெருக்க வேண்டும் என்று ஊக்கத்தோடு செயல் பட வில்லை கிறிஸ்தவர்களைத் தவிர. அவர்களிடமே அதற்கு தேவையான பொருள், இதே தொழிலாக செய்யும் மனித குரங்கு படைகள் என்று பயங்கர infrastructure இருக்கிறது. வேறு எந்த மதத்தினரும் இவ்வாறு 'மதம்' பிடித்து அலையவில்லை.

இந்த செய்தி இந்தியாவில் உலகம் தெரியாமல் வாழும் அப்பாவி மக்களுக்கு எட்டுமா ? உலகம் தெரிந்தவர்கள் பிழைத்து கொள்வார்கள்.

★..............★..........†................★.........★

திருவள்ளுவர் ஓரினசேர்கை காமவெறியனாம்-ஏசு போதிக்கும் இந்தியவரலாறு

கிறிஸ்தவ மிஷனரிகளின் கெட்டிக்காரதனம் எப்படி ? இந்தியாவுக்குள் புகுந்து காலூன்றி, மெல்ல மெல்ல இந்திய வரலாற்றை அறிந்து, அதை எப்படி திரிக்கலாம் என்று ஆராய்ந்து, பாமரனும் நம்பிவிடும் வகையில் திரித்து எழுதியது மட்டுமல்லாது, பாதுகாப்பில்லாமல் திறந்து கிடக்கும் இந்தியாவில் ஒவ்வொரு கிராமமாக, ஊழியம் என்ற பெயரில் சென்று, நம்ப வைத்து, இந்திய இளைஞர்களிடமே இந்தியாவிற்கு நேரெதிரான போதனைகளை பரப்பி, அவர்களை இந்தியாவையே அழிக்க தயார் செய்து, ஏவியும் விட்டிருக்கிறார்கள் ? இது உலகமகா கெட்டிக்காரத்தனம் இல்லையா ? இதே போன்று நீங்கள் அமெரிக்காவிலோ இல்லை இங்கிலாந்திலோ இல்லை அரபியாவிலோ புகுந்து சாதித்துவிடுவீர்களா ? சவால். சரி அவர்கள் போதிக்கும் வரலாற்றுக்கு வருவோம்.

இந்திய கிறிஸ்தவர்கள் இந்தியாவில் வாழ்ந்தாலும் அவர்களுக்கு உண்மையான இந்திய வரலாறும் உலக வரலாறும் மறைக்கபட்டு கிறிஸ்தவத்திற்கு ஏற்றாற்போன்று திருத்தபட்ட வரலாற்றையே ஊட்டி வளர்த்திருக்கிறது ஏசுவின் கிறிஸ்தவமதம். உடலினுள் புகுந்த நச்சுக்கிருமிகள் எவ்வாறு உடல் இயக்கத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறதோ அதே செய்கைகளை தான் இந்த கிறிஸ்தவ தேவாலயங்கள் ஏசு பிரானின் தூண்டுதல் பேரில் செய்கிறார்கள். இந்த புதிய வரலாறு இந்திய கிறிஸ்தவ வரலாறு ஆகும். பல கிறிஸ்தவ நண்பர்களிடமும் பாதிரியாகளிடமும் கலந்து பேசி அவற்றில் கிட்டிய சிறு இந்திய கிறிஸ்தவ வரலாற்று துளிகளை இங்கே தருகிறேன். நீங்கள் உங்களுடைய கிறிஸ்தவ நண்பர்களிடம் ஆரோக்கியமாக வரலாறு பற்றி உரையாடியிருப்பீர்களானால் இந்த வரலாற்றை நீங்களும் கண்டிப்பாக கேட்டிருப்பீர்கள். இல்லையென்றால் நீங்களே முயற்சி செய்து பாருங்கள்.

1. ஒரு கிறிஸ்தவ பிரிவினர் தந்த வரலாற்றின் படி, திருக்குறளை எழுதியது திருவள்ளுவர் இல்லையாம். பல முட்டாள்கள் பல காலத்தில் எழுதி வைத்ததாம். அவற்றையெல்லாம் ஒன்றாக திரட்டும் பணியை மட்டுமே திருவள்ளுவர் செய்தாராம். இதனால் திருக்குறளின் இழிவுக்கு (நாம் பெருமை என்று கூறிக்கொள்கிறோமே) திருவள்ளுவர் காரணமில்லையாம்.

2. திருக்குறள் உலகப்புகழ் பெற்றதோ இல்லையோ பலர் திருவள்ளுவர் தங்கள் மதத்தை சேர்ந்தவர் என்று சொந்தம் கொண்டாடுகின்றனர். இதில் ஒரு கிறிஸ்தவ கும்பலும் அடக்கம். திருவள்ளுவர் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்று இந்த கிறிஸ்தவ கும்பல் சொந்தம் கொண்டாடுகிறது. இந்த திருக்குறளில் பெரிய உச்சக் கட்டம் எதுவென்றால், திருவள்ளுவர் பைபிளை பார்த்து காப்பியடித்து தான் பல குறள்கள் எழுதியிருக்கிறாராம்.

3. இன்னொரு கிறிஸ்தவ பிரிவினர் திருவள்ளுவர் ஓரினசேர்க்கையாளர் என்று கூறுகிறார்கள். இதற்கு இவர்கள் திருக்குறளில் காமத்துபாலில் உள்ள சில திருக்குறளையே எடுத்துகாட்டாக வைக்கின்றனர்.

4. அழுகிப் போய் வீசும் உடல் ஓர் நாள் சாம்பலாகும் என்ற சிந்தனையில் முற்றும் துறந்த சிவனடியார்கள் சமண பெண்களை விரும்பி கற்பழிக்க தவமிருந்தார்களாம். இவர்கள் இணைய தளத்தில் வெளியிட்ட இது போன்ற 'வரலாறு'களை அவர்கள் சங்கத்தினரே நீக்கிவிட்டனர் !! என்ன கொடுமை சாமி இது ?

5. ஔவையார் கடவுளின் அருளினால் கிழவியாகவில்லையாம். அவருக்கு திருமணமாகி கணவன் விட்டுவிட்டு ஓடிவிட்டானாம். அதன்பிறகு ஔவையார் கோவிலுக்கு நேர்ந்துவிட்ட பெண்ணாக சில வருடங்கள் பலருக்கு மனைவியாக இருந்தவராம். இவரின் இந்த உண்மையான வரலாறு மறைக்கபட்டிருக்கிறதாம். இதை பக்கத்திலிருந்து நேரிலேயே கண்ட கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவ தேவாலயத்தில் இன்றும் மணியடித்து கொண்டிருக்கின்றனராம்.

6. பாரதியார் இளம்வயதில் சில பெண்களை பலவந்தம் செய்திருக்கிறாராம். நீங்கள் எந்த நூலகத்துக்கு சென்று பாரதியாரின் வரலாற்றை படித்தாலும் இதைக் காணலாமாம்.

7. இந்தியாவில் 12 கொடூர தீமைகள் இருந்ததாம். சதி, தீண்டாமை போன்றவைகள் இவற்றில் அடக்கமாம். கிறிஸ்தவர்களின் முயற்சியினாலும், இயேசு கிறிஸ்துவின் கிருமையினாலும் தான் இந்த தீமைகளை முன்னின்று அழித்தார்களாம். இதனால் இந்த ஆக்க வேலைகள் கிறிஸ்தவர்கள் இந்தியாவிற்கு செய்த பல நன்மைகளில் முக்கியமான ஒன்றாம்.

8. இந்தியாவில் வாழ்ந்த முன்னோர்கள் மிகவும் கேவலமான முட்டாள்களாகவும் சடங்குகளை கடைப்பிடிப்பவர்களாகவும் வாழ்ந்தார்களாம். கிறிஸ்துவின் ஆசியினாலே இவர்கள் இன்று அறிவுச்சுடர் பெற்று உலக அரங்கில் முன்னேறி வருகிறார்களாம். இந்த பெருமையும் கிறிஸ்தவர்களையே சேருமாம். இயேசு கிறிஸ்துவின் அறிவுரையின் படியே இவர்கள் தங்களின் முட்டாள்தனங்களிலிருந்து மீண்டனராம்.

9. பிரேமானந்தா சாமியார் முதல் குட்டி சாமியார், திருட்டு சாமியார் என்று இந்த ரகப்பட்ட சாமியார்களெல்லாம் இந்து மத்தின் முன்னோடித் தலைவர்களாம். சில சாமியார் தலைவர்கள் ஓரின சேர்க்கையாளர்களாக இருக்கிறார்களாம். இவர்களின் செய்கைகளிலிருந்து இந்து மதத்தின் லட்சணங்களை அறிந்து கொள்ளலாமாம். இது தான் இந்தியா தன் சுயமுயற்சியினால் வளர்த்த சமுதாயமாம்.

10. இந்து மதத்தில் ஒரு சாமிக்கு இரண்டு பொண்டாட்டியாம். இன்னொரு சாமி திருடனாம். இன்னொரு சாமி ஆற்றில் குளிக்கும் பெண்களை மறைந்திருந்து பார்க்குமாம் (நல்ல வேளை.. அதோடு நிறுத்தி கொண்டார்கள்.. இன்னும் ஒரு படி மேலே போய் இந்த சாமி பல பெண்களை பலவந்தம் செய்தது என்று சொன்னாலும் ஆச்சர்யபடுவதற்கொன்றுமில்லை). இன்னொரு சாமி பல பெண்களிடம் சல்லாபம் செய்யுமாம். இப்படி பல கதைகள் உள்ளன.

11. ஆங்கிலேயர்கள் தான் இந்தியாவுக்கு முன்னேற்ற பாதைக்கு வழிவகுத்தாம். அவர்கள் நம் ஆற்றலை வெகுவாக வளர்த்து விட்டார்களாம். புனித அன்னை என்று அழைக்கபடும் தெரசா போன்று இன்னொரு பெண் உலகிலேயே இல்லையாம். இவர் இந்து மதத்தினரை மதித்து கோவிலுக்கு சென்று சிவனை வழிபட்டாராம். அவருக்கு பெருமையும் சேர்த்தாராம்.

12. உலகமே துன்பத்தினால் துவண்டு வழி தெரியாமல் திக்கி திணறிக் கொண்டிருந்ததாம். பைபிள் நுழைந்தவுடன் எல்லா இடத்திலும் சமாதானமும் அமைதியும் பொழிந்து வழிகிறதாம். தென் கொரியாவில் 300 ஆண்டுகளுக்கு முன்னர் கிறிஸ்தவர்கள் நுழைந்த பின் சமாதான் பயங்கரமாக நிலவுகிறதாம். ஒரு நண்பரின் கூற்றுபடி இன்று கொரியாவில் 98 சதவிகிதம் கிறிஸ்தவர்களாம்.

13. இன்னும் இந்திய வரலாற்றில் இடம் பெற்ற ஒவ்வொருவருக்கும் ஒரு கதை வைத்திருக்கிறார்கள். இந்திய கிறிஸ்தவ பாதிரியார்களே இந்திய வரலாறு பற்றி ஒரு புத்தகம் வெளியிட்டால் நன்றாக இருக்கும். இதெல்லாம் கிறிஸ்தவ மிஷினரிகளின் தலைவர்களின் வீட்டில் கண்டிப்பாக புத்தக வாயிலாக இருக்கும். இது அவர்கள் போதிக்கும் விஷ கடலில் இருந்து வெறும் ஒரு துளியே. காலம் விரைவே பதில் அளிக்கும்.

இந்த வரலாற்றை கேட்டால் உண்மையான வரலாறு நமக்கே மறந்துவிடும் போல் உள்ளது.

★..............★..........†................★.........★

இந்திய கிறிஸ்தவத்தையும் பாதிரியார்களையும் ஆட்டுவிப்பது யார் ?

கிறிஸ்தவர்கள் தாங்கள் சென்ற இடத்தில் எல்லாம் அங்கிருப்பவர்களின் பண்பாடு, கலாச்சாரம், மொழி, மதம், இனஅடையாளங்கள் முதலியனவற்றை அழித்து தங்களுடைய அடையாளங்களை (identity) புகுத்தியதாகவே பல்லாயிரமாண்டு வரலாறு கூறுகிறது. இது வரை கிறிஸ்தவர்கள் யாரையும் வாழ வைத்ததாக சரித்திரமே இல்லை. இப்படிப்பட்ட கொடூர குணமுடையவர்களின் சனிப்பார்வை இப்போது இந்தியாவின் மீது திரும்பியிருக்கிறது. இந்த கொள்கையை முதன்மையாக கொண்டு தற்போது பல்லாயிர கணக்கான மினிஸ்ட்ரிகள் தங்கள் கிளை அலுவலகங்களை இந்தியாவில் தொடங்கி இந்திய பாரம்பரியத்தை அழிக்கும் நாச வேலைகளை ஆரம்பித்துள்ளன. குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளிலிருந்து இந்த நாச திட்டத்திற்காக பல்லாயிரக்கணக்கார கோடி ரூபாய்களை இந்தியாவிற்கு வருடந்தோறும் வழங்கி வருகின்றன.

கிறிஸ்தவம் என்பது இந்தியாவைப் பொறுத்த வரையில் பல்லாயிரம் கோடி ரூபாய் புரளும் ஒரு நம்பிக்கை தொழிற்சாலை. அதுமட்டுமல்ல இது நாசகார தொழிற்சாலையும் கூட. இவ்வளவு பணம் புரளும் போது பாவம் இந்திய ஏழைகளுக்கு ஒரு ஜீஸஸ் என்ன எழுபது ஜீஸஸ் உயிர்த்தெழுவார் என்பதில் ஆச்சர்யமொன்றுமில்லை. தற்போது கிறிஸ்தவர்கள் கூறிவருவது கிறிஸ்தவத்தை எதிர்த்து உலகில் குரல் எழும் என்று புனிதமென்றழைக்கப்படும் வேதகாமத்தில் கூறியிருக்கிறதாம். இது போன்ற கொள்கைகளை உலகத்தாரிடம் திணித்தால் உலம் சினம் கொள்ளும் என்பது வேதகாமத்தை எழுதுபவர்களுக்கு தெரிந்திருக்காதா என்ன ? இந்த உண்மையை கூடவா இந்திய கிறிஸ்தவர்களால் உணரமுடியவில்லை ??

இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி 2006 ஆம் ஆண்டு மட்டும் 5000 கோடி ரூபாய்க்கு மேல் இந்தியாவில் உள்ள பல் வேறு நிறுவனங்கள் நிதி பெற்றுள்ளன. இதில் தமிழ்நாட்டுக்கு மட்டும் 1610 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யபட்டுள்ளது.

இதில் பெரும்பான்மையாக பணம் கொடுத்திருப்பது கிறிஸ்தவ அமைப்புகள்களே.
Gospel Fellowship Trust India, USA என்ற நிறுவனமே 230 கோடி ரூபாய் கொடுத்து முதலிடம் வகிப்பது. அதைத் தொடர்ந்து Gospel For Asia, USA, Plan International, UK, Foundation Vincent E Ferrer, Alicante, Spain, Christian Aid, UK, Foundation Vincent Ferrer, UK, என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. முழுப் பட்டியலையும் நீங்களே அரசாங்க தளத்தில் பார்த்துக் கொள்ளுங்கள்.

http://www.mha.nic.in/fcra/annual/ar2005-06.pdf

இங்கு இங்கிலாந்து வந்து பார்த்தால், கிறிஸ்தவ நிறுவனங்கள் பல அலுவலகங்களில் ஏழை குழந்தைகளுக்கு நிதி உதவி வேண்டும், பள்ளிக்கூடத்தில சுவர் கட்ட வேண்டும், தண்ணீர் வசதி வேண்டும் என்று கூறி டொனேஷன் வாங்குகிறார்கள். இந்த பணமெல்லாம் இந்தியாவில் கொடுக்கும் போது, கர்த்தர் கொடுக்கிறார், அவர் உங்களை மீட்கிறார் என்ற வாஞ்சனையோடு கொடுக்கிறார்கள். மனித நேயத்திற்கு பயன்பட வேண்டிய பணம் எப்படி பயன்படுகிறது என்று பாருங்கள். அது மட்டுமல்ல, இந்தியாவில் முதலில் கிறிஸ்தவர்களாக மாறுபவர்களுக்கு சில பண வசதிகள் செய்து தருகிறார்கள். பின்னர் தாங்களே பெருமையாக அழைத்து கொள்ளும் முழுவிசுவாசி ஆன பின்னர் 20 சதவிகிதத்திலிருந்து 80 சதவிகிதம் வரை காணிக்கையாக செலுத்த வேண்டும். எவ்வளவு கொடூரமாக தீட்டபட்ட திட்டங்கள் ?? கிறிஸ்துவில் இருந்தால் நீங்களே எவ்வளவு பணம் கொடுக்கிறீர்கள் என்பதை நீங்களே அறிவீர்கள். இந்த செயல்கள் எல்லாம் இந்திய தேசத்தின் நன்மைக்கு புரம்பானவை. இவை தேச துரோக செயல்கள் என்று அழைப்பதில் என்ன தவறு.

மொத்தத்தில் பல்லாயிரம் கோடி புரளும் இந்த நாசகார தொழிற்சாலை இந்தியாவின் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் அழிக்கும் என்பதில் ஐயமில்லை. கிறிஸ்தவ மயக்கத்தில் இருந்து தெளிந்து உண்மையா கொடூரமான உலகை தங்கள் மெய்யான கண்களால் காண்பார்களா இந்திய கிறிஸ்தவர்கள் ?

இவர்கள் உண்மையிலேயே இந்தியாவை காக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் ??

1. முதலி்ல் இந்தியாவை நாமே குறை சொல்வதை நிறுத்த வேண்டும். நாம் இந்தியாவிற்கு என்ன செய்திருக்கிறோம் என்று சிந்திக்க வேண்டும்.

2. தன்னம்பிக்கை கொள்ள வேண்டும். நம் கடமையினை நாம் செய்ய வேண்டும் என்று ஊக்கம் கொள்ள வேண்டும்.

3. கடவுள் என்பவர் எங்கோ இருக்கிறார். நாம் தான் நம் குடும்பத்தையும், நாட்டையும் பண்பாட்டையும் காக்கும் புதல்வர்கள் என்பதை உணர வேண்டும்.

4. கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு கொடுக்கும் பணத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். அப்படியே நிறைய பணம் இருந்தால் உதவும் கரங்கள் போன்ற மதம் சாரா அமைப்புகளுக்கு கொடுக்க வேண்டும். இல்லையேல் நேரடியாக ஏழைக்குழந்தைகளுக்கு செய்திட வேண்டும். முக்கியமாக அப்போது கர்த்தர் கொடுக்கிறார் போன்ற ஏமாற்று வசனங்கள் பேசக் கூடாது.

5. உங்கள் தாத்தா எழுதிய திருக்குறளைப் படித்து முடித்து விட்டீர்களா ? புனித வேதகாமம் என்று அவர்களே அழைத்து கொள்ளும் யாரோ அயல்நாட்டு பண்டையவர்கள் எழுதிய பைபிளை படிப்பதை நிறுத்தி விட்டு திருக்குறள், நன்னெறி, ஆத்திசூடி போன்ற இந்திய நூல்களை எடுத்து படிக்க வேண்டும்.

6. இந்தியா உயரவும், நம் பண்பாடு தழைக்கவும் நம் பண்பாட்டை மேற்கத்தியவர் அறியவும் ஆவன செய்ய வேண்டும். இதுவே முழு குறிக்கோளாக முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் இந்தியாவின் புதல்வர்கள் அல்லவா ?? உங்கள் தந்தைக்கு நீங்கள் பெருமை சேர்க்க வேண்டாமா ??

★..............★..........†................★.........★

சென்னை தமிழர் விரோத மாநாடும், முறியடிக்கப்பட்ட சதியும்

தமிழரின் அழியாப் பாரம்பரியமான இந்து சமயத்தின்மேல் கிறிஸ்துவ சாயம் பூசி நம்மையும், நம் மூதாதையர்களையும் சுய சிந்தனையற்றவர்களாக சித்தரிக்க அண்மையில் சென்னையில் ஒரு மாநாடு மூலம் சிலர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு, அந்த மாநாட்டின் இறுதி நாளிலேயே பலத்த அடி விழுந்தது. இம்மாநாட்டில் கலந்து கொண்ட சிலர் நமது தளத்தைத் தொடர்பு கொண்டு அளித்த தகவல்களின் அடிப்படையில் இது பற்றிய ஆதாரபூர்வமான குறிப்புகளைத் தொகுத்து அளிக்கிறோம்.

‘தமிழர் சமயம் : முதல் உலக மாநாடு’ என்கிற பெயரில் 2008 ஆகஸ்ட் 14-15-16 17 ஆகிய நாட்களில், சென்னையில் மயிலை கத்தோலிக்க பாஸ்டோரல் நிறுவனத்தில் நடத்தப்பட்ட ‘மாநாடு’ உண்மையில் ஒரு கிறிஸ்தவப் பிரச்சாரக் கூட்டம் ஆகும். தமிழ் அறிஞர்களுக்கு தமிழ் மொழி – பண்பாடு, அதன் தொன்மை ஆகியவற்றின் மீது இருக்கும் பற்றினை பயன்படுத்தி எவ்வாறு தமிழரின் சமய வாழ்க்கையை கிறிஸ்தவப்படுத்தலாம்; எப்படி தமிழரின் உயர்ந்த ஆன்மிக இலக்கியங்களை கிறிஸ்தவ பிரச்சாரத்துக்கு பயன்படுத்தலாம் என்பதே இந்த மாநாட்டின் உண்மையான உள்நோக்கமாக விளங்கியது எனலாம். எனவே இந்த மாநாடு உண்மையில் தமிழரின் மீது ரோம-கத்தோலிக்கத்தாலும் தமிழ்நாடு-மலேசியா-சிங்கப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள சில கிறிஸ்தவ மத மேன்மையாளர்களாலும் நடத்தப்படும் ஒரு ஆக்கிரமிப்பு முயற்சியே ஆகும்.

தமிழ் அறிஞர்களுக்கு ‘தமிழே உலகின் முதல் மொழி’ ‘உலகின் முதல் மனிதன் தமிழனே’ எனக் கூறிவிட்டால் உள்ளம் புளகாங்கிதம் அடைந்துவிடுகிறது. உடனே அவ்வாறு கூறுபவர்களின் ஏனைய கருத்துகளைக் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளவோ அல்லது அதனை எதிர்க்காமல் மௌனிக்கவோ தயாராகிவிடுகிறார்கள். உதாரணமாக, அங்கு வந்திருந்த ஒரு சில -கை விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய அளவிலேயே இருந்த- இந்துக்களான தமிழ் அறிஞர்களிடம் தனிப்பட்ட உரையாடலில் தெய்வநாயகத்தின் மையமான பிரச்சார கருத்தான ‘சைவமும் வைணவமும் புனித தாமஸ் கொண்டு வந்த கிறிஸ்தவத்தின் offshoot’ என தெளிவாகக் கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டிய போது அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்; தாங்கள் இதனை ஏற்கவே இல்லை என அடித்துக் கூறினர். ஆனால் இவர்கள் எவருக்கும் தமிழரின் ஆன்மிக பண்பாட்டின் மீது நடத்தப்படும் இந்த வெளிப்படையான ஆக்கிரமிப்பை மேடையில் கண்டிக்க அல்லது மறுக்கத் தோன்றவில்லை. அவையடக்கம் காரணமாகவும் மாநாடு நடத்துபவரின் மனத்தை நோகடிக்க அவர்கள் விரும்பாத காரணத்தினாலும் அவர்கள் அதனை செய்யவில்லை போலும்! இதனை அந்த மாநாட்டின் நடத்துனர்களாக இருந்த முனைவர். தெய்வநாயகம்-தேவகலா அணி மிகத் தந்திரமாகப் பயன்படுத்திக் கொண்டது.

இந்த மாநாடு உண்மையிலேயே தமிழர் சமயம்-பண்பாடு ஆகியவற்றினை உலகறிய செய்வதற்காக நடத்தப்படும் ஒரு உன்னதமான முயற்சி என்பதாக எண்ணினர் வேறு சில வெள்ளந்தியான தமிழ் அறிஞர்கள். அவர்கள் பொதுவாக அளித்த பாராட்டினை தெய்வநாயகமோ தேவகலாவோ அல்லது கத்தோலிக்க மதச்சபையோ ‘தோமா கொண்டுவந்த ஆதி கிறிஸ்தவத்தின் offshoot தான் வைணவமும் சைவமும்’ என்கிற தங்களின் நிலைப்பாட்டுக்கான ஆமோதிப்பாகக் காட்டத் தான் போகிறார்கள். ஆனனல் அதைப் போல நேர்மையற்ற, கயமையான செயல் பிறிதொன்று இருக்க முடியாது.

எதுவாயினும் இந்த மாநாட்டில் பேசப்பட்ட பல கருத்துகள் ஆதாரமற்றவை; அவை கிறிஸ்தவ மதப்பிரச்சாரத்துக்கு உலகமெங்கும் பயன்படுத்தப்படும் கருத்துகள்; சில கருத்துகள் அப்பட்டமான வெறுப்பியல் பிரச்சாரமாகவும் இருந்தன. வேறு சில கருத்துகள் சிறுதும் அறிவியல் தன்மையற்றவையாகவும் இனமேன்மைவாதக் கருத்துகளாகவும் இருந்தன. முக்கியமாக முனைவர் தெய்வநாயகத்தின் பல கருத்துகள் சிறிதும் வரலாற்று அடிப்படை அற்றவையாகவும் தவறானவையாகவும் இருந்தன என்பதுடன் அவையே அவரது கோட்பாட்டின் ஆதார தூண்களாகவும் விளங்கின என்பதும் குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில் இந்த மாநாட்டுக்கு வந்திருந்த சில இந்துக்கள் இந்த போலி பிரச்சாரத்தால் மிகவும் மனத்துயரடைந்து மாநாட்டின் மூன்றாள் நாள் (ஆகஸ்டு 16) தமிழ்இந்து.காம் இணையதளத்தை அணுகினர். அதற்கு முன்பே அவர்கள் எழுத்தாளர் ஜெயமோகன் அண்மையில் எழுதிய தமிழர்களுக்குச் சிந்திக்கச் சொல்லித்தந்த புனித தாமஸ் என்ற இதுபற்றிய கட்டுரையைப் பற்றியும் தேடி அறிந்து அதனைப் படித்திருந்தனர் என்பதும் தெரியவந்தது. பொதுஜன ஊடகங்களில் வராத முக்கியமான கருத்துக்களைக் கொண்டு செல்வதிலும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் இணையம் கொண்டிருக்கும் அபரிமிதமான சக்தி நமக்கு வியப்பூட்டியது!

ஒரு இந்துத் தமிழர் அக்கட்டுரையையும், அத்துடன் அந்த மாநாட்டு நிகழ்வுகளில் செய்யப்பட்ட சில தவறான அணுகுமுறைகளை எடுத்துக்காட்டும் ஒரு சிறு கட்டுரையும் இணைத்து பல பிரதிகள் எடுத்து அதனை அந்த மாநாட்டில் விநியோகிக்கப் போவதாகவும் நமக்குத் தெரிவித்தார். அவர் அசோக்நகர் அனுமான் கோவிலின் அறங்காவலரும், சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபருமான கணேசன் அய்யா அவர்கள்.

திரு. கணேசன் அய்யாவின் ஊக்கத்தையும், முனைப்பைக் கண்டு நாமும் பெரும் உற்சாகம் அடைந்தோம். அந்த மாநாட்டில் பேசப்பட்ட விஷயங்களைப் பற்றியும் அறிந்துகொண்டோம். உடனடியாக தமிழ் இந்து தளம், இந்த மாநாட்டில் கலந்து கொண்ட தமிழ் அறிஞர்களை நோக்கி சில ஆழமான கேள்விகளை எழுப்பும் முகமாக, போஸ்டர் வடிவில் சில display materials களையும் கணினியில் வடிவமைத்து அளித்தது. இந்த மாநாட்டில் கூறப்பட்ட கருத்துகளை ஆராய்ந்து ஒரே இரவில் கோர்க்கப்பட்ட இந்தத் தொகுப்பு இது குறித்த ஆய்வினை முன்னகர்த்த மிகவும் தேவையானது என்பது நமது தாழ்மையான எண்ணம். “பரிணாம அறிவியல் வெறும் ஊகமா? சம்ஸ்கிருத கல்வெட்டுகளின் காலம் என்ன? கடவுள் மனிதனாக வருவார் என்னும் கோட்பாடு கிறிஸ்துவுக்குப் பின்னர் தான் இந்தியாவுக்கு வந்தததா? தெய்வநாயகத்தின் சைவ நூல் மேற்கோள் மோசடி” – இவை உள்ளிட்ட மிக முக்கியமான விஷயங்கள் பற்றிய நம் தரப்பு வாதங்கள் அதில் இருந்தன.

மாநாட்டின் முடிவு நாளான ஞாயிறு அன்று நிகழ்வு காலை 9:30க்கு மேலேதான் ஆரம்பித்தது. திரு.கணேசன் அய்யா அவர்கள் மாநாடு தொடங்குவதற்கு முன்பாக தனது கட்டுரைப் பிரதிகளை விநியோகிக்க முடிவு செய்ததுடன், தாம் கொண்டுவந்திருந்த போஸ்டர்களைக் காட்டவும் மாநாட்டின் அதிகாரிகளில் ஒருவரான முனைவர் தேவகலாவிடம் அனுமதி கோரினார். ஆனால் தேவகலா அதற்கு ‘அங்கே கேட்டு முடிவு செய்ய வேண்டும் இங்கே கேட்டு முடிவு செய்ய வேண்டும்’ என்றும் கூறி தாமதித்துக்கொண்டிருந்தார். கணேசன் அய்யா அவர்கள் மாநாடு தொடங்குவதற்கு முன்பாகவே கட்டுரைப் பிரதிகளை விநியோகிக்க ஆரம்பித்தார்.

திரு.ஜெயமோகனின் கட்டுரை மாநாட்டுக்கு அழைக்கப்பட்டவர்களின் மனசாட்சியினுள் வேலென நுழைந்திருக்கக் கூடும் என்பதனை ஊகித்த முனைவர் தெய்வநாயகம், ஒரு ஆராய்ச்சியாளருக்கு தகுதியல்லாத, ஆனால் கிறிஸ்தவத்தின் ஒரு மூன்றாந்தர பிரச்சாரகனின் வார்த்தைகளைப் பயன்படுத்தி இந்த பிரதி விநியோகத்தை விமர்சனம் செய்தார். மதிப்பிற்குரிய கணேசன் அய்யா அவர்களை பெயர் குறிப்பிடாமல் ‘சைத்தானின் பிள்ளை’ என சொன்ன கொடுமையை என்னவென்பது! தமிழ்நாட்டில் அன்னிய மத ஏகாதிபத்தியத்துக்கு வேலை செய்யும் கைக்கூலிகள் சொந்த மண்ணின் பண்பாட்டை காப்பாற்ற ஒற்றை மனிதனாக வீரத்துடன் போராடிய அத்திருமகனாரை ‘சைத்தானின் பிள்ளை’ என வர்ணித்த அந்த கொடுஞ்செயல் ‘தமிழர் சமய மாநாடு’ எனும் போர்வையில் நடைபெற்ற அந்த கூட்டத்தில் அரங்கேறியது.

ஆனால் தமிழ் இந்து.காம் எழுப்பிய ஆணித்தரமான ஆதாரபூர்வமான கேள்விகளுக்கும், விளக்கங்களுக்கும் இந்த தெய்வநாயகம்-தேவகலா அணியினரால் பதிலளிக்கவோ, எதிர்வினை புரியவோ முடியவில்லை என்பதால், இந்தக் கேள்விகள் எழுப்பப்பட்டு அங்கிருந்த தமிழறிஞர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட விஷயத்தையே அங்கு வந்திருந்த அறிஞர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து மறைத்து விட்டனர். இதுதான் இந்த மாநாட்டினை நடத்தி சென்று கொண்டிருந்தோரின் ‘ஆராய்ச்சி நேர்மை’.

அந்தக் கேள்விகள், வாதங்கள் இங்கே (.pdf கோப்பு வடிவில்).
http://www.tamilhindu.com/wp-content/uploads/handout-by-tamilhindu-thomas-conference-aug08.pdf

இதன் முக்கியமான விளைவு என்ன? தெய்வநாயகம் மாநாட்டு மேடையில் தமது கருத்துகளுக்கும் கத்தோலிக்க சபைக்கும் தொடர்பில்லை என அறிவிக்க வேண்டியதாயிற்று. அதற்கு முந்தைய நாள் இருந்த துணிவும் வேகமும் வெளிப்படையான வெறுப்பியல் பிரச்சாரமும் விஷமத்தன தூண்டுதல்களும் இல்லமாலாயிற்று, மாநாட்டின் முழுக் கவனமும் இந்த மாநாடு சமய நல்லிணக்கத்துக்கு எதிரானது அல்ல என நிரூபிப்பதாக அமைய வேண்டியதாயிற்று.

தமிழர்களின் பண்பாட்டின் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு மௌனம் காக்காமல் எதிர்த்து குரல் எழுப்பி அய்யா வைகுண்டரும், பாரதியும், சுவாமி சித்பவானந்தரும் உருவாக்கிய பண்பாட்டு பாதுகாப்பு சமுதாய அக்கறை எனும் பாரம்பரியத்தில் தன்னையும் ஒரு சிறு சேது பந்தன அணிலாக இணைத்துக் கொண்டதில் தமிழ் இந்து.காம் பெருமை அடைகிறது.

துணிச்சலுடனும் பொறுமையுடனும் விவேகத்துடனும் தன்னை இழிவாக விளித்த தெய்வநாயகத்திடமே ‘நீங்கள் நீண்டகாலம் வாழ வேண்டும்’ என உண்மை தமிழருக்கே உரிய மனித நேய பண்பாட்டுடனும் செயல்பட்ட அய்யா கணேசன் அவர்களுக்கும், இம்முயற்சியில் அவருக்கும் உறுதுணையாக இருந்த மற்றவர்களுக்கும், தமிழ் இந்து.காம் தனது பணிவான வணக்கங்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது.






ஸ்ரீமத் பாகவதம் (தமிழ்)

  Srimad-Bhagavatam  1 Srimad-Bhagavatam   2 Srimad-Bhagavatam   3 Srimad-Bhagavatam    4 Srimad-Bhagavatam   5 Srimad-Bhagavatam   6 Srimad...